LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

சுதரிசன் மயக்கம்

அறுசீர் விருத்தம்

சுதரிசன் தொலைந்தான்! அன்னோன்
    கூத்திமார் இரண்டு பேரும்
    'எதற்கும்நீ அஞ்ச வேண்டாம்'
    என்றுபக் கத்தில் குந்தி
    சுதரிசன் புகழை யெல்லாம்
    சொல்லிடத் தொடங்கி னார்கள்.
    புதுத்தொல்லை யதனில் மங்கை
    புழுவாகத் துடிக்க லானாள்.

    அழகுள்ள ஆளாம் எங்கும்
    அவன்போலே அகப்ப டாராம்!
    ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும்
    ஒருநூரா யிரமும் உண்டாம்!
    ஒழுகுமாம் காதில் தேனாய்
    ஒருபாட்டுப் பாடி விட்டால்!
    எழுதினால் ஓவி யத்தை
    எல்லாரும் மயங்கு வாராம்!

    நடுப்பகல் உணவா யிற்று;
    நங்கைக்குக் கதை யுரைக்க
    எடுத்தனர் பேச்சை. நங்கை
    'தப்புவ தெவ்வா' றென்று
    துடித்தனள். 'எனக்குத் தூக்கம்
    வருகின்ற' தென்று கூறிப்
    படுத்தனள்; கண்கள் மூடிப்
    பகற்போதைக் கழித்து விட்டாள்.

    'பகலெலாம் கணவ ருக்குப்
    பலபல வேலை யுண்டு.
    முகங்காட்டிப் போவ தற்கும்
    முடியாதா இரவில்?' என்று
    நகம்பார்த்துத் தலைகு னிந்து
    நங்கையாள் நலிவாள்! அந்த
    அகம்கெட்ட மாதர் வந்தே
    'சாப்பிட அழைக்க லானார்.'

    உணவுண்டாள் நங்கை அங்கே
    ஒருபுறம் உட்கார்ந் திட்டாள்!
    முணுமுணு என்று பேசி
    இருந்திட்ட இருமா தர்கள்
    அணுகினார் நங்கை யண்டை
    அதனையும் பொறுத் திருந்தாள்!
    தணல்நிகர் சுதரி சன்சிங்க்
    தலைகண்டாள்; தளர்வு கொண்டாள்.

    எதிரினில் சுதரி சன்சிங்க்
    உட்கார்ந்தான்; 'என்ன சேதி?
    புதுமலர் முகமேன் வாடிப்
    போனது? சுப்பம் மாசொல்!
    குதித்தாடும் பெண்நீ சோர்ந்து
    குந்திக்கொண் டிருக்கின் றாயே?
    அதைஉரை' என்றான். நங்கை
    'அவர்எங்கே?' என்று கேட்டாள்.

    'திம்மனைச் சிங்கம் வந்தா
    விழுங்கிடும்? அச்சம் நீக்கிச்
    செம்மையாய் இருப்பாய்' என்றான்.
    இதற்குள்ளே தெருவை நோக்கி
    அம்மங்கை முருகி சென்றாள்
    அவள்பின்னே குப்பும் போனாள்.
    'உம்'என்றாள்; திகைத்தாள் நங்கை!
    சுதரிசன் உளம் மகிழ்ந்தே,

    'நங்கையே இதனைக் கேட்பாய்
    நானுன்றன் கணவ னுக்கே
    இங்குநல் லுத்தி யோகம்
    ஏற்பாடு செய்து தந்தேன்;
    பொங்கிடும் என்னா சைக்குப்
    புகலிடம் நீதான்; என்னைச்
    செங்கையால் தொடு; மறுத்தால்
    செத்துப்போ வதுமெய்' என்றான்.

    'நான்எதிர் பார்த்த வண்ணம்
    நடந்தது; நங்கை மாரும்
    யான்இங்குத் தனித்தி ருக்க
    ஏற்பாடு செய்து போனார்;
    ஏன்என்று கேட்பா ரில்லை
    இருக்கட்டும்' என்று வஞ்சி
    தேன்ஒத்த மொழியால் அந்தத்
    தீயன்பால் கூறு கின்றாள்:

    'கொண்டவர்க் குத்தி யோகம்
    கோட்டையில் வாங்கித் தந்தீர்;
    அண்டமே புரண்டிட் டாலும்
    அதனையான் மறக்க மாட்டேன்.
    அண்டையில் வந்துட் கார்ந்தீர்
    அடுக்காத நினைவு கொண்டீர்;
    வண்கையால் 'தொடு' மறுத்தால்
    சாவது மெய்யே என்றீர்.

    உலகில்நான் விரும்பும் பண்டம்
    ஒன்றுதான்; அந்தச் செம்மல்
    தலைமிசை ஆணை யிட்டுச்
    சாற்றுவேன்: எனது கற்பு
    நிலைகெட்ட பின்னர் இந்த
    நீணில வாழ்வை வேண்டேன்.
    மலையும்தூ ளாகும் நல்ல
    மானிகள் உளந் துடித்தால்!

    கொண்டஎண் ணத்தை மாற்றிக்
    கொள்ளுவீர்; நரியும் யானைக்
    கண்டத்தை விரும்பும்; கைக்கு
    வராவிடில் மறந்து வாழும்!
    கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக்
    கவர்ந்திடும், அந்நெஞ் சத்தைக்
    கொண்டொரு நிலையிற் சேர்ப்பார்
    குறைவிலா அறிவு வாய்ந்தோர்.'

    என்றனள். சுதரி சன்சிங்க்
    ஏதொன்றும் சொல்லா னாகி
    'நன்றுநீ சொன்னாய் பெண்ணே!
    நான்உன்றன் உளம்சோ தித்தேன்;
    இன்றிங்கு நடந்த வற்றைத்
    திம்மன்பால் இயம்ப வேண்டாம்.'
    என்றனன் கெஞ்சி னான்;'போய்
    வருகின்றேன்' என்றெ ழுந்தான்.

    இருளினில் நடந்து போனான்
    எரிமலைப் பெருமூச் சோடு!
    இருளினை உளமாய்க் கொண்ட
    இருமாதர் உள்ளே வந்தார்.
    அருளினால் கூறு கின்றாள்
    சுப்பம்மா அம்மா தர்க்கே:
    'ஒருபோதும் இனிநீர் இந்த
    உயர்விலாச் செயல்செய் யாதீர்.

    ஆயிரம் வந்திட் டாலும்
    அடாதது செயாதீர்; ஆவி
    போயினும் தீயார் நட்பிற்
    பொருந்துதல் வேண்டாம்; உம்மைத்
    தாயினும் நல்லார் என்று
    தான்நினைத் திருந்தேன். தாழ்வை
    வாயினால் சொல்லிக் காட்ட
    வரவில்லை என்னே என்னே!

    கண்ணகி என்னும் இந்தத்
    தமிழ்நாட்டின் கண்ணே போன்ற
    பெண்கதை கேட்டி ருப்பீர்;
    அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப்
    பெண்களே நீரும்! அந்தப்
    பெரும்பண்பே உமக்கும் வேண்டும்;
    எண்ணமேன் இவ்வா றானீர்?
    திருந்துங்கள்' என்று சொன்னாள்.

    'யாம்என்ன செய்து விட்டோம்?
    எம்மிடம் நீதான் என்ன
    தீமையைக் கண்டு விட்டாய்?
    தெரிவிப்பாய்; தெருவிற் சென்றோம்
    சாமிக்குத் தெரியும் எங்கள்
    தன்மை.நீ அறிய மாட்டாய்!
    ஏமுரு கியேஇ தென்ன
    வெட்கக்கே டெ'ன்றாள் குப்பு.

    'சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள்
    தெருவிற்குச் சென்றால் என்ன?
    பங்கமோ இதுதான்? மேலும்
    பயந்துவிட் டாயா? சிங்கு
    தங்கமா யிற்றே! சிங்கு
    தறுதலை யல்ல பெண்ணே.
    எங்களை இகழ்ந்த தென்ன?'
    என்றனள் முருகி என்பாள்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.