LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நளவெண்பா

சுயம்வர காண்டம்

நிடதநாட்டுச் சிறப்பு

14. காமர் கயல்புரழக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் றளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.

மாவிந்தநகர்ச் சிறப்பு

15, கோதை மடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீத களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்த மென்பதோர்

ஞானக் கலைவாழ் நகர்.

16. நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்று மகிழ்கமழு மென்பரால் - தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையா ரைம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

17. வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

18. தெரிவனநூ லென்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவு மிரவே யிகழ்ந்தெவரும்
கல்லா தனவுங் கரவு.

19. மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகுந் தடந்தோளான் - காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.

அந்நாட்டு மன்னன் நளன் சிறப்பு

20. ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாருஞ் செல்வப் பெடைவண்டோ - டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்குந் தண்தார்
அருகுடையான் வெண்குடையா னாங்கு.

21. சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ வுலகு.

நளன் பூஞ்சோலை சென்றமை

22. வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடிச் சோலை புக.

23. வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர - நின்ற
தளவேனல் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்த தெதிர்.

24. தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தா லன்ன பொழில்.

சோலையில் அன்னப்புள் வந்ததும், அதனை மங்கையர் பற்றி அரசன்முன் வைத்தலும்

25. நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே யாங்கு.

26. பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலவேறி மென்கரும்பைக் - கோதிக்
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா வென்றான் பெயர்ந்து.

27. நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தன்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.

28. அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே - அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.

29. அஞ்சல் மடவனமே உன்றன் னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்.

30. செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் - வெய்ய
அடுமாற்ற மில்லா அரசன்சொற் கேட்டுத்
தடுமாற்றந் தீர்ந்ததே தான்.


அன்னம் தமயந்தியின் சிறப்புரைத்தமை

31. திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு.

32. அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை யென்றா னனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து.

33. எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை - உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.

34. நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

35. மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை யடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.

36. என்றும் நுடங்கு மிடையென்ப வேழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.

37. செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் - வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.

நளன் தமயந்திபால் காதல் கொண்டது

38. அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ - டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.

39. பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமள்தான்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கட் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்பாத
நடைகற்பான் வந்தடைந்தே யாம்.

40. இற்றது நெஞ்ச மெழுந்த திருங்காதல்
அற்றது மான மழிந்ததுநாண் - மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.

அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறித் தமயந்திபால் சென்றது

41. வீமன் திருமடந்தை மென்முலையை யுன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம
நெடுங்குடையா யென்றுரைத்து நீங்கியதே யன்னம்
ஒடுங்கிடையாள் தன்பா லுயர்ந்து.

நளனது விரக தாபம்

42. இவ்வளவிற் செல்லுங்கொ லிவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காத லியம்புங்கொல் - இவ்வளவில்
மீளுங்கொ லென்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை யரசு.

43. சேவல் குயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல்கேட்
டாவி யுருகி யழிந்திட்டான் - பூவின்
இடையன்னஞ் செங்கா லிளவன்னஞ் சொன்ன
நடையன்னந் தன்பா னயந்து.

44. அன்ன முரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தான் தோகை விரித்தாட - முன்னதனைக்
கண்டாற்றா துள்ளங் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கிஃ தன்றோ குணம்.

45. வாரணியுங் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர்
கொடியா ரெனச்செங்கை கூப்பினான நெஞ்சம்
துடியா நெடிதுயிரரச் சோர்ந்து.

தமயந்தி அன்னத்தை நோக்கி வினாவியது

46. மன்னன் விடுத்த வடிவிற் றிகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி யருகணைய - நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்னாடல் சொல்லென்றா ளீங்கு.

அன்னம் நளன் சிறப்புரைத்தல்

47. செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் - மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்த னுனக்கு.

48. அறங்கிடந்த நெஞ்சு மருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்டோ ள் வலியும் - நிலங்கிடந்த
செங்கண்மா லல்லனேல் தேர்வேந்த ரொப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு.

தமயந்தி நளன்பால் கொண்ட காதற்றிறம்

49. புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர வொளியிழந்த - வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன்.

50. மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்ன முரைக்க வகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினா ளென்செய்வாள் மற்று.

51. வாவி யுறையும் மடவனமே யென்னுடைய
ஆவி யுவந்தளித்தா யாதியால் - காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி யென்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து.

தோழியர் தமயந்தியின் நிலை வேறுபாட்டைத் தாய்க்குரைக்க அவள் அரசனுக்கு அறிவித்தது


52. கொற்றவன்தன் தேவிக்குக் கோமகந்தன் தோழியர்கள்
உற்ற தறியா வுளநடுங்கிப் - பொற்றொடிக்கு
வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக்
கூறினாள் பெற்ற கொடி.

வீமராசன் தமயந்தி மாளிகைக்கு வந்தது

53. கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப - நெருங்கு
பரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை.

தமயந்தி தந்தையை வணங்கியது

54. கோதை சுமந்த கொடிபோ லிடைநுடங்கத்
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள் - மீதெல்லாம்
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்
பூந்தாரம் மெல்லோதிப் பொன்.

வீமன் தமயந்திக்குச் சுயம்வரம் ஏற்படுத்தியது

55. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்
நீரரும்பத் தன்பேதை நின்றாளைப் - பாராக்
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம்.

56. மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென் றியம்பினான் - பைங்கமுகின்
கூந்தன்மேற் கங்கைக் கொழுந்எதாடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு.

சுயம்வரத்திற்கு அரசர்களின் வருகை

57. மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்
தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி - நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழா மென்னப் பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம்.

58. புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமு மினிதுறைந்தார் - தெள்ளரிக்கண்
பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்
கோமகளைத் தம்மனத்தே கொண்டு.

நளன் அன்னம் திரும்பிவரக் கண்டது
59. வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேற் செவிவைத்து மோகச் - சுழிமேல்தா
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர.

60. முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கு மற்றாரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டா னன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.

நளனது வினாவும் அன்னத்தின் மறுமொழியும்

61. அன்னக் குலத்தி னரசே அழிகின்ற
என்னுயிரை மீள வெனக்களித்தாய் - முன்னுரைத்த
தேமொழிக்குத் தீதிலவே யென்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலா னெடுத்து.

62. கொற்றவன்ற னேவலினாற் போயக் குலக்கொடிபால்
உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும் - முற்றும்
மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்
கழிந்ததே யுள்ள அறிவு.

நளனது காதல் நோய் நிலை

63. கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி - மீட்டும்
குழியிற் படுகரிபோற் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர்போற் சாய்ந்து.

வீமராசன் விடுத்த தூதர் நளனிடம் வந்தது

64. கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப
ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார் - போதில்
பெடையொடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயி லகம்.

65. காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்
தேவலிற்போ யீதென் றியம்புதலும் - மாவில்
பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து.

நளன் தேரூர்ந்து குண்டினபுரம் சென்றது

66. கெட்ட சிறுமருங்குற் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை யேரடித்த - கட்டி
கரையத்தே னூறுங் கடல்நாட னூர்க்கு
விரையத்தே ரூரென்றான் வேந்து.

67. சடைச்செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு பின்னாகக்
கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த
வல்லியரும் பொற்றாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர்.

நாரதமுனிவர் வானுலகு சென்றது

68. நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
கொற்றத் தனியாழ்க் குலமுனிவன் - உற்றடைந்தான்
தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும்
வானாடுங் காத்தான் மருங்கு.

இந்திரன் நாரதரை வினாவியது

69. வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரு மிலராலென் றையுற்று - நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து.

நாரதர், தமயந்தி சுயம்வரத்தையும் அவளது எழிற் சிறப்பையும் கூறியது

70. வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சயம்வரத்து - மாமன்னர்
போயினா ரென்றான் புரந்தரற்குப் பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன்.

71. அழகு சுமந்திள்த்த ஆகத்தாள் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.

அச்சுயம்வரத்திற்கு இந்திரன் முதலிய தேவர்கள் புறப்பட்டது

72. மால்வரையை வச்சிரத்தா லீர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார் - சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து.

நளனைத் தேவர்கள் வழியில் கண்டது

73. பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்தனைத் தேடுவான் - முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்
பெருவானிற் றேவர் பெரிது.

இந்திரன் நளனைத் தமயந்திபால் தூதுசெல்ல வேண்டியது

74. காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்
ஏவற் றொழிலுக் கிசையென்றான் - ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினான் மற்றதனை
இன்னதென றோரா திசைந்து.

75. செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால்
தூதாக வென்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றானக் கோ.

76. தேவர் பணிதலைமேற் செல்லுந் திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும் - பாவில்
குழல்போல நின்றுழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல்போலுந் தண்குடையான் நெஞ்சு.

77. ஆவ துரைத்தா யதுவே தலைநின்றேன்
தேவர்கோ னேயத் திருநகரிற் - காவல்
கடக்குமா றென்னென்றான் காமநீ ராழி
அடக்குமா றுள்ளத் தவன்.

78. வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையைப்
போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான் - யாருமுனைக்
காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்
பாணாறுந் தாரானைப் பார்த்து.

நளன் தூது சென்றதும், தமயந்தியைக் கண்டதும்

79. இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தா லன்ன தெருவும் - வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடற் கோமாந்தன் நாடு.

80. தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு
மதுநோக்குந் தாரானும் வாள்நுதலுந் தம்மில்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது.

நளனைக் கண்ட தமயந்தி நிலை
81. நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை யகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்ந்த கதவு.

82. உய்ஞ்சு கரையேற வொட்டுங்கொ லொண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே
நீண்டதோ வங்ஙனே யிங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்ன னழகு.

83. மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை யிடையே புகுந்து
தடுத்ததே நாணாந் தறி.

தமயந்தி நளனை யாவனென வினாவியது

84. காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்

யாவனோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ
உள்ளவா சொல்லென்றா ளூசற் குழைமீது
வெள்ளவாள் நீர்சோர விட்டு.

நளனது மறுமொழி

85. தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்
நீரா லவித்துக் கொடுநின்று - வாராத
பொன்னாட ரேவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன்.

86. என்னுரையை யாதென் றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகங் காக்கும் புரவலனை - மென்மாலை
சூட்டுவா யென்றான் தொடையில் தேன்தும்பிக்கே
ஊட்டுவா னெல்லா முரைத்து.

தமயந்தி கூறிய உறுதிமொழி

87. இயமரநின் றார்ப்ப இனவளைநின் றேங்க
வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்
நின்பொருட்டா லென்று நினைகென்றா நீள்குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து.

88. போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்
செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்

எழுந்தருள்க வென்றா ளெடுத்து.

89. வானவர்கோ னேவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்
கண்டா ருவப்பக் கலந்து.

நளனுக்கு அத்தேவர்கள் அளித்த வரங்கள்

90. விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணங்கின்
வன்மொழியுந் தேவர் மனமகிழத் தான்மொழிந்த
மென்மொழியுஞ் சென்றுரைத்தான் மீண்டு.

91. அங்கி யமுதம்நீ ரம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்
பெற்றா யெனவருண ஆகலண்டன் தருமன்
மற்றோனு மீந்தார் வரம்.

தமயந்தியின் துயர நிலை

92. தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தா ளுயிர்த்தா ளணிவதன மெல்லாம்
வியர்த்தா ளுரைமறந்தாள் வீழ்ந்து.

93. உள்ளம்போய் நாண்போ யுரைபோய் வரிநெடுங்கண்

வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தா ளுயிர்.

94. பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலு மவ்வழியே - பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தா ளணியாழின்
ஓசைபோற் சொல்லா ளுயிர்த்து.

சூரியன் அத்தமித்தல்

95. வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே
செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு.

96. மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்
பாயிரு ளென்னும் படாம்வாங்கிச் - சேய்நின்

றறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை.

மாலைப்பொழுதின் வரவு

97. மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை யந்திப் பொழுது.

98. புற்கென்றா ரந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்
டடைகின்ற வேந்தர்க்கு மாண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போ லின்று.

பிறையின் தோற்றம்

99. பைந்தொடியா ளாவி பருகுவான் நிற்கின்ற

அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமே லாரழலைப்
பெய்வா னமைந்த பிறை.

100. கூட்டுமைபோற் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேற் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு.

தமயந்தியின் துயர நிலை

101. அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவின் - மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர்.

102. கொப்புளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுது
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

103. கானுந் தடங்காவுங் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெலாங் கோதண்ட சாலை
பொடியாடிக் கொன்றதெல்லாம் பொய்.

104. கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்
கொடிதிரா வென்னுங் குழையுந் தழல்போல்
நெடிதிரா வாய்புலர நின்று.

105. வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை யனலிற் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.

106. ஊழி பலவோ ரிரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி
துயிலாதோ வென்னுஞ் சுடர்மதியங் கான்ற
வெயிலா லுடலுருகா வீழ்ந்து.


107. ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவா யடங்காத் துயர்.

108. ஈர மதியே! இளநிலவே யிங்ஙமேன
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி யுனக்குப் புலரா
இரவளித்தா னல்லனோ இன்று.

109. தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று.

110. மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தி
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம்.

இருளின் மிகுதியும் தமயந்தியின் துயரமும்

111. அள்ளிக் கொளலா யடையத் திரண்டொன்றாய்க்
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா.

112. ஊக்கிய சொல்ல ரொலிக்குந் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க
இடையாமங் காவலர்கள் போந்தா ரிருளில்
புடைவா யிருள்புடைத்தாற் போன்று.

113. சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்
பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதே
ஓவாது முந்நீ ருலகு.

114. ஊன்தின் றுவகையா லுள்ள வுயிர்புறம்பே
தோன்றுங் கழுதுந் துயின்றதே - தான்தன்
உரைசோரச் சோர வுடல்சோர வாயின்
இரைசோரக் கைசோர நின்று.

115. அன்றிலொருகண் துயின் றொருகண் ணார்வத்தால்
இன்றுணைமேல் வைத்துறங்கு மென்னுஞ்சொல் - இன்று
தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணீ ரவட்கு.

116. ஏழுலகுஞ் சூழிருளா யென்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயர மேதென் றறிகிலேன் - பாழி
வரையோ எனுநெடுந்தோண் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்?

117. கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்
உருவிப் புகுந்ததா லூதை - பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்ட வுயிர்க்கு.

118. எழுந்திருக்கு மேமாந்து பூமாந் தவிசின்
விழுந்திருக்குந் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்
தூணோடு சேர்க்குந் துணையேது மில்லாதே
நாணோடு நின்றழியும் நைந்து.

119. விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போற் சோரும் - புரிகுழலைத்
தாங்குந் தளருந் தழலே நெடிதுயிர்க்கும்
ஏங்குந் துயரோ டிருந்து.

120. மயங்குந் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே யுலாவும் - வயங்கிழைபோய்ச்
சோருந் துயிலுந் துயிலாக் கருநெடுங்கண்
நீருங் கடைசோர நின்று.

121. உடைய மிடுக்கெல்லா மென்மேல் ஓச்சி
விடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்த மின்னருளோ
ஏகாத தென்னோ இரா.

122. விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடுங் கங்குற் - பொழுதிடையே
நீருயிர்க்குங் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கு முண்டோ அரண்.

பொழுது புலர்ந்தமை

123. பூசுரர்தங் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்
காசினியுந் தாமரையுங் கண்விழிப்ப - வாசம்
அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே யற்றைப் பொழுது.

சூரியோதயம்

124. வில்லி கணையிழப்ப வெண்மதியஞ் சீரிழப்பத்
தொல்லை யிருள்கிழியத் தோன்றினான் - வல்லி
மணமாலை வேட்டிடுதோள் வாளரசர் முன்னே
குணவாயிற் செங்கதிரோன் குன்று.

125. முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசுங் கலந்து.

நளன் சுயம்வர மண்டபம் வந்தமை

126. மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம் - முன்றில்
குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்
சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய்.

தமயந்தி சுயம்வர மண்டபம் வந்தது

127. நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தற்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அங்கு.

128. பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்
கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து.

129. மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று.

130. வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டு
பூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டு
ஐவாளி நாணின்பால் இட்டு.

தோழி தமயந்திக்கு, அங்கு வந்திருந்த அரசர்கள்
ஒவ்வொருவரையும் குறிபிட்டுரைத்தல்

131. மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்று
தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்
தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து.

சோழ மன்னன்

132. பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவுந் திருநாடன் - பொன்னின்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

பாண்டிய மன்னர்

133. போர்வாய் வடிவேலாற் போழப் படாதோரும்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் - பார்வாய்ப்
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்
திரித்தகோ விங்கிருந்த சேய்.

சேர மன்னன்

134. வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்
குன்றருவி பாயுங் குடநாடன் - நின்றபுகழ்
மாதே யிவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்
மீதே சிலையுயர்த்த வேந்து.

குரு நாட்டரசன்

135. தெரியில் யிவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன்.

மத்திர நாட்டரசன்

136. தேமருதார்க் காளை யிவன்கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்
பத்திரத்தா லேற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன்.

மச்ச நாட்டரசன்

137. அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்
வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்
பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்
மச்சத்தார் கோமான் மகன்.

அவந்தி நாட்டரசன்

138. வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த
பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணா
தருங்கடா நிற்கு மவந்திநா டாளும்
இருங்கடா யானை இவன்.

பாஞ்சால மன்னன்

139. விடக்கதிர்வேற் காளை யிவன்கண்டாய் மீனின்
தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டின் - மடற்கமுகின்
செந்தோடு பீறத்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடு பாஞ்சாலர் மன்.

கோசல மன்னன்

140. அன்னந் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெ லரிவார் சினையாமை - வன்முதுகில்
கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சலநாடன்
தேனிருந்த சொல்லாயிச் சேய்.

மகத நாட்டரசன்

141. புண்டரிகந் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல்
வண்டிரியுந் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்
போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயிச் சேய்.

அங்க நாட்டரசன்

142. கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவழக் கோடிடறித்
தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்

தந்தோ வெனவெடுக்கு மங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயிச் சேய்.

கலிங்கர் கோன்

143. ஦த்ள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.

கேகயர் கோன்

144. அங்கை வரிவளையா யாழித் திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய் - கங்கையிடைச்
சேல்குளிக்குங் கேகயர்கோன் றெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து.

காந்தார வேந்தன்

145. மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடிமீது
தனேகு மன்னந் தனிக்கயிற்றில் - போநீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன்.

சிந்து நாட்டரசன்

146. அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்
பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்குந் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன்.

தேவர்கள் நளனுருவில் இருக்கத் தமயந்தி கண்டு தியங்கியது

147. காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணநின்று
ஊசலா டுற்றா ளுளம்.

148. பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்து
மற்றேவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நள்னுருவாப் போந்து.

தமயந்தியின் சூளுரை

149. மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்
மன்னவனைத் தன்மனத்தே கொண்டு.

தமயந்தி நளனை அறிந்தமை

150. கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.

தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியது

151. விண்ணரச ரெல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலங் களிகூர - மண்ணரசர்
வன்மாலைதம் மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன்.

மற்ற அரசர்களின் ஏமாற்ற நிலை

152. திண்டோ ள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டாரைக்
கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது.

நளன் தமயந்தியுடன் சென்றமை

153. மல்லல் மறுகின் மடநா குடனாகச்
செல்லும் மழவிடைபோற் செம்மாந்து - மெல்லியலாள்
பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன்.

தேவர்கள், கலி எதிர்வரக் கண்டது

154. வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர் - வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறியி லாக்கும்
இருங்கலியைக் கண்டா ரெதிர்.

இந்திரன் கலியின் வரவு வினாவியதும், கலியின் மறுமொழியும்

155. ஈங்குவர வென்னென் றிமையவர்தங் கோன்வினவத்
தீங்கு தருகலியுஞ் செப்பினான் - நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான்.

156. மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்
கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடைய
உள்ளக் கருத்தை யொழித்தே குதியென்றான்
வெள்ளைத் தனியானை வேந்து.
157. விண்ணரசர் நிற்க வெறித்தேன் மணமாலை
மண்ணரசற் கீந்த மடமாதின் - எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்தற்க்குங் கீழ்மை

கொடுக்கின்றே னென்றான் கொதித்து.

158. வாய்மையுஞ் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பு மற்றவற்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தா னாங்கு.

நளனைக் கெடுக்கக் கலி துவாபரனைத் துணைவேண்டியது

159. செருக்கதிர்வேற் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்க
உடனாக என்றா னுடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு.

சூரியோதயம்

160. வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்

தீயடங்க ஏறினான் றேர்.

தமயந்திக்குச் செய்த மணக்கோலம்

161. இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசே இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண்.

நளதமயந்தியர் திருமணம்

162. கணிமொழிந்த நாளிற் கடிமணமுஞ் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்
குற்றேவல் செய்யக் கொழும்பொன் னறைபுக்கார்
மற்றேவரும் ஒவ்வார் மகிழ்ந்து.

நளதமயந்தியர் கூடிமகிழ்ந்தமை

163. செந்திருவின் கொங்கையினுந் தேர்வேந்த னாகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்
நஞ்சுந் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சுந் தொடுத்தா னவன்.

164. ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றிப் - பொருவெம்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று.

165. குழைமேலுங் கோமா னுயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து.

166. வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்
ஈர விளவண்ட லிட்டதே -நேர்பொருத
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்
ஓராறு பாய வுடைந்து.

167. கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கையற்க ணோடிச் செவிதடவ - அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்

விளைபூசற் கொல்யானை வேந்து.

168. தையல் தளிர்க்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய
மணந்தான் முடிந்ததற்பின் வாணுதலுந் தானும்
புணர்ந்தான் நெடுங்காலம் புக்கு.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.