இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் உள்ள ஆனந்தபவன் உணவக மாடியில் 31.12.2017 மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது. சிங்கப்பூரில் உள்ள கங்கைகொண்டான் கழகமும், கவிமாலை இலக்கிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் கவிமாலை மா. அன்பழகன் வரவேற்புரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினைச் சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் வெளியிட, சிங்கப்பூர் ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா முதற்படியினைப் பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளைப் பொறியாளர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன், திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஆவணப்படத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து அறிமுகம் செய்தார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் படப்பிடிப்பு அனுபவங்களையும், ஆவணப்படத்தின் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிஞர் தியாக.இரமேஷ், கவிஞர் தங்க. வேல்முருகன், எழுத்தாளர் இலியாஸ், வழக்கறிஞர் கலாமோகன், பேராசிரியர் ஆ.இரா. சிவக்குமாரன், எழுத்தாளர் சங்கத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிஞர் சீர்காழி செல்வராசு உள்ளிட்ட படைப்பாளர்களும், பல்வேறு தமிழமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அதிகமாகக் கலந்துகொண்டனர்.
|