1) அந்தமிழ் : அம் + தமிழ் = அழகிய தமிழ்
2) அருந்தமிழ் : அருமை + தமிழ் =அருமைபாடுடைய தமிழ்
3) அழகுதமிழ் : எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்
4) அமுதத்தமிழ் : அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்
5) அணித்தமிழ் : அணிநலன்கள் அமைந்த தமிழ்,தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்
6) அன்னைத்தமிழ் : நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக விளங்கும் தமிழ்
7) இசைத்தமிழ் : முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)
8) இயற்றமிழ் : முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது
9) இன்றமிழ் : இனிக்கும் தமிழ் (ஒலிக்க,உரைக்க, சிந்திக்க,செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)
10) இன்பத் தமிழ் : இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு,கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.
11) எந்தமிழ் : எம் + தமிழ் (கால்டுவெல்,போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)
12) உகக்குந்தமிழ் : மகிழ்ச்சியளிக்கும் தமிழ் 13) ஒண்டமிழ் : ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)
14) கனித்தமிழ் : கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்
15) கற்கண்டுத்தமிழ் : கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல,அடர்ந்து செறிந்த நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்
16) கன்னித் தமிழ் : எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்
17) சங்கத்தமிழ் : மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்
18) சுடர்தமிழ் : அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்
19) சுவைத்தமிழ் : சொற்சுவை,பொருட்சுவை, கலைச்சுவை,கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது
20) செந்தமிழ் : செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது(செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)
21) செழுந்தமிழ் : செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்
22) தனித்தமிழ் : தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்
23) தண்டமிழ் : தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது
24) தாய்த்தமிழ் : நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக மூலமாக விளங்கும் தமிழ்
25) தீந்தமிழ் : (தேன் > தேம் > தீம்)இனிமை நிறைந்த தமிழ்
26) தெய்வத்தமிழ் : தெய்வத்தன்மை வாய்ந்தது
27) தேன்தமிழ் : நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்
28) பசுந்தமிழ் : பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்
29) பைந்தமிழ் : பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)
30) பழந்தமிழ் : பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்
31) பாற்றமிழ் : பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது
32) பாகுதமிழ் : வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது
33) நற்றமிழ் : நன்மை + தமிழ் – இனிய,எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது
34) நாடகத்தமிழ் : முத்தமிழுள் ஒன்று –நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது
35) மாத்தமிழ் : மா – பெரிய –பெருமைமிக்க தமிழ் (மங்கலப்பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)
36) முத்தமிழ் : இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்
37) வண்டமிழ் : வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)
38) வளர்தமிழ் : காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்
|