கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பேய் படங்களின் ராஜ்ஜியம் தான் நடந்துக் கொண்டிருந்தது. காஞ்சனா, அரண்மனை, டார்லிங், டிமாண்டி காலனி, காஞ்சனா 2, அரண்மனை 2 ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக பேய் படங்களின் எண்ணிக்கை கோடம்பாக்கத்தில் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் பல முன்னணி நடிகர்கள் கூட பேய் படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனால் வாரத்துக்கு ஒரு பேய்ப்படமாவது ரிலீஸ் ஆகி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஹாரர் படம் அல்லாத வேறு கதை அம்சம் கொண்ட படம் வெற்றியடைந்தால்தான் பேய்ப்பட சீசன் மாறி வேறு டிரெண்ட் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்திற்கு கிடைத்த வெற்றி கோடம்பாக்கத்தின் கவனத்தை சென்ட்டிமெண்ட் பக்கம் கொஞ்சம் திருப்பி இருக்கிறது. அம்மா, மகன் சென்ட்டிமெண்ட்டை வைத்து எடுக்கப்பட்ட பிச்சைக்காரன் படம் இயக்குநர் சசிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது. பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மேலும் பல இயக்குநர்கள் சென்ட்டிமெண்ட் கதையை கையில் எடுக்கத் தொடங்கி இருப்பதாக அண்மை தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இதற்கிடையில், சில தினங்களுக்கு முன் வெளிவந்த தோழா படமும் சென்ட்டிமெண்ட் சினிமாதான். எஜமானனுக்கும், ஊழியனுக்கும் இடையிலான உறவைச் சொல்கிற தோழா படமும் வெற்றியடைந்திருக்கிறது. இன்னுமொரு சென்ட்டிமெண்ட் படம் வெற்றி அடையும் பட்சத்தில், கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பேய் பட ராஜ்ஜியம் முடிவுக்கு வரும் என நம்பலாம்.
|