செம்மொழி என்பது என்ன? முதலில் அதை விளக்கி விடுவோம். classical language என்று மேல் நாட்டினர் கருதுவது, புராதன கிரேக்க, லத்தீன் மொழிகளை மட்டுமே. இதனுடன் ஒரு சிலர் சமஸ்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற மொழிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் சொல்லித் தருகிறார்கள். தமிழும் இவ்வரிசையில் செம்மொழிதான் என்பதில் சிகாகோ, பர்க்லி, பென்சில்வேனியா போன்ற பல்கலைக்கழகர்களுக்கும், விஷயம் தெரிந்தவர்களுக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. பெரும்பாலும் இந்தியத் துணைக் கண்டத்திலிருப்பவர்களுக்குத்தான் இம்மொழியின் பழமையை உணர்த்த வேண்டியிருக்கிறது. மொழியியலாளர்களுக்கு மட்டும் தெரிந்ததை ஏனையோருக்கும் தெரியப்படுத்துவதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது.
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப் பட்டதால், பல பல்கலைக்கழகங்கள் தமிழையும் தங்கள் மொழியியல் சார்ந்த பாடங்களிலும் ஆராய்ச்சிகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் என்ன என்ன கவனிப்பார்கள்?
தமிழினத்தின் கலாச்சார வேர்களை அவர்கள் ஆராய்வார்கள். நவீன மொழிகளின் குறிப்பாக திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புகளுக்கும், வாக்கிய அமைப்புகளுக்கும் செம்மொழியில் அடையாளங்களைத் தேடுவார்கள். வேர்ச் சொற்களை ஆராய்வார்கள். அந்தச் சொற்கள் எப்படி நவீன இந்திய, உலக மொழிகளில் குறிப்பாக திராவிட மொழிகளில் பரவின; மாறின என்பதைப் பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும். செம்மொழியாகத் தமிழைப் படிப்பவர்களுக்கு, மற்ற மொழிகளில் அவர்களின் திறமை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை ஆராய்வார்கள். செம்மொழி இலக்கியங்களையும், இலக்கணங்களையும், அதன் கலைகளையும், பண்பாட்டையும் உன்னிப்பாகக் கவனிக்கும்போது பல புதிய உண்மைகள் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும்.
உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் ஐந்து வகை மன்றங்களில் இந்திரவிழாவெடுத்த காதையில் வெள்ளிடை மன்றம் என்ற ஒன்றின் வருணனை வருகிறது. நம்மை வியக்க வைக்கிறது. புகார் நகருக்கு வரும் புதியவர்கள் பல இடங்களில் தங்கள் தலைச் சுமையை இறக்கி, பெயர் ஊர் எல்லாம் குறிப்பிட்டு சரக்குப் பொதிகளை விட்டுவைத்து, எந்தவித பாதுகாப்பும் இன்றி ஊர் சுற்றப் போய்விடுவார்களாம். அவைகளை யாராவது கவர்ந்து செல்ல முயன்றால், ‘திருடன்… திருடன்…’ என்று கூவி, நான்கு காதம் வரை கயிற்றால் அவர்களைச் சுண்டி எழுப்பும் பூதம் ஒன்று சதுக்கத்தில் இருப்பதாகச் செய்தி உள்ளது. இதை நவீன கார்த் திருடர்கள் வாகனத்தின் மேல் கை வைத்தால் ஊளையிட்டு ஊரைக் கூட்டும் burglar alarm முடன் ஒப்பிடலாம். இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் உள்ள நவீன செய்திகள் உன்னிப்பாக ஆராயப்படும். அந்த நாகரிகத்தின் பழக்க வழக்கங்களை ஆராயும் போது நம் இன்றைய வழக்கங்களின் பின்னனி தெரியவரும்.
ஒரு மொழியை செம்மொழி என்பதற்கு என்ன தகுதி வேண்டும்?
குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டாவது பழசாக இருக்க வேண்டும். இங்கிலிஷ், இந்தி எல்லாம் அடிபட்டுப் போய்விடும். கலாச்சார இலக்கியத் தொடர்ச்சி இருக்க வேண்டும். தமிழுக்குக் கூடுதல் சிறப்பு — இரண்டாயிரம் ஆண்டு பழமையான நம் இலக்கியத்தின் சில வரிகள் இன்றைய அன்றாடத் தமிழிலும், அரசியல் மேடைகளிலும், சினிமாப் பாடல்களிலும் ஒலிக்கும் அளவுக்குத் தொடர்ச்சி இருப்பது.
(உயிர்மை வெளியீடான ‘தமிழ் அன்றும் இன்றும்’ என்ற புத்தகத்தில் இருந்து).
சுஜாதா இன்று இருந்திருந்தால் நிச்சயம் ஹார்வார்ட் தமிழ் இருக்கையை ஆதரித்திருப்பார்.
|