|
|||||
கல்லூரிகள் விடுமுறை: மாணவர்கள் போராட்டம், இனி அவ்வளவுதானா? |
|||||
சர்வதேச போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை அறிவிக்க வேண்டும்; தமிழகத்தில் இருந்து இலங்கைத் தூதரகத்தை வெளியேற்றவேண்டும்; ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்; இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; ஆகிய கோரிக்கைகளோடு தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை லயோலா கல்லூரியின் எட்டு மாணவர்கள் கடந்த 8–ந் தேதியன்று காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கிய பிறகு இந்தப் போராட்டம் வலுவடைய ஆரம்பித்தது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மைகளை ஆங்காங்கே மாணவர்கள் எரித்தனர். பல இடங்களில் ரெயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட்டார்கள். சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் 27 மாணவர்கள்; புரசைவாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் 20 மாணவர்கள்; அடையாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் 11 மாணவர்கள்; செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் 21 மாணவர்கள்; மற்றும் தமிழகமெங்கும் பல கல்லூரிகளிலும் மாணவர்கள் இதேபோல 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பல மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. வரும் 18–ந் தேதி திங்கள் முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் பல கல்லூரிகளின் மாணவ–மாணவிகள் அறிவித்து உள்ளனர். ஆனால், இந்தப்போராட்ட முயற்சிகளை நீர்த்துப் போகச் செய்ய சென்ற ஆட்சிக் காலத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி என்ன செய்தாரோ, அதையே இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் செய்யத் தொடங்கியிருக்கிறார். சென்னை பாரிமுனை அரசு சட்டக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை; அதைத் தொடர்ந்து, அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நேற்று மாலை திடீரென காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு; விடுதிகளில் தங்கி இருக்கும் அனைத்து மாணவன், மாணவியர்களும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு; கல்லூரிகளில் தற்போது நடந்து வருகின்ற மாதிரித் தேர்வுகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு; என தமிழக அரசு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து, போராட்டங்களை முடிக்க முயற்சிக்கிறது. விடுதி மாணவ–மாணவிகள் நேற்று மாலை 5 மணியளவில் மிகவும் சிரமத்துடன் தங்களுடைய உடைமைகளையும், புத்தகங்களையும் அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறினார்கள். |
|||||
by MAYIL on 15 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|