ஜல்லிக்கட்டில் கவனம் ஈர்த்த யோகதர்ஷினி
பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. வீரம் போற்றும் இந்த தமிழரின் மஞ்சுவிரட்டு விழாவில் கவனம் பெற்றுள்ளார் யோகதர்ஷினி என்ற பெண்.
யோகதர்ஷினி விவசாயம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை மற்றும் சகோதரரைப் போன்று தானும் வாடிவாசலில் மாடவிழ்த்து வருகிறார். பதினோராம் வகுப்பு படிக்கும் யோகதர்ஷினியின் காளை மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடி காளையானது. அப்போது அவருக்கு ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அது தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார். கோவை செட்டிப்பாளையம் ஜல்லிக்கட்டில் இவரது காளை துள்ளிக் குதித்து ஓடியது. இதனால் அவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசினை பெருமிதத்தோடு பெற்றுக்கொண்டார் யோகதர்ஷினி.
ஒரு பெண்ணாக வாடிவாசலில் மாடவிழ்ப்பதும், ஆறுதல் பரிசு தனக்குத் தேவையில்லை,என் காளை பிடி காளையாகாமல் வென்ற பரிசே பெருமை என்ற இந்தப் பெண்ணின் வீர மனப்பான்மை தமிழரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
|