மறைந்தார் மூத்த சித்த மருத்துவர் மற்றும் மூலிகைமணி இதழாசிரியர் க.வேங்கடேசன் க.வேங்கடேசன் அவர்கள் வட ஆர்க்காடு பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழரின் தனித்துவ மருத்துவ அடையாளமான சித்த மருத்துவத்திற்கென தன் வாழ்நாளை அர்ப்பணித்து அதற்கான அங்கீகாரத்தை வலியுறுத்தி நிலைநாட்டியவர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்துள்ளார்.பிறகு 'தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வுக் கையேடுகள் தனித்துவமிக்க கருத்துக்கள் நிறைந்தவை.தற்போதும் மருத்துவர்களுக்கு உதவியாக உள்ளவை.
மூலிகைமணி என்ற இதழின் மூலம் தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தினை பற்றிய அரிய கருத்துக்களை எடுத்துரைத்து தெளிவுபடுத்தியவர். ஆயுர்வேத மருத்துவத்தோடு தொடர்புடைய ஒன்றாகக் கருதப்பட்ட சித்த மருத்துவ முறையினை அது தமிழரின் தனித்துவம் மிக்க மருத்துவ முறை என்று மத்திய அரசிடம் எடுத்துரைத்து நிரூபித்தவர்.சித்த மருத்துவம் தமிழரின் தனி அடையாளம் மிக்க மருத்துவமாக மீட்டெடுக்கபட்டதில் இவருடைய பங்களிப்பு முக்கியமானதாகும்.
2007ஆம் ஆண்டு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்ட போது நிலவேம்பு குடிநீரை அரசிடம் தெரிவித்து அறிமுகம் செய்தவர். 'எய்ட்ஸ் நோய்க்கு சித்த மருத்துவம்'என்ற மாநாட்டினை இம்ப்காப்ஸ் நிறுவனம் மூலம் நடத்தியுள்ளார். அரசுக்கு சித்த மருத்துவ ஆலோசனைகளை தகுந்த வேலைகளில் வழங்கி வந்தவர். தன் வாழ்நாளில் சித்த மருத்துவத்தினை மூச்சாகக் கொண்டு செயற்பட்டு தன் சிறந்த பங்களிப்பினை சமூகத்திற்கு வழங்கிய சித்த மருத்துவர் க.வேங்கடேசன் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார்.
|