விளையாட்டு வீரர்களுக்கான 3 % இட ஒதுக்கீடு சிலம்பம் கற்றவர்க்கும் உரியதாகிறது, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழக அரசின் பணியிடங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பக் கலையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிலம்பம் சிறந்த முறையில் கற்று, மாநில, தேசிய அளவில் திறனை வெளிப்படுத்தியவர் இட ஒதுக்கீட்டினை பெற உள்ளனர்.இதற்கான அரசாணை தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.
சிலம்பம் என்பது தமிழ் மண்ணில் பிறந்த, தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டாகும். இதனை கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இப்பொழுது சிலம்பம் தமிழ் மக்களால் பல பகுதிகளில் ஆர்வத்துடன் கற்பிக்கப்பட்டும்,கற்கப்பட்டும் வருகிறது. இது தமிழரின் சிறந்த தற்காப்புக் கலையாகும். சிலம்பாட்டம், சிலம்பொலியாட்டம் எனவும் இதனைக் கூறுவர். கோயில் திருவிழாக்கள் மற்றும் பல முக்கிய தமிழர் நிகழ்வுகளில் சிலம்பாட்டம் தவறாது நடைபெற்று வருகிறது. தமிழரின் இப்பாரம்பரிய கலைக்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
|