அன்னை தமிழில் அர்ச்சனை தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு
தமிழர் கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை சத்தம் கேட்கும் எனும் செய்தி தமிழரிடையே புது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான அறிவிப்பு பலகையை வெளியிட்டு இருக்கிறார் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி. சேகர்பாபு அவர்கள் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று கூறியிருந்தார். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது."அன்னை தமிழில் அர்ச்சனை" என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 47 பெரிய கோவில்களில் தமிழ்மொழியில் அர்ச்சனைகள் தொடங்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 6 அன்று தமிழில் முதல் அர்ச்சனை கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்குகிறது.
இத்திட்டம் தமிழர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இது குறித்து அமைச்சர் பி.சேகர் பாபு அவர்கள் தனது கீச்சக பக்கத்தில் (ட்விட்டர்)'முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் திருக்கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை"என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான அரசாணையின்படி, பயிற்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு புரட்சி வழி சிந்தனையாகவே பார்க்கப்பட்டு, தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
|