மாவளி- மறந்துபோன தமிழர் விளையாட்டு
மாவளி சுற்றுதல் என்பது மறைந்து போன தமிழர் விளையாட்டாக உள்ளது. சங்க இலக்கியங்களான நற்றிணை,பரிபாடல் புறநானூறு போன்றவற்றில் கார்த்திகை தீபத் திருவிழா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மையான பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். ஒளி வடிவில் இறைவனை வணங்கும் பெருவிழாவே இத்திருவிழாவாகும்.
இத்திருக்கார்த்திகை தீப நாளில் மாவளி சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். சொக்கப்பனை எரித்து சாம்பலை வயலில் தூவி விடுவார்கள். பெரும்பாலும் தற்போது இவ்விளையாட்டு மறைந்தே போய்விட்டது. ஆண் பனை மரத்திலிருந்து காய்ந்த பனங்குலைகளை பறித்து நன்றாக காயவைத்து தீயிலிட்டு கரியாக்கி விடுவார்கள். பிறகு அக்கரியை சிறு துணியில் அல்லது கோணியில் சுற்றி சிறுசிறு உருளைகளாக்கி அதை பனை மட்டையில் வைத்து நீண்ட கயிறுடன் சேர்த்து கட்டி விடுவார்கள். உருளையின் நடுவே சிறிய நெருப்புத் துண்டை வைத்து ஊதி நெருப்பு பொறி வந்தவுடன் அதனை சுற்றி விளையாடுவார்கள். தமிழர்களால் அறவே மறக்கப்பட்டு விட்ட இவ்விளையாட்டினை நினைவுகூர்ந்து நிலைநிறுத்த இவ்வழா நாட்களில் உறுதி கொள்வோம்.
|