LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

தமிழச்சியின் கத்தி - பகுதி 1

                   தமிழச்சியின் கத்தி - பகுதி 1

 


1. சுதரிசன் சிங்க் துடுக்கு


அகவல்


 

 
தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.

புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!



2. சுதரிசன் சூழ்ச்சி


எண்சீர் விருத்தம்


 

 

 
சுதரிசன்சிங்க் திம்மனிடம் பேசு கின்றான்;
தோகைமேல் அவன்உளத்தைச் செலுத்து கின்றான்.
எதையோதான் பேசுகின்றான் சுப்பம் மாமேல்
ஏகியதன் நெஞ்சத்தை மீட்டா னில்லை!
இதையறியான் திம்மன்ஒரு கவட மில்லான்;
இளித்தவா யால்"உம்உம்" எனக்கேட் கின்றான்!
கதைநடுவில் சுதரிசன்சிங்க் தண்ணீர் கேட்பான்;
கனிஇதழாள் வரமகிழ்வான்; போனால் நைவான்!

உளம்பூத்த சுதரிசனின் ஆசைப் பூவும்
ஒருநொடியில் பிஞ்சாகிக் காயும் ஆகித்
தளதளத்த கனியாகிப் போன தாலே
தாங்காத நிலையடைந்தான். சூழ்ச்சி ஒன்றை
மளமளென நடத்தஒரு திட்டம் போட்டான்;
'வாஇங்கே திம்மாநீ விரைவிற் சென்று
குளத்தெதிரில் மரத்தினிலே கட்டி வைத்த
குதிரையினைப் பார்த்துவா' என்று சொன்னான்.

'விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த
விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன்; சாவா
மருந்தேனும் வந்தவர்கள் பசித் திருக்க
வாயில்இடான் தமிழன்;இது பழமை தொட்டே
இருந்துவரும் பண்பாகும். எனினும் வந்தோன்
எவன்அவனை ஏன்நம்ப வேண்டும்' என்று
துரும்பேனும் நினையாத தாலே இந்நாள்
தூய்தமிழன் துயருற்றான்! வந்தோர் வாழ்ந்தார்!

'குதிரைகண்டு வருகின்றேன்' என்று திம்மன்
குதித்துநடந் தான்!சென்றான்; சுதரி சன்சிங்க்
முதிராத பழத்துக்குக் காத்தி ருந்து
முதிர்ந்தவுடன் சிறகடிக்கும் பறவை யைப்போல்
அதிராத மொழியாலே அதிரும் ஆசை
அளவற்றுப் போனதோர் நிலைமை யாலே
'இதுகேட்பாய் சுப்பம்மா சும்மா வாநீ
ஏதுக்கு நாணுகின்றாய்' என்று சொன்னான்.

'ஏன்'என்று வந்துநின்றாள். 'சுப்பம் மாநீ
இச்சிறிய ஊரினிலே இருக்கின் றாயே
நானிருக்கும் செஞ்சிக்கு வருகின் றாயா?
நகைகிடைக்கும் நல்லநல்ல ஆடை யுண்டு.
மான்அங்கே திரிவதுண்டு மயில்கள் ஆடும்
மகிழ்ச்சியினை முடியாது சொல்வ தற்கே;
கானத்தில் வள்ளிபோல் தனியாய் இங்கே
கடுந்துன்பம் அடைகின்றாய்' என்று சொன்னான்.

'இல்லையே! நான்வேல னோடு தானே
இருக்கின்றேன் உளமகிழ்ச்சி யாக' என்று
சொல்லினாள்; சுதரிசனின் வஞ்சம் கண்டாள்;
துயரத்தை வௌிக்காட்டிக் கொள்ள வில்லை;
இல்லத்தின் எதிரினிலே சிறிது தூரம்
எட்டிப்போய் நின்றபடி 'போனார் இன்னும்
வல்லை' என்று முணுமுணுத்தாள். சுதரி சன்சிங்க்
வந்தவழி யேசென்றான் தோழ னோடே!

'சுப்பம்மா வுக்கிழைத்த தீமை தன்னைச்
சுப்பம்மா திம்மனிடம் சொல்லி விட்டால்
தப்புவந்து நேர்ந்துவிடும்; கொண்ட நோக்கம்
சாயாதே' எனஎண்ணிச் சுதரி சன்சிங்க்
அப்போதே எதிர்ப்பட்ட திம்ம னின்பால்
அதைமறைக்கச் சிலசொற்கள் சொல்லு கின்றான்:
'அப்பாநீ இங்கிருந்து துன்ப முற்றாய்.
அங்கேவந் தால்உனக்குச் சிப்பாய் வேலை

தரும்வண்ணம் மன்னரிடம் சொல்வேன்; மன்னர்
தட்டாமல் என்பேச்சை ஒப்புக் கொள்வார்.
திரும்புகின்ற பக்கமெலாம் காட்டு மேடு
சிற்றூரில் வாழ்வதிலே பெருமை இல்லை;
விருந்தாக்கிப் போட்டஉன்னை மறக்க மாட்டேன்
வீட்டினிலே சுப்பம்மா தனிமை நன்றோ?
கரும்புவிளை கொல்லைக்குக் காவல் வேண்டும்.
காட்டாற்றின் ஓட்டத்தில் மான்நிற் காதே.

இளமங்கை உன்மனைவி நல்ல பெண்தான்
என்றாலும் தனியாக இருத்தல் தீது!
'குளக்கரைக்குப் போ'என்றேன் நீயும் போனாய்
கோதையொடு தனியாக நாங்கள் தங்க
உளம்சம்ம தித்ததா? வந்தோம் உன்பால்!
உனக்குவௌி வேலைவந்தால் போக வேண்டும்.
இளக்கார மாய்ப்பேசும் ஊர்பெண் ணென்றால்
உரைக்கவா வேண்டும்?நீ உணர்ந்தி ருப்பாய்.

ஒருமணிநே ரம்பழகி னாலும் நல்லார்
உலகம்அழிந் தாலும்மறந் திடுவ தில்லை.
பருகினேன் உன்வீட்டுப் பசும்பால் தன்னைப்
பழிநினைக்க முடியுமா? திம்மா உன்னை
ஒருநாளும் மறப்பதில்லை. செஞ்சிக் கேநான்
உனைக்கூட்டிப் போவ'தென முடிவு செய்தேன்.
வருவாய்நீ! சிப்பாய்என் றாக்கி உன்னை
மறுதிங்கள் சுபேதாராய்ச் செய்வேன் உண்மை.

இரண்டுநா ளில்வருவேன் உன்க ருத்தை
இன்னதென்று சொல்லிவிட வேண்டும். செஞ்சி
வருவதிலே உனக்குமிக நன்மை உண்டு!
வரவழைத்த எனக்குமொரு பேரு முண்டு!
கருதாதே நம்நட்பைப் புதிய தென்று!
கடலுக்குள் ஆழத்தில் மூழ்கி விட்டேன்;
பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை!
பிறகென்ன? வரட்டுமா? என்றான்; சென்றான்.



3. திம்மன் பூரிப்பு


தென்பாங்கு-கண்ணிகள்


 

 

 
'நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு
நாமென்ன நூறுசெல விட்டோம்?
சொற்போக்கில் வந்தவிருந் தாளி - அவன்
சூதற்ற நல்லஉளம் கொண்டோன்;
பற்காட்டிக் கெஞ்சவில்லை நாமும் - நம்
பங்கில்அவன் நல்லஉள்ளம் வைத்தான்.
புற்காட்டில் நாளும்உழைத் தோமே - செஞ்சி
போய்அலுவல் நான்புரிய வேண்டும்.

என்றுபல திம்மன்உரைத் திட்டான் - அவன்
இன்பமனை யாளும்உரைக் கின்றாள்:
'தென்னைஇளந் தோப்புமுதி ராதா? - நம்
தெற்குவௌிப் புன்செய்விளை யாதா?
சின்னஎரு மைவிலைக்கு விற்றால் - கையில்
சேரும்பணம் ஏர்அடிக்கப் போதும்.
என்னஇருந் தாலும்சுபே தாரை - நான்
என்வரைக்கும் நம்பமுடி யாது.

நம்குடிக்கு நாம்தலைமை கொள்வோம் - கெட்ட
நாய்ப்பிழைப்பில் ஆயிரம்வந் தாலும்
பங்கமென்று நாமும்அறி வோமே - இதில்
பற்றுவைக்க ஞாயமில்லை' என்றாள்.
'தங்கமயி லேஇதனைக் கேட்பாய் - என்சொல்
தட்டிநடக் காதிருக்க வேண்டும்.
பொங்குதடி நெஞ்சில்எனக் காசை - செஞ்சிப்
பொட்டலில் கவாத்துசெய்வ தற்கே!

தின்றதனை நாடொறுமே தின்றால் - நல்ல
சீனியும் கசக்குமடி பெண்ணே.
தென்னையையும் குத்தகைக்கு விட்டுப் - புன்
செய்தனையும் குத்தகைக்கு விட்டுப்
பின்னும் உள்ள காலிகன்று விற்று - நல்ல
பெட்டையையும் சேவலையும் விற்றுச்
சின்னதொரு வீட்டினையும் விற்று - நல்ல
செஞ்சிக்குடி ஆவமடி' என்றான்.

நாளைஇங்கு நல்லுசுபே தாரும் - வந்து
நம்மிடத்தில் தங்குவதி னாலே
காளைஒன்றை விற்றுவரு கின்றேன் - உன்
கைந்நிறையக் காசுதரு கின்றேன்.
வேளையொடு சோறுசமைப் பாயே - அந்த
வெள்ளரிப்பிஞ் சைப்பொரிக்க வேண்டும்;
காளிமுத்துத் தோட்டத்தினில் பாகல் - உண்டு
கட்டிவெல்லம் இட்டுவை குழம்பு!

கார்மிளகு நீர்இறக்கி வைப்பாய் - நல்ல 
கட்டித்தயிர் பாலினில் துவைப்பாய்;
மோரெடுத்துக் காயமிட்டுத் தாளி - நல்ல
மொச்சைஅவ ரைப்பொரியல் வேண்டும்.
சீருடைய தாகிய தென்பாங்கு - கறி
செய்துவிடு வாய்இவைகள் போதும்.
நேரில்வட பாங்கும்மிக வேண்டும் - நல்ல
நீள்செவிவெள் ளாட்டுக்கறி ஆக்கு.

பாண்டியனின் வாளையொத்த வாளை - மீன்
பக்குவம் கெடாதுவறுப் பாயே.
தூண்டிலில் வரால்பிடித்து விற்பார் - பெருந்
தூணைஒத்த தாய்இரண்டு வாங்கு;
வேண்டியதைத் தின்னட்டும் சுபேதார்' - என்று
வெள்ளைமனத் திம்மன்உரைத் திட்டான்.
தாண்டிநடந் தார்இரண்டு பேரும் - உண்ணத்
தக்கபொருள் அத்தனையும் சேர்க்க!



4. சுதரிசன் நினைவு


எண்சீர் விருத்தம்


 

 

 
செஞ்சிக்குச் சென்றிருந்த சுதரி சன்சிங்க்
செஞ்சியிலே தன்உடலும் வளவ னூரில்
வஞ்சியிடம் நினைவுமாய் இருந்தான். அன்று
மலைக்கோட்டை காத்துவரும் சிப்பாய் மாரைக்
கொஞ்சமுமே தூங்காமல் விடியு மட்டும்
குதிரைமேல் திரிந்துமேற் பார்வை பார்க்கும்
நஞ்சான வேலையிலே மாட்டிக் கொண்டான்!
நள்ளிரவில் சுதரிசன்சிங்க் தென்பால் வந்தான்.

'தெற்குவா சல்காப்போன் எவன்காண்' என்று
செப்பினான் சுதரிசன்சிங்க். 'ரஞ்சித்' என்று
நிற்கும்சிப் பாய்உரைத்தான். சுதரி சன்சிங்க்
'நீதானா ரஞ்சித்சிங்க்! கேட்பா யப்பா.
முற்றிலுமே அவள்நினைவால் நலிந்தே னப்பா
அன்னவளை மறப்பதற்கு முடியாதப்பா.
விற்புருவ அம்புவிழி பாய்ந்த தோஎன் 
விலாப்புறத்தில் தானப்பா; செத்தே னப்பா.

அப்படியோர் மங்கையினைப் பார்த்த தில்லை.
நானுந்தான் ஆனபல்லூர் சுற்றி யுள்ளேன்!
ஒப்படியென் றால்அவளோ ஒப்ப மாட்டாள்.
உருப்படியை இவ்விடத்தில் கொண்டு வந்து
கைப்பிடியில் வைத்துவிட்டால் என்க ருத்துக்
கைகூடும். பொழுதுவிடிந் ததும்நா னங்கே
எப்படியும் போய்ச்சேர வேண்டும்' என்றான்
இன்னும்அவன் கூறுகின்றான் அவளைப் பற்றி; 



5. அவன் பொய்யுரை


பஃறொடை வெண்பா


 

 

 
'என்மீதில் ஆசைஅவட் கில்லா மலும்இல்லை;
என்மீதில் ஆசையே இல்லா தவள்போலே
ஏன்நடந்தாள் என்றுகேள்; என்னை இன்னானென்று
தான்அறிவ தற்குள்தன் னைக்காட்டிக் கொள்வாளா?
மட்டுப் படுத்தினாள் நெஞ்சை! வளர்காதல்
கட்டுப் படுத்தினேன் நானும் கடைசிவரை!
அன்னவளின் நெஞ்சத்தின் ஆழத்தை என்சொல்வேன்?
என்மீதில் ஆசையே இல்லாதவள் போலும்
வீட்டுக்கா ரன்மேல் விருப்பமுடை யாள்போலும்
காட்ட நடந்துபோய்க் கண்ணால் வழிபார்த்து
நெஞ்சத்தை மட்டும்என் நேயத்தில் வைத்தாளே!
வஞ்சி திறமை வரைதல் எளிதா?
குறுநகைப்பும் கொஞ்சும் கடைநோக்கும் கூட்டி
உறுதி குறித்தாள் உனக்குத் தெரியாமல்.
மேலும் இதுகேட்பாய் வீட்டில் நடந்தவற்றை.
ஓலைத் தடுக்கில்நான் திண்ணையில்உட் கார்ந்திருந்தேன்;
உள்ளிருந்து பார்ப்பாள் ஒளிந்துகொள்வாள்; என்முகந்தான்
கள்ளிருந்த பூவோ! களிவண்டோ மாதுவிழி!
'தன்கணவன் எப்போது சாவானோ, இச்சுதரி
சன்கணவன் ஆவதென்றோ' என்பதவள் கவலை.
இன்னும் விடியா திருக்குதடா ரஞ்சித்சிங்க்;
பொன்னங் கதிர்கிழக்கிற் பூக்கா திருக்குதடா!
சேவலும் கூவா திருக்குதடா! செக்குந்தான்
காவென்றும் கர்ரென்றும் கத்தா திருக்குதடா!
மாவின் வடுப்போன்ற கண்ணாள்காண்! மாங்குயிற்கும்
கூவும் இனிமைதனைச் சொல்லிக் கொடுப்பவள்காண்!
யாவரும் தம்அடிமை என்னும் இரண்டுதடும்
கோவைப் பழமிரண்டின் கொத்து! நகைமுல்லை!
அன்னம் பழித்தும் அகத்தில் குடிபுகுந்தும்
பின்னும்எனை வாட்டுகின்ற பெண்நடைபோற் காணேன்!
கொடிபோல் இடைஅசைந்து கொஞ்சுகையில், யானைப்
பிடிபோல் அடிகள் பெயர்க்கையிலே அம்மங்கை
கூட்ட வளையல் குலுங்கக்கை வீசிடுவாள்
பாட்டொன்று வந்து பழிவாங்கிப் போடுமடா!
அன்னவள்தான் என்னுடைய வாழ்வே! அழகுடையாள்
என்னைப் புறக்கணித்தல் என்பதென் றன்சாவு!
நிலவுமுகம் அப்பட்டம்! சாயல் நினைத்தால்
கலப மயிலேதான்! கச்சிதமாய்க் கொண்டையிட்டுப்
பூச்சூடி மண்ணிற் புறப்பட்ட பெண்ணழகை
மூச்சுடையேன் கண்டுவிட்டேன்; செத்தால் முகமறப்பேன்'
என்று சுதரிசன்சிங்க் சொன்னான். இரவில்நொடி
ஒன்றொன்றாய்ப் போபோஎன் றோட்டி ஒருசேவல்
நெட்டைக் கழுத்தை வளைக்க நெடும்பரியைத்
தட்டினான்; வீட்டெதிரே சாணமிடும் சுப்பம்மா
அண்டையிலே நின்றான்! வரவேற்றாள் அன்னவனைக்
கண்ட இனியகற் கண்டு!



6. சுப்பம்மா தொல்லை


கலிவெண்பா


 

 

 
அப்போது தான்திம்மன் கண்விழித்தான்! 'ஆ'என்றான்;
'எப்போது வந்தீர்கள்?' என்றெழுந்தான் - 'இப்போது
தான்வந்தேன்' என்றான் சுதரிசன். 'தங்கட்கு
மீன்வாங்க நான்போக வேண்டுமே - ஆனதினால்
இங்கே இருங்கள் இதோவருகின் றே'னென்று
தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச்
சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில்
செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் - இப்புறத்தில்
வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க்
பக்கத்தில் நின்றிருந்தான்; பார்த்துவிட்டாள் - திக்கென்று
தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதிஎன்ன?' என்றுரைத்தாள்.
'தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன் - சாப்பிட்டுச்
செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்.நீர்
அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் - கெஞ்சி
அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார்.
அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி - இருக்கின்றேன்
திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்.
ஐம்பது வராகன் அரசாங்கச் - சம்பளத்தை
வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்;
தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் - நாங்களெல்லாம்
அப்படித்தான் சேர்த்தோம். அதனால்தான் எம்மிடத்தில்
இப்போது கையில் இருப்பாக - முப்பத்து
மூவா யிரவரா கன்சேர்த்து மூலையிலே
யாவருங் காணாமல் இருத்தினோம்; - சாவுவந்தால்
யாரெடுத்துப் போவாரோ? பெண்டுபிள்ளை யாருமில்லை.
ஊரெடுத்துப் போவதிலும் உங்கட்குச் - சேருவதில்
ஒன்றும் கவலையில்லை. உங்கட்குப் பிள்ளைகள்
இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும்; - என்பிள்ளை
வேறு பிறர்பிள்ளை வேறா? இதைநீயே
கூறுவாய்' என்று சுதரிசன் - கூறினான்.
'திண்ணையிலே குந்துங்கள்' என்றுரைத்தாள் சேல்விழியாள்.
வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி - உண்ணென்று
தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே - இந்தமங்கை
என்று நினைத்த சுதரிசன் திண்ணைக்கே
ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான் - பின்அவளோ
கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள்;
'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ? - தேடிப்பார்'
என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து 'சுப்பம்மா
ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் - அன்றொருநாள்
செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை
அஞ்சு வராகன் அடகுக்குக் - கெஞ்சினாள்
முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே.
சிற்றினச் சிவப்போ குருவிரத்தம் - உற்றதுபோல்
கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல்
தீவட்டி போல்ஒளியைச் செய்வதுதான் - தேவை யுண்டா?
என்று சுதரிசன் கேட்டான். 'எனக்கதுஏன்?'
என்றுசுப் பம்மா எதிர்அறைக்குச் - சென்றுவிட்டாள்.
திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க். இன்னுமென்ன
பண்ணுவேன் என்று பதறுகையில் - பெண்ணாள்
தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன
இருகையில் வைக்கோலை ஏந்தி - வரக்கண்டே
'இப்பக்கம் நன்செய்நிலம் என்ன விலை?'என்றான்.
'அப்பக்கம் எப்படியோ அப்படித்தான் - இப்பக்கம்'
என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே
'இன்றுகறி என்ன?' எனக்கேட்டான் - ஒன்றுமே
பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான்.
கூசாது பின்னும் குறுக்கிட்டு - 'நீசாது
வேலைஎலாம் செய்கின்றாய்; வேறு துணையில்லை
காலையிலி ருந்துநான் காணுகின்றேன் - பாலைக்
கறப்பாயா? எங்கே கறபார்ப்போம்' என்றான்.
அறப்பேசா மல்போய் அறைக்குள் - முறத்தில்
அரிசி எடுத்தாள். அவனும் அரிசி 
பெரிசிதன் என்றுரைத்தான். பேசாள் - 'ஒருசிறிய
குச்சிகொடு பற்குத்த' என்பான். கொடுத்திட்டால்
மச்சுவீ டாய்இதையேன் மாற்றவில்லை? - சீச்சீ
இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப்
புதுநோயை எண்ணிப் புழுங்கிப் - பதறாமல்
திம்மனுக் கஞ்சித் திகைத்தாள்.அந் நேரத்தில்
திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே - 'இம்மட்டும்
வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு
மூலையிலே தூங்கினாய் முண்டமே! - பாலைவற்றக்
காய்ச்'சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக்
கீச்சென்று பேசாக் கிளி.



7. திம்மன் ஆவல்


தென்பாங்கு-கண்ணிகள்


 

 

 
காலை உணவருந்திச் - சுதரிசன்
காய்ச்சிய பால்பருகி
ஓலைத் தடுக்கினிலே - திண்ணைதனில்
ஓய்ந்து படுத்திருந்தான்.
'வேலை கிடைக்கும்என்றீர் - உடனே
விண்ணப்பம் போடுவதா? 
நாலைந்து நாட்களுக்குப் - பிறகு
நான்அங்கு வந்திடவா?'

என்றுதிம் மன்வினவச் - சுதரிசன்
'யாவும் முடித்துவிட்டேன்;
இன்று கிளம்பிவந்தால் - நல்லபயன்
ஏற்படும் அட்டிஇல்லை.
ஒன்றும் பெரிதில்லைகாண் - திம்ம,நீ
ஊருக்கு வந்தவுடன்
மன்னர் இடத்தினிலே - உன்னையும்
மற்றுன் மனைவியையும்

காட்டி முடித்தவுடன் - கட்டளையும்
கையிற் கிடைத்துவிடும்.
வீட்டுக்கு நீவரலாம் - சிலநாள்
வீட்டிலே தங்கியபின்
போட்ட தலைப்பாகை - கழற்றிடப்
போவதில் லைநீதான்;
மாட்டிய சட்டையினைக் - கழற்றியும்
வைத்திடப் போவதில்லை.

எண்பது பேருக்குநான் - உதவிகள்
இதுவ ரைக்கும்செய்தேன்;
மண்ணில் இருப்பவர்கள் - நொடியினில்
மாய்வது திண்ணமன்றோ!
கண்ணிருக் கும்போதே - இவ்வரிய
கட்டுடல் மாயுமுன்னே
நண்ணும் அனைவருக்கும் - இயன்றிடும்
நன்மைசெய் தல்வேண்டும்.

வண்டியினை அமர்த்து - விரைவினில்
மனைவி யும்நீயும்
உண்டி முடிந்தவுடன் - வண்டிதான்
ஓடத் தொடங்கியதும்
நொண்டி எருதெனினும் - செஞ்சியினை
நோக்கி நடத்துவித்தால்
கண்டிடும் பத்துமணி - இரவினில்
கட்டாயம் செஞ்சிநகர்.

வீட்டையும் பேசிவிட்டேன் - இருவரை
வேலைக் கமைத்துவிட்டேன்;
கோட்டையிற் சிப்பாயாய் - அமரும்
கொள்கையி லேவருவார்
காட்டு மனிதர்அல்லர் - என்றுநான்
கண்டித்துப் பேசிவிட்டேன்.
கேட்டு மகிழ்ந்தார்கள் - நிழல்போல்
கிட்ட இருப்பார்கள்.'

திம்மன் இதுகேட்டான் - கிளம்பிடத்
திட்டமும் போட்டுவிட்டான்!
'பொம்மை வரும்'என்றதும் - குழந்தைகள்
பூரித்துப் போவதுபோல்
'உம்'என்று தான்குதித்தான் - விரைவினில்
உண்டிட வேண்டுமென்றான்.
அம்முடி வின்படியே - தொடங்கினர்
அப்பொழு தேபயணம்!



8. காடு


எண்சீர் விருத்தம்


 

 

 
'நாளைநடப் பதைமனிதன் அறியான்' என்று
நல்லகவி விக்தர்யுகோ சொன்னான். திம்மன்
காளைஇரண் டிழுக்கின்ற வண்டி ஏறிக்
கதைஇழுக்க மனைவியைக்கை யோடி ழுத்துத்
தேளையொத்த சுதரிசனின் பேச்சை நம்பிச்
செஞ்சிக்காட் டின்வழியே செல்லு கின்றான்.
வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும்
வௌிக்காட்ட முடியவில்லை தன்க ருத்தை!

குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு
கோணாமல் மாட்டுவண்டி யோடு சென்றான்.
முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம்;
முன்நிலவும் அடங்கிற்று. முத்துச் சோளக்
கதிர்அடிக்கும் நரிகள்அடங் கினநு ழைக்குள்.
காரிருளும் ஆழ்ந்ததுபோய் அமைதி தன்னில்.
உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே
உணர்ந்தார்கள்; பின்அதனை அருகில் கேட்டார்.

மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்;
விரைவாகச் சிலர்வருவ தாய் உணர்ந்தார்.
சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்;
தோள்நோக்கிக் கத்திகளின் ஒளிகண் டார்கள்;
எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை.
எலிக்கண்போல் எரிந்ததுவண் டியின் விளக்கும்;
இதோகுதிரை என்றார்கள் வந்த வர்கள்;
எதிர்த்தோன்றும் மின்னல்கள் வாளின் வீச்சு!

பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே
பதறினார் இருந்தவர்கள்! வண்டிக் காரன்
இறங்கி'எமை ஒன்றும்செய் யாதீர்' என்றான்.
'எங்கிருந்து வருகின்றீர்?' என்றார் வந்தோர்.
'பிறந்துவளர்ந் திட்டஊர் வளவ னூர்தான்;
பெயர்எனக்குச் சீனன்'என்றான் வண்டிக் காரன்.
'உறங்குபவர் யார்உள்ளே?' என்று கேட்டார்.
உளறலொடு திம்மன்'நான் வளவ னூர்தான்'

என்றுரைத்தான். 'இன்னும்யார்?' என்று கேட்டார்.
'என்மனைவி' என்றுரைத்தான் திம்மன். கேட்ட
கன்னலைப்போல் மொழியுடையாள் துடிது டித்தாள்!
'காரியந்தான் என்ன' வென்றார். நடுங்குந் திம்மன்
தன்கதையைக் கூறினான்; கேட்டார். அன்னோர்
சாற்றுகின்றார்: 'திம்மனே மோசம் போனாய்;
பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப்
பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோ கின்றாய்;

தமிழ்மொழியை இகழ்கின்றான், தமிழர் தம்மைத்
தாழ்ந்தவர்என் றிகழ்கின்றான்; தமிழப் பெண்டிர்
தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத் 
தான்உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும்
சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச்
சொன்னாலும் கேட்பதில்லை. அந்தோ அந்தோ!
அமுதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி
அனலுக்கா செல்கின்றீர் வண்டி ஏறி?

நல்லதொரு தொண்டுசெய்வாய்; செஞ்சி யாளும்
நாய்க்கூட்டம் ஒழிந்துபட எம்பால் சேர்ந்து
வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல
வீணரல்லயாம்; தமிழை இகழ்ந்தோர் வாழ்வின்
சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே!
சலிப்பதிலே தோன்றுவதே எம்சாக் காடே!
இல்லயெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்;
என்ன'என்றார். திம்மன்,'விடை தருவீர்' என்றான்.

'போகின்றாய்?போ! பிறன்பால் வால்கு ழைக்கப்
போ!அடிமைக் குழிதன்னில் வீழ்ந்தி டப்போ!
போ!கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம்
போக்கப்போ! ஒன்றுசொல்வோம் அதையே னுங்கேள்.
சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத்
தமிழர்மறம்! தமிழர்நெறி!'என்றார். நங்கை
'போகின்றேன் என்னிடத்தில் கத்தி ஒன்று
போடுங்கள்' என்றுரைத்தாள். ஆஆ என்றார்!

ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி!
அவற்றில்ஒரு கத்தியினை வாங்கிக் கொண்டாள்.
'தந்தோம்எம் தங்கச்சி வெல்க! வெல்க!
தமிழச்சி உன்கத்தி வெல்க!' என்றார்.
வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை.
மாட்டுவண்டி சென்றதுசெஞ் சியினை நோக்கி!
பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப்
பத்துக்கல் லுக்கப்பால் திம்மன் கண்டான்!



9. சிங்கம்


தென்பாங்கு-கண்ணிகள்


 

 

 
'காட்டு வழிதனிலே சிங்கமே! - எம்மைக்
காட்டிக் கொடுத்துவந்த சிங்கமே!
ஓட்டம் பிடித்துவிட்ட சிங்கமே! - உங்கள்
உள்ளம் பதைத்ததென்ன சிங்கமே?
நீட்டிய உங்கள்கத்தி கள்ளரைக் - கண்டு
நெட்டுக் குலைந்ததென்ன சிங்கமே?
கூட்டி வழிநடந்து வந்திரே' - என்று
கூறிச் சிரித்தான்அத் திம்மனும்!

'அங்கே வழிமறித்த யாவரும் - திரு
வண்ணா மலைநகர வீரர்கள்; 
இங்கே எமக்கவர் விரோதிகள் - தக்க
ஏற்பாட்டி லேஎதிர்க்க வந்தவர்;
உங்கட் கிடர்புரிய எண்ணிடார் - இந்த
உண்மை தெரியும்எனக் காதலால்
எங்கே உமைவிடுத்த போதிலும் - உங்கட்
கிடரில்லை' என்றனன் சுதரிசன்!



10. சுப்பம்மா


எண்சீர் விருத்தம்


 

 

 
இவ்வாறு கூறிப்பின் சுதரி சன்சிங்க்
இதோகாண்பீர் செஞ்சிமலை சார்ந்த சிற்றூர்!
அவ்விடத்தில் தனிக்குடிசை ஒன்றில் நீவிர்
அமைதியாய் இருந்திடுவீர்; உணவு யாவும்
செவ்வையுற ஏற்பாடு செய்வேன்; என்றன்
சேவகத்தை நான்பார்க்க வேண்டு மன்றோ?
எவ்விதத்தும் விடிந்தவுடன் வருவேன்' இங்கே 
எவற்றிற்கும் எற்பாடு செய்வேன்' என்றான்.

கைவேலைக் காள்கொடுத்தான்; துணைகொ டுத்தான்;
கழறியது போலவே உணவுந் தந்தான்;
வைவேலை நிகர்கண்ணாள் கண்ணு றக்கம்
வராதிருந்தாள்; அவளுடைய நெஞ்ச மெல்லாம்
பொய்வேலைச் சுதரிசன்செய் திடஇ ருக்கும்
பொல்லாங்கில் இருந்தது!குத் துக்கத் திக்கு
மெய்யாக வேலைஉண்டோ? அவ்வா றொன்றும்
விளையாமை வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.



11. பொன்துளிர்


எண்சீர் விருத்தம்


 

 

 
சுப்பம்மா கால்தூக்கம், சுப்பம் மாவின்
துணைவனின்ஒன் றேமுக்கால் தூக்கம் எல்லாம்
தொப்பெனவே இல்லாது மறையும் வண்ணம்
துளிர்த்ததுபொற் றுளிர்கிழக்கு மாம ரத்தில்!
அப்போதில் சுப்பம்மா 'அத்தான்' என்றாள்;
'அவசரமா' எனத்திம்மன் புரண்டான் ஆங்கே.
'இப்படிப்போ' என்றுபகல் இருளைத் தள்ளி
எழுந்துவந்து திம்மனெதிர் சிரித்த தாலே.

'அம்மா'என் றிருகையை மேலே தூக்கி
'ஆ'என்று கொட்டாவி விட்டுக் குந்தித்
திம்மன்எழுந் தான்!அவனும், சுப்பம் மாவும்
சிறுகுடிசை விட்டுவௌிப் புறத்தில் நின்றே
அம்மலையின் தோற்றத்தைக் கண்டார். காலை
அரும்புகின்ற நேரத்தில் பொற்கதிர் போய்ச்
செம்மையுறத் தழுவியதால் மலைகோட் டைமேல்
சிறுகுவிரித் தெழுங்கருடக் கொடியைக் கண்டார்.



12. வானப்படம்


தென்பாங்கு - கண்ணிகள்


 

 

 
'பொன்னான வானப் படத்தில் - வியிரப்
புதிதான வண்ணம் குழைத்துத்
தன்னேர் இலாதமலை எழுதித் - திகழ்
தளிர்படும் பூஞ்சோலை எழுதி
உன்னை மகிழ்வித்த காட்சி - எனக்கும்
உவகை கொடுத்ததடி பெண்ணே'
என்றுரைத் தான்நல்ல திம்மன் - அந்த
ஏந்திழை தான்புகல் கின்றாள்:

'விண்மீதில் அண்ணாந்த குன்றம் - அதனை
மெருகிட்டு வைத்தசெங் கதிர்தான்
ஒண்ணீழல் செய்திடும் சோலை - யதனை
ஒளியில் துவைத்ததும் காண்க!
கண்காணும் ஓவியம் அனைத்தும் - அழகு
காட்டப் புரிந்ததும் கதிர்தான்!
மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் - பரிதி
வாய்த்திட்ட அறிவாகும்' என்றாள்.

மங்கையும் திம்மனும் இயற்கை - அழகில்
வாழ்கின்ற போதிற்சு பேதார்
செங்கையில் மூட்டையொடு வந்தான் - 'புதுமை
தெரியுமோ உங்களுக்' கென்றான்.
அங்காந்த வாயோடு திம்மன் - விரைவில்
'அதுவென்ன புகலுவீர்' என்றான்!
'சிங்கன் முயற்சி வீணாமோ? - புதிய
சிப்பாயும் நீயாகி விட்டாய்.

இந்தா இதைப்போடு! சட்டை! - இதுவும்
எழிலான சல்லடம்! மாட்டு!
இந்தா இதைப்போடு! பாகை! - இன்னும்
இந்தா இடைக்கச்சை! கட்டு!
செந்தாழை மடல்போன்ற கத்தி - இடையில்
சேர்த்திறுக் கித்தொங்க வைப்பாய்!
வந்துபோ என்னோடு திம்மா! - விரைவில்
வா'என் றழைத்தனன் சிங்கன்!



13. புதிய சிப்பாய்


எண்சீர் விருத்தம்


 

 

 
'சுதரிசன்சிங்க் செய்தநன்றி பெரிது கண்டாய்!
சுப்பம்மா விடைகொடுப்பாய்' என்றான் திம்மன்.
இதற்கிடையில் சுதரிசன்சிங்க் 'நாளைக் குத்தான்
இங்குவர முடியும்நீ' என்று ரைத்தான்.
'அதுவரைக்கும் நான்தனியாய் இருப்ப துண்டோ
அறிமுகமில் லாவிடத்தில்?' என்றாள் அன்னாள்.
'இதுசரிதான் இன்றிரவே உனைய னுப்ப
ஏற்பாடு செய்கின்றேன்' என்றான் சிங்கன்.

'சிங்குநமக் கிருபெண்கள் துணைவைத் தாரே
சிறிதும்உனக் கேன்கவலை?' என்றான் திம்மன்.
'இங்கெதற்கும் அச்சமில்லை சுப்பம் மாநீ
இரு'என்று சிங்கனுரைத் திட்டான். திம்மன்
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே பூரித் தானாய்ப்
புறப்பட்டான் சிங்கனொடு! சுப்பம் மாவும்
சுங்குவிட்ட தலைப்பாகை கட்டிக் கொண்டு
துணைவன்போ வதுகண்டு சொக்கி நின்றாள்!



14. அன்றிரவு


அகவல்


 

 

 
மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச்
சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக்
குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்!
சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த
குப்பும் முருகியும் செப்பினார் தேறுதல்.
குப்பு 'மங்கையே, சிப்பாய் இப்போது
வருவார்; அதற்குள் வருத்தமேன்?' என்றாள்.
முருகி, 'இதற்கே உருகுகின் றாயே
சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர்
மாசக் கணக்காய் வாரக் கணக்காய்
வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்;
எப்படி உன்னுளம் ஒப்பும்?' என்றாள்.
கோதைசுப் பம்மா கூறு கின்றாள்:
'புயற்காற்று வந்து போகாது தடுப்பினும்
அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது;
நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது;
பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே!
வீட்டை விட்டவர் வௌியே செல்வது
கூட்டைவிட் டுயிர்வேறு கூடு செல்வதே!
அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம்.
அயல்போ வாரெனில் அதுவும் எங்கே?
வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து
வீடு, மற்றொரு வீடு, தோப்பு
மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே
இப்போ தென்ன இருக்கும் மணி?அவர்
எப்போது வருவார்?' என்று கேட்டாள்! 
குப்பு,மணி ஆறென்று கூறினாள்! முருகி
விளக்கு வைக்கும் வேளை என்றாள்!
குப்பு, முருகி, சுப்பம்மா இவர்
இருந்த இடமோ திருந்தாக் குடிசை!
நாற்பு றம்சுவர் நடுவி லேஓர்
அறையு மில்லை. மறைவு மில்லை.
வீட்டு வாசல், தோட்ட வாசல்
இருவா சல்களும் நரிநுழை போலக்
குள்ள மாகவும் குறுக லாகவும்
இருந்தன. முருகி எழுந்து விளக்கை
ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வட்டித்தாள்.
குப்பு மகிழ்ந்து குந்தினாள் சாப்பிட.
சுப்பம் மாமுகம் சுருக்கிக் கூறுவாள்:
'கணவர் உண்டபின் உணவு கொள்வேன்;
முதலில் நீங்கள் முடிப்பீர்' என்றனள்.
குப்பு 'வாவா சுப்பம் மாநீ
இப்படி வா!நான் செப்புவ தைக்கேள்.
வருவா ரோஅவர் வரமாட் டாரோ?
சிப்பாய் வேலை அப்படிப் பட்டது.
உண்டு காத்திரு. சிப்பாய் வந்தால்
உண்பார்; உணவு மண்ணாய் விடாது.
சொல்வதைக் கேள்'என்று சொல்லவே மங்கை
'சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள்.
காலம் போகக் கதைகள் நடந்தன.
முருகி வரலாறு முடிந்ததும் குப்பு
மாமியார் கதையை வளர்த்தினாள். பிறகு
மூவரும் தனித்தனி மூன்று பாயில்
தலையணை யிட்டுத் தலையைச் சாய்த்தனர்.
அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய்
'என்னடி முருகி' என்ற ஒருகுரல்
கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய்
'ஏனிந் நேரம்' என்று வரவேற்று
வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள்.
இருவரு மாக ஒரேபாய் தன்னில்
உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த
சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது!
சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்?
முருகியும் அவனும் அருகில் நெருங்கி
உரையாடு கின்றனர். உறவும் உண்டோ?
என்று பலவா றெண்ணி இருக்கையில்
முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான்.
குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச்
சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள்.
'மேல்என் னென்ன விளையுமோ? கண்ணிலாள்
போல்இவ் விருளில் புரளு கின்றேன்;
சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள்
பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ?'
என்று நினைத்தாள்; இடையில் கத்தியை
இன்னொரு தரம்பார்த்துப் பின்னும் மறைத்தாள்.
கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும்
சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில்
ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள்.
கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக்
கருதினாள்; ஆயினும் களையுண் டானதால்
இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக்
கரும்பாம் பாம்துயில் கவர
இரவு போயிற்றே! இரவு போயிற்றே!



15. மகிழ்ந்திரு


தென்பாங்கு -- கண்ணிகள்


 

 

 
நீரடை பாசியில்
தாமரை பூத்தது போலே - நல்ல
நீலத் திரைகடல் மேலே - பெருங்
காரிருள் நீக்கக்
கதிர்வந்து பூத்ததி னாலே

வாரிச் சுருட்டி
எழுந்தனன் சிங்கனப் போது - உடை
மாற்றினன் தன்னுடல் மீது - அவன்
நேரில் அழைத்தனன்
வந்துநின் றாளந்த மாது.

'ஆயிரம் பேரொடு
திம்மனும் அங்கிருக் கின்றான் - கவாத்
தாரம்பம் செய்திருக் கின்றான் - அவன்
ஞாயிறு செல்லத்திங்
கட்கிழ மைவரு கின்றான்.

போயிருந் தாலென்ன
அச்சம் உனக்கென்ன இங்கு? - ந
பொன்போலப் பாயில்உ றங்கு - இரு
தாய்மாரும் உண்டு
துயர்செய்வ தெந்தக்கு ரங்கு?

ஆவிஉன் மேல்வைத்த
திம்ம னிடத்திலும் சென்று - நான்
ஆறுதல் கூறுவேன் இன்று - நீ
தேவை இருப்பதைக்
கேள்இங்குத் தங்குதல் நன்று.

கோவை படர்ந்திட்ட
கொய்யாப் பழந்தரும் தோட்டம் - இங்குக்
கூவும் பறவையின் கூட்டம் - மிக
நாவிற்றுப் போகும்
இனிக்கும் பழச்சுளை
ஊட்டம்.

தெற்குப் புறத்தினில்
ஓடி உலாவிடும் மானும் - அங்குச்
செந்தினை மாவோடு தேனும் - உண்டு
சற்றே ஒழிந்திடில்
செல்லுவ துண்டங்கு நானும்!

சிற்றோடை நீரைச்
சிறுத்தையின் குட்டி குடிக்கும் - அதைச்
செந்நாய் தொடர்ந்து கடிக்கும் - அங்கே
உற்ற வரிப்புலி<
நாயின் கழுத்தை ஒடிக்கும்.

மாங்குயில் கூவிஇவ்
வண்ணத் தமிழ்மொழி விற்கும் - இந்த
வையமெலாம் அதைக் கற்கும் - களி
தாங்காது தோகை
விரித்தாடி மாமயில் நிற்கும்.

பாங்கிலோர் காட்டில்
படர்கொடி ஊஞ்சலில் மந்தி - ஒரு
பாறையின் உச்சியை உந்தி - உயர்
மூங்கில் கடுவனை
முத்தமிடும் அன்பு சிந்தி

கைவைத்த தாவில்
பறித்திட லாகும்ப
லாக்காய் - நீ
கால்வைத்த தாவில்க ளாக்காய் - வெறும்
பொய்யல்ல நீஇதைப்
போயறி வாய்காலப் போக்காய்.

ஐவிரல் கூட்டி
இசைத்திடும் யாழ்கண்ட துண்டு - யாழின்
அப்பனன் றோவரி வண்டு? - மக்கள்
உய்யும் படிக்கல்ல
வோஇவை செய்தன தொண்டு?

'போய்வரு வேன்'என்று
சொல்லிச் சுதரிசன் போனான் - அந்தப்
பூவையின் மேல்மைய லானான் - அவன்
வாய்மட்டும் நல்லது;
உள்ளம் நினைத்திடில் ஈனன்.

தூய்மொழி யாளும்
சுதரிச னைநம்ப வில்லை - என்று
தொலையுமோ இப்பெருந் தொல்லை - என்று
வாய்மொழி இன்றி
இருந்தனள் அக்கொடி முல்லை.


16. சுதரிசன் மயக்கம்


அறுசீர் விருத்தம்


 

 

 
சுதரிசன் தொலைந்தான்! அன்னோன்
கூத்திமார் இரண்டு பேரும்
'எதற்கும்நீ அஞ்ச வேண்டாம்'
என்றுபக் கத்தில் குந்தி
சுதரிசன் புகழை யெல்லாம்
சொல்லிடத் தொடங்கி னார்கள்.
புதுத்தொல்லை யதனில் மங்கை
புழுவாகத் துடிக்க லானாள்.

அழகுள்ள ஆளாம் எங்கும்
அவன்போலே அகப்ப டாராம்!
ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும்
ஒருநூரா யிரமும் உண்டாம்!
ஒழுகுமாம் காதில் தேனாய்
ஒருபாட்டுப் பாடி விட்டால்!
எழுதினால் ஓவி யத்தை
எல்லாரும் மயங்கு வாராம்!

நடுப்பகல் உணவா யிற்று;
நங்கைக்குக் கதை யுரைக்க
எடுத்தனர் பேச்சை. நங்கை
'தப்புவ தெவ்வா' றென்று
துடித்தனள். 'எனக்குத் தூக்கம்
வருகின்ற' தென்று கூறிப்
படுத்தனள்; கண்கள் மூடிப்
பகற்போதைக் கழித்து விட்டாள்.

'பகலெலாம் கணவ ருக்குப்
பலபல வேலை யுண்டு.
முகங்காட்டிப் போவ தற்கும்
முடியாதா இரவில்?' என்று
நகம்பார்த்துத் தலைகு னிந்து
நங்கையாள் நலிவாள்! அந்த
அகம்கெட்ட மாதர் வந்தே
'சாப்பிட அழைக்க லானார்.'

உணவுண்டாள் நங்கை அங்கே
ஒருபுறம் உட்கார்ந் திட்டாள்!
முணுமுணு என்று பேசி
இருந்திட்ட இருமா தர்கள்
அணுகினார் நங்கை யண்டை
அதனையும் பொறுத் திருந்தாள்!
தணல்நிகர் சுதரி சன்சிங்க்
தலைகண்டாள்; தளர்வு கொண்டாள்.

எதிரினில் சுதரி சன்சிங்க்
உட்கார்ந்தான்; 'என்ன சேதி?
புதுமலர் முகமேன் வாடிப்
போனது? சுப்பம் மாசொல்!
குதித்தாடும் பெண்நீ சோர்ந்து
குந்திக்கொண் டிருக்கின் றாயே?
அதைஉரை' என்றான். நங்கை
'அவர்எங்கே?' என்று கேட்டாள்.

'திம்மனைச் சிங்கம் வந்தா
விழுங்கிடும்? அச்சம் நீக்கிச்
செம்மையாய் இருப்பாய்' என்றான்.
இதற்குள்ளே தெருவை நோக்கி
அம்மங்கை முருகி சென்றாள்
அவள்பின்னே குப்பும் போனாள்.
'உம்'என்றாள்; திகைத்தாள் நங்கை!
சுதரிசன் உளம் மகிழ்ந்தே,

'நங்கையே இதனைக் கேட்பாய்
நானுன்றன் கணவ னுக்கே
இங்குநல் லுத்தி யோகம்
ஏற்பாடு செய்து தந்தேன்;
பொங்கிடும் என்னா சைக்குப்
புகலிடம் நீதான்; என்னைச்
செங்கையால் தொடு; மறுத்தால்
செத்துப்போ வதுமெய்' என்றான்.

'நான்எதிர் பார்த்த வண்ணம்
நடந்தது; நங்கை மாரும்
யான்இங்குத் தனித்தி ருக்க
ஏற்பாடு செய்து போனார்;
ஏன்என்று கேட்பா ரில்லை
இருக்கட்டும்' என்று வஞ்சி
தேன்ஒத்த மொழியால் அந்தத்
தீயன்பால் கூறு கின்றாள்:

'கொண்டவர்க் குத்தி யோகம்
கோட்டையில் வாங்கித் தந்தீர்;
அண்டமே புரண்டிட் டாலும்
அதனையான் மறக்க மாட்டேன்.
அண்டையில் வந்துட் கார்ந்தீர்
அடுக்காத நினைவு கொண்டீர்;
வண்கையால் 'தொடு' மறுத்தால்
சாவது மெய்யே என்றீர்.

உலகில்நான் விரும்பும் பண்டம்
ஒன்றுதான்; அந்தச் செம்மல்
தலைமிசை ஆணை யிட்டுச்
சாற்றுவேன்: எனது கற்பு
நிலைகெட்ட பின்னர் இந்த
நீணில வாழ்வை வேண்டேன்.
மலையும்தூ ளாகும் நல்ல
மானிகள் உளந் துடித்தால்!

கொண்டஎண் ணத்தை மாற்றிக்
கொள்ளுவீர்; நரியும் யானைக்
கண்டத்தை விரும்பும்; கைக்கு
வராவிடில் மறந்து வாழும்!
கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக்
கவர்ந்திடும், அந்நெஞ் சத்தைக்
கொண்டொரு நிலையிற் சேர்ப்பார்
குறைவிலா அறிவு வாய்ந்தோர்.'

என்றனள். சுதரி சன்சிங்க்
ஏதொன்றும் சொல்லா னாகி
'நன்றுநீ சொன்னாய் பெண்ணே!
நான்உன்றன் உளம்சோ தித்தேன்;
இன்றிங்கு நடந்த வற்றைத்
திம்மன்பால் இயம்ப வேண்டாம்.'
என்றனன் கெஞ்சி னான்;'போய்
வருகின்றேன்' என்றெ ழுந்தான்.

இருளினில் நடந்து போனான்
எரிமலைப் பெருமூச் சோடு!
இருளினை உளமாய்க் கொண்ட
இருமாதர் உள்ளே வந்தார்.
அருளினால் கூறு கின்றாள்
சுப்பம்மா அம்மா தர்க்கே:
'ஒருபோதும் இனிநீர் இந்த
உயர்விலாச் செயல்செய் யாதீர்.

ஆயிரம் வந்திட் டாலும்
அடாதது செயாதீர்; ஆவி
போயினும் தீயார் நட்பிற்
பொருந்துதல் வேண்டாம்; உம்மைத்
தாயினும் நல்லார் என்று
தான்நினைத் திருந்தேன். தாழ்வை
வாயினால் சொல்லிக் காட்ட
வரவில்லை என்னே என்னே!

கண்ணகி என்னும் இந்தத்
தமிழ்நாட்டின் கண்ணே போன்ற
பெண்கதை கேட்டி ருப்பீர்;
அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப்
பெண்களே நீரும்! அந்தப்
பெரும்பண்பே உமக்கும் வேண்டும்;
எண்ணமேன் இவ்வா றானீர்?
திருந்துங்கள்' என்று சொன்னாள்.

'யாம்என்ன செய்து விட்டோம்?
எம்மிடம் நீதான் என்ன
தீமையைக் கண்டு விட்டாய்?
தெரிவிப்பாய்; தெருவிற் சென்றோம்
சாமிக்குத் தெரியும் எங்கள்
தன்மை.நீ அறிய மாட்டாய்!
ஏமுரு கியேஇ தென்ன
வெட்கக்கே டெ'ன்றாள் குப்பு.

'சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள்
தெருவிற்குச் சென்றால் என்ன?
பங்கமோ இதுதான்? மேலும்
பயந்துவிட் டாயா? சிங்கு
தங்கமா யிற்றே! சிங்கு 
தறுதலை யல்ல பெண்ணே.
எங்களை இகழ்ந்த தென்ன?'
என்றனள் முருகி என்பாள்.



17. சுப்பம்மா நிலை


அறுசீர் விருத்தம்


 

 

 
விடிந்தது சுப்பம் மாவும்
விழித்தனள்; திம்ம னில்லை.
வடிந்தது கண்ணீர்! மெய்யும் 
வாடிற்று! நுண்ணி டைதான்
ஒடிந்தது! தேனி தழ்தான்
உலர்ந்தது! தூளாய் உள்ளம்
இடிந்தது! 'செய்வ தென்ன'
என்றெண்ணி இருந்தாள் மங்கை!

காலையில் உணவை உண்டார்
அனைவரும்! முருகி சொன்னாள்:
'மாலையில் வருவோம் நாங்கள்
மைத்துனர் வீடு சென்று
மூலையில் தூங்கி டாதே;
முன்கத வைமூ டிக்கொள்;
வேலையைப் பார்; சமைத்துக்
கொள்'என்றாள்; வௌிச்சென் றார்கள்.

தனிமையில் இருந்தாள் அந்தத்
தனிமயில்! கணவன் என்ற
இனிமையில் தோய்வாள் அந்த
எழில்மயில்! மீண்டும் தீயன்
நனிமையற் பெருக்கால் என்ன
நடத்திட இருக்கின் றானோ?
இனிமெய்யாய் இங்கி ருத்தல்
சரியல்ல!' எனநி னைத்தாள்.



18. திம்மன் நிலை


எண்சீர் விருத்தம்


 

 

 
கோட்டையிலே அடைப்பட்டுக் கிடந்தான் வீட்டில்
கோழிஅடை பட்டதுபோல் அந்தத் திம்மன்!
ஓட்டையிலே ஒழுகுவது போலே நீரை
ஒழுகவிடும் இருவிழியும், உடைந்த நெஞ்சும்,
வாட்டமுறும் முகமுமாய் இருந்தான். என்றன்
மனைவிநிலை எப்படியோ? இங்கு வைத்து
வாட்டுகின்றார்! கவாத்தெங்கே? வீணில் தூங்க
வலுக்கட்டா யம்செய்யும் வகைதான் என்னே!

ஏதோஓர் சூழ்ச்சிஇதில் இருக்கக் கூடும்.
இல்லைஎனில் எனக்கிந்த நிலைஎ தற்கு?
மாதுதனை எனைவிட்டுப் பிரிப்ப தற்கே
வம்பன்இது செய்தானோ? சுப்பம் மாவும்
தீதேதோ கண்டதால் அன்றோ, அன்று
செப்பினாள் 'அவனைநான் நம்பேன்' என்று!
'தாதுசிங்கைக் கேட்கின்றேன்; வீடு செல்லத்
தக்கவழி கூறுவான்' என்று சென்றே

'எதற்கிங்கே நான்பத்தொன் பதுநாள் தங்கி
இருப்ப'தென்று வினவினான். அந்தச் சிப்பாய்
'அதற்கென்ன காரணமோ அறியேன்; அந்த
அதிகாரி வைத்ததுதான் சட்ட' மென்றான்.
மிதக்கின்ற பாய்க்கப்பல் மூழ்கிப் போக
வெறுங் கட்டை அதுவுங்கை விட்டதைப் போல்
கொதிக்கின்ற மனத்தோடு கோட்டைக் குள்ளே
குந்தினான் கண்ணீரைச் சிந்தி னானே!

கோட்டைக்குள் இவ்விருளாம் கரிய பாம்பு
கொடியவால் காட்டியெனை அஞ்ச வைத்தால்
காட்டைநிகர் சேரியிலே அந்தப் பாம்பு
கண்விழித்தால் சுப்பம்மா நிலைஎன் ஆகும்?
'தோட்டமுண்டு; வயலுண்டு; போக வேண்டாம்
தொல்லை'என்று சொன்னாளே கேட்டே னாநான்?
கேட்டேனா கிளிக்குச்சொல் வதுபோல் சொன்னாள்
கெட்டேனே' என்றலறிக் கிடந்தான் திம்மன்!



19. சுதரிசன் நிலை


தென்பாங்கு - கண்ணிகள்


 

 

 
மாவடு வொத்த விழிக்கும் - அவள்
மாம்பழம் போன்ற மொழிக்கும்
காவடிப் பிச்சைஎன் றேனே - அந்தக்
கள்ளி மறுத்துவிட் டாளே!
தூவடி என்உடல் மீதில் - உன்
தூயதோர் கைம்மலர் தன்னை 
ஆவி நிலைத்திடும் என்றேன் - அவள்
அட்டி உரைத்துவிட் டாளே!

என்று சுதரிசன் எண்ணி - எண்ணி
ஏங்கி இருந்தனன்! பின்பு
ஒன்று நினைத்தனன் சூழ்ச்சி - மிக
ஊக்கம் மிகுந்தது நெஞ்சில்!
பின்புறக் கோட்டையை நாடிச் - சில 
பேச்சுக்கள் பேசிட ஓடித்
தன்துணை வர்களைக் கண்டான் - கண்டு
தன்கருத் துக்களைச் சொன்னான்.

கோட்டையில் வேறொரு பக்கம் - வந்து
குப்பு, முருகியைக் கண்டான்.
நாட்டம் அனைத்தும் உரைத்தான் - அவர்
நன்றென்று கூறி நடந்தார்.
'பாட்டு நிகர் மொழியாளை - என்
பக்கம் திருப்பிடச் செய்வேன்
காட்டுவேன் வேடிக்கை' என்றே - சிங்கன்
கையினை வீசி நடந்தான்.



20. இங்கே செல்லாது


தென்பாங்கு - கண்ணிகள்


 

 

 
தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம்
துப்பாக்கி சூழ்ந்தது போல் - துயர்
தாங்கருங் கிள்ளையை நோக்கிக் கவண்பலர்
தாங்கி நடந்தது போல்
ஏங்கும் விளக்கினை நோக்கிப் பெரும்புயல்
ஏற்பட்டு வந்தது போல் - நொடி
ஆங்கிருக் கும்சுப்பம் மாவின் குடிசையை
ஆட்கள் பலர் சூழ்ந்தார்!

தீய முருகியுங் குப்பும் இருந்தனர்
சேயிழை பக்கத் திலே - வீட்டு
வாயிற் கதவினைத் தட்டிய தட்டோடு
வந்தது பேச்சுக் குரல்!
'ஆயிரம் ஆயிரம் ஆக வராகன்
அடித்துக்கொண் டோடி வந்தீர் - நீர்
தூயவர் போலிந்த வீட்டில் இருந்திடும்
சூழ்ச்சி தெரியா தோ?'

என்று வௌியினில் கேட்ட குரலினை
இவ்விரு மாதர் களும் - உயிர்
கொன்று பொருள்களைக் கொள்ளை யடிப்போர்
குரலிது வென்றுரைத் தார்.
புன்மை நடையுள்ள அவ்விரு மாதரும்
பொத்தென வேஎழுந் தார் - அவர்
சின்ன விளக்கை அவித்துக் கதவைத்
திறந்தனர் ஓடிவிட் டார்!

மங்கை இருந்தனள் வீட்டினுள் ளேஇருள்
வாய்ந்த இடத்தி னிலே - பின்னர்
அங்கும் இங்கும்பல ஆட்களின் கூச்சல்
அலைவந்து மோது கையில்
மங்கையின் மேல்ஒரு கைவந்து பட்டது.
*வாள்பட்ட தால் விட்டது. - அட
இங்குச்செல் லாதென்று மங்கைசொன் னாள்!வந்த
இழிஞர்கள் பேச வில்லை.

* சுப்பம்மாமேல் ஒரு கைபட்டது. உடனே சுப்பம்மாவின்
வாள் அக்கையின்மேல் பட்டவுடன் அக்கை எடுபட்டது.

மேலும் நடப்பது யாதென்று மங்கை
விழிப்புடன் காத்திருந் தாள் - அந்த
ஓலைக் குடிசைக்குத் தீயிட்ட தாக
உணர்ந்து நெஞ்சந் துடித்தாள்!
மூலைக்கு மூலை வழிபார்த் தாள்புகை
மொய்த்த இருட் டினிலே - அவள்
ஏலுமட் டும்இரு தாழைத் திறந்திட
என்னென்ன வோ புரிந்தாள்.

கூரை எரிந்தது! கொள்ளிகள் வீழ்ந்தன!
கூட்டத்தி லே ஒருவன் - 'சொல்
ஆரங்கே' என்றனன்; தாழைத் திறந்தனன்;
'அன்னமே' என்றழைத் தான்.
கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது
கொல்புகை நீங்கிய தால் - 'முன்
ஆரங்கே' என்றவன் சுதரிசன் என்பதை
அன்னம் அறிந்தவ ளாய்

கத்தியை நீட்டினாள்; 'தீஎன்னை வாட்டினும்
கையைத் தொடாதே யடா! - இந்த
முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
மூச்சுப் பெரிதில்லை காண்!'
குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும்
கொண்டிது கூறி நின்றாள் - வந்த
தொத்தல் பறந்தது! சூழ இருந்தவர்
கூடத் தொலைந்து விட்டார்.
by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.