|
|||||
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து தொன்மையான சிலைகள் மாற்றம்: சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தகவல்! |
|||||
தஞ்சை பெரியகோவிலில் இருந்து தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் 3-வது முறையாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினர். பெரியகோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் தான் அனைத்து சிலைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அர்த்த மண்டபத்தில் ஆய்வு செய்தனர். தஞ்சை பெரியகோவில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருவதால், மத்திய தொல்லியல் துறை இயக்குநரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தஞ்சை பெரியகோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். அப்போதே பல சிலைகளில் தற்கால எழுத்துகள் உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஆய்வு நடைபெற்றது. முன்னதாக பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினர். பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்த 382 சிலைகளில், 191 சிலைகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மற்ற சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் ஆய்வு செய்தனர். அங்கும் பல தொன்மையான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் 15 பேரும், 50க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வு செய்தனர். அங்கு 41 தொன்மையான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்து உள்ளனர். மாற்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளில் தற்கால எழுத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளனர். |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|