தமிழ் பண்பாட்டில் கோயில்கள் என்பவை அவை அமையப்பெற்ற இடங்களுக்கு ஏற்ப மக்களின் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியலோடு ஒன்றி இருந்தன. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்ததில்லை. கோயில்களை எடுத்து ஆராய்ந்தால் அதில் இல்லாத வாழ்வியல் சித்தாந்தங்கள் இல்லை எனும் அளவிற்கு பக்தியும், ஞானமும் பெற்று அவரவர் மன நிலைக்கு ஏற்ப இறையருளைப் பெரும் ஆற்றல் /சக்தி கொண்ட இடங்களாகத் திகழ்ந்தன. அந்த நோக்கங்களை உள்வாங்கி கோயில்களில் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியல் தொடர்ந்து காக்கப்படுவது அவசியம்.
- திருக்கோயில்கள் மக்களின் மன அமைதிக்கு , பக்திக்கு , பக்தி மார்கத்திலுருந்து ஞான மார்க்கத்தை நோக்கி நகர்வதற்கு உகந்த இடங்களாக இருந்தன.
- திருமுறைகள் ஓதுமிடமாகவும், இசை, பாடல், ஆடல் என கலை வளர்க்கும் இடமாகவும் இருந்தன.
- இயற்கைப் பேரிடரின்போது மக்கள் தங்குமிடமாக விளங்கின.
- கோயில்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பெற்று, நூலகங்களாகவும் இருந்தன
- தேவாரம், இன்னிசை, நடனம் பயிலும் இடங்களாகவும் விளங்கின.
- பசிப்பிணி போக்குமிடமாக ,பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னமிடும் சாலைகளாகவும் இருந்தன.
- வெள்ளம்/ பஞ்சம் வந்தால் அடைக்கலம் புகும் இடங்களாகவும் இருந்தன.
- அரிய மரங்கள் தலமரங்களாகக் காக்கப்பட்டன.
- மக்களின் பிணி போற்றும் தமிழ் மருத்துவத்தை வழங்கும் இடங்களாக இருந்தன.
- திருக்குளம், இன்றும் வற்றாத கிணறு ஆகியன நீர்நிலை மேம்பாட்டுக்கு வழிகாட்டின.
- நாட்டு மாடுகளை வளர்க்கும் கோசாலைகள் இருந்தன
- பறவைகள், விலங்குகள் காப்பகமாகவும் இருந்தன.
- தமிழ்நாட்டிற்குத் தனித்துவம் கொண்ட கட்டட அமைப்புகளை உலகோர்க்கு உரைத்தன.
- சமுதாய பொருளாதார வளர்ச்சிக்கு கோயில் விழாக்கள் அடிகோலின.
- அரிய மூலிகைகளை வளர்த்துப் பாதுகாக்கவும், வழிபாட்டுக்குத் தேவையான பூந்தோட்டங்களையும் கொண்ட நந்தவனங்களைக் கொண்டிருந்தன.
- தமிழ் வளர்க்கும் இடங்களாக, கோயில் வழிபாடு தமிழில் இருந்தது. வழிபாட்டில் தமிழ் இருந்ததால் பக்தியோடு தமிழும் செழித்து வளர்ந்தது.
- சித்தர்களின் சமாதிகள்தான் கோயில்களாக பெரிய அளவில் விளங்கின. அவை மக்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும் இடங்களாகத் திகழ்ந்தன. தியானம் செய்து தன்னை அறியும் இடங்களாக விளங்கின.
இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பல்வேறு நோக்கங்களுடன் மக்களின் வாழ்க்கையோடு கோயில் என்பது ஒட்டியிருந்தது. அவை தொடர்ந்து போற்றப்படவேண்டும்.
|