திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.)
மணக்குடவர் உரை:
தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய உள்ளத்தின் கண் எம்மைச் செல்லவிடாது அதைக் காவல் செய்துகொண்ட காதலர் ; எம் நெஞ்சத்து ஓவாவரல் நாணார் கொல் - தாம் மட்டும் எம்முடைய உள்ளத்தின்கண் இடைவிடாது வருவதற்கு நாணாரோ? ஒருவரைத் தம்மிடத்திற்கு ஒருபோதும் வரவிடாது தடுத்து விட்டுத் தாம் மட்டும் அவரிடத்திற்கு ஓயாது செல்லுதல், நாணுடையார் செயலன்மையின் 'நாணார்கொல்' என்றாள். 'கடி' காவலுணர்த்தும் உரிச்சொல்; இனி, விலக்குப் பொருளது எனினுமாம். 'கொல்' ஐயம்.
கலைஞர் உரை:
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.
Translation
Me from his heart he jealously excludes:
Hath he no shame who ceaseless on my heart intrudes?.
Explanation
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.