விடம்கொதித்து உமிழும் படம்கெழு பகுவாய்க் கண்டல்முன் முளைத்த கடிஎயிற் றரவக் குழுவினுக்கு உடைந்து குளிர்மதி ஒதுங்க தெய்வப் பிறைஇருந்த திருநுதற் பேதையைக் கண்டுகண்டு அரவம் மயில்எனக் கலங்க (5)
நெடுஞ்சடைக் காட்டினை அடும்தீக் கொழுந்தென தலைஏது அலையா நகுதலை தயங்க அணிதலை மாலையை நிறைமதித் திரள்எனப் புடைபுடை ஒதுங்கி அரவுவாய் பிளப்ப ஒன்றினுக்கு ஒன்று கன்றிய நடுக்கொடு (10)
கிடந்தொளி பிறழும் நெடுஞ்சடைப் பெருமான் படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநட வேந்தன் அருகர்ச் சார்ந்துநின்று அருட்பணி அடைப்ப மற்றவன் தன்னை நெடுந்துயில் வருத்தி (15)
இறையவன் குலத்து முறையர் இன்மையால் கருதி தோரை கல்லொடு பிறங்க மெய்யணி அளறாக் கைம்முழம் தேய்த்த பேரன்பு உருவப் பசுக்கா வலனை உலகினில் தமது முக்குறி யாக் (20)
மணிமுடி வேணியும் உருத்திரக் கலனும் நிலவுமிழ் புண்ணியப் பால்நிறச் சாந்தமும் அணிவித் தருள்கொடுத்து அரசன் ஆக்கி அடுமால் அகற்றி நெடுநாள் புரக்க வையகம் அளித்த மணிஒளிக் கடவுள் (25)
நெடுமறிக் கூடல் விரிபுனல் வையையுள் பிடிகுளி செய்யும் களிறது போல மயிலெனும் சாயல் ஒருமதி நுதலியை மருமமும் தோளினும் வரையறப் புல்லி ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை (30)
பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம் தலைநடுக் குற்ற தன்மை போல ஒன்றற அகற்றி உடன்கலந் திலனேல் அன்ன ஊரனை எம்மில் கொடுத்து தேரினும் காலினும் அடிக்கடி கண்டு (35)
நெட்டுயிர்ப்பு எறிந்து நெடுங்கண் நீருகுத்துப் பின்னும் தழுவ உன்னும் அவ்வொருத்தி அவளே ஆகுவள் யானே தவலருங் கருநீர்க் குண்டு அகழுடுத்த பெருநீர் ஆழித் தொல்லுல குழிக்கே. (40)
|