தந்தை என்னும் ஓர் பந்தம்
தாய்மைக்கு நேர் நிகர் சொந்தம்!
உயிரைப் பாலாய் தருபவள் அன்னை
தன்னை யாவுமாய்த் தருபவர் தந்தை!
ஏர் தொடு தோல் மீதும்
பயிர் தொடும் மார் மீதும்
உயிர் கொண்ட நம் உடலை
வான் தொட வளர்ப்பவரே!
கஷ்டங்கள் ஆயிரம் கண்டும்
கண்களில் நீர் வந்து நின்றும்
நம் இஷ்டங்கள் யாவும் ஏற்று
நம்மை இமயம் ஏற்றிடும் தந்தை!
மழை கண்ட மரம் போல
உயிர் கொண்ட உடல் போல
மலர் கண்ட செடி போல
நம்மைக் கண்டு மகிழ்வாரே!
கிழிந்த துணிகளை தான் உடுத்தி
பல புதுத் துணிகளை வாங்கித் தந்து
கஷ்டங்களைத் தனக்குள்ளே புதைத்துவிட்டு
நம்(மை) இஷ்டம்போல வளர்ப்பவர் தந்தை!
கால் வயிறு உணவோடு
வியர்வையின் துணையோடு
பிள்ளையின் நினைவோடு
உழைத்தே தேய்வாரே!
சொல்லவும் வார்த்தை இல்லை
அவர் செய்வதில் அளவும் இல்லை
நம் வாழ்வெனும் மரத்தின் கீழே
ஆணி வேரென நிற்பவர் தந்தை!
ஒவ்வொரு பிள்ளையின் வாழ்விலுமே
தந்தையின் தியாகம் வேர்விடுமே!
தான் படும் கஷ்டங்கள் ஆயிரமே
சொட்டும் கண்ணீரும் அதைக் கண்டு அழுதிடுமே!
தனக்கென்ற ஆசைகள் ஒன்றும் இல்லை
தன் தியாகத்தை வெளியில் சொல்வது இல்லை!
பத்து மாதம் சுமப்பது அன்னை
நம் வாழ்வை நித்தம் மனதில் சுமப்பவர் தந்தை!