|
||||||||
தொடர் அறிமுகம்-1 |
||||||||
அமெரிக்கா வந்து ஏழு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் நான் பார்த்து வியந்த. இங்கு வரும் அனைவரையும் கவர்ந்த. இதுபோல் நம்மூரில் இல்லையே என்று நினைக்கத் தூண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து இங்கே எழுத இருக்கிறேன்.குறிப்பாக . சக தமிழர்களைச் சந்திக்கும்போது பெரும்பாலான நேரம் இங்குள்ள நல்ல விசயங்கள் குறித்து இவைகளை நம் நாட்டில் செயல்படுத்தினால் நன்றாக இருக்குமே என ஏக்கப் பெருமூச்சு விடுவது வழக்கம். இங்கு வரும் நம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்கும்போது அவர்களிடம் இங்குள்ள இந்தியர்கள் நல்ல திட்டங்களையும் அவர்கள் துறை சார்ந்த விஷயங்களையும் ஆர்வமுடன் விளக்கிக் காண்பிப்பார்கள். காரணம். எப்படியாவது இவைகள் இவர்களின் மூலம் நம்நாட்டில் அரசு திட்டங்களாக வந்துவிடாதா என்ற ஆதங்கம்தான்.
நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துரையாடும்போது இந்தியாவைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டால் நேரம் போவதே தெரியாது. எனவே பெரும்பாலான தமிழர்கள் இங்கே வாழ்ந்தாலும் அவர்களின் சிந்தனை முழுவதும் இந்தியாவில்தான் இருக்கிறது. நாம் பிறந்த பூமிக்கு உலகில் உள்ள நல்ல விஷயங்கள் எல்லாம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.
இதைப் படிக்கும் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ள அதிகாரிகள். இவை நம்மூரில் சாத்தியம்தான் என்று நம்பும் பட்சத்தில் அவை திட்டங்களாக வெளிவரும். அல்லது மக்கள் சத்தியின் கூட்டு முயற்சியால் அவை மக்கள் கோரிக்கையாக வெளிவரும்.
அதிகம் சிந்திக்கத்தூண்டிய. ஆதங்கப்படவைத்த பல்வேறு விஷயங்கள் இங்கிருக்கும்பொழுதே ஆராய்ந்து நம்மிடம் உள்ள அமைப்புகளை, அமெரிக்காவின் அமைப்புகளோடு ஒப்பிட்டு அவற்றை இவர்கள் இங்கு எவ்விதம் சத்தியமாக்கினார்கள் என்பதை எழுத வேண்டும் என்ற எண்ணம் பலமுறை எழுந்ததுண்டு. மக்கள் சக்தி இயக்க ஆசிரியர் குழுவிடம் இதுபற்றி தெரிவித்தபோது எழுதுங்கள் அதுவும் இம்மாத இதழிலேயே தொடங்குங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். டாக்டர் M.S. உதயமூர்த்தி அவர்களின் "நம்பு தம்பி நம்மால் முடியும்" பத்திரிகையில் எழுதிய இந்த தொடரை வலைத்தமிழ் இணைய இதழில் தொடர்கிறேன்.
நண்பர்களே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் நம்முடைய அமைப்புகளை , நடைமுறைகளை குறைசொல்வதன்று, மாறாக, இங்கு அமெரிக்காவிலுள்ள நல்ல விஷயங்களை ஆராயவேண்டும். மேலும் நாம் ஏன் அவைகளை நடைமுறைப்படுத்தமுடியாது என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதுதான். வழக்கம்போல் உங்கள் விமர்சனங்களை தவறாமல் எங்களுக்கு எழுதுங்கள். அது இத்தொடரைச் செம்மைப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு விசயத்தினை எடுத்துக்கொண்டு. அவை அமெரிக்காவில் எவ்விதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இங்குள்ள துறை சார்ந்தவர்களின் அனுபவத்தினைத் திரட்டியும் முடிந்தவரை படங்களுடன் வெளியிடலாம் என இருக்கிறேன்.
பாரதி சொன்னதுபோல் “ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் ! கலைச் செல்வங்கள் அனைத்தும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !!”
என்பதற்கிணங்க இன்றைய நம் நாட்டின் முக்கியத் தேவை பணமுதலீடு மட்டுமல்ல. வளர்ந்த நாடுகளுக்குச் சென்று உயர் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் நம்மவர்கள். அவர்களின் துறை தொடர்பான அறிவினை. அனுபவத்தை நம்நாட்டிற்கு அளிக்கவேண்டும் என்பதும் அவசியம். அப்போதுதான் நம் அடுத்த தலைமுறை. வளர்ந்த மேல்நாட்டு சூழலில் வாழ வழி ஏற்படும். குறைந்தபட்சம் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்கும். பல்வேறு பயணக்கட்டுரைகள் பல நாட்டைப்பற்றி வந்துள்ளன. அவற்றில் அந்நாட்டின் பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதி இருக்கிறார்கள். எனவே இங்கே என்ன புதுமையாக எழுத முடியும் என்று எண்ணினேன்.
அமெரிக்காவின் அழகைப்பற்றியோ மற்ற இயற்கைச் செல்வங்களைப்பற்றியோ அல்லது என் அனுபவங்கள் குறித்தோ இல்லாமல், அரசு, அரசுசாராத பல்வேறு துறைகள் எவ்வாறு மக்களுக்குச் சேவை செய்கின்றன ? குறிப்பாக, மக்களின் எண்ணம் எவ்வாறு உள்ளது? ஆராய்ச்சிக் கல்வி எப்படி வாழ்க்கையை ஒட்டி இருக்கிறது? வாடிக்கையாளர் சேவை எப்படி உள்ளது? காவல்துறை எப்படி லஞ்சம் வாங்காமல் செயல்படுகிறது? அரசு சேவைகள் எப்படி தனியார் சேவையுடன் போட்டிபோட்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயல்படுகிறது? அரசு அலுவகங்கள் எப்படி சோர்வின்றி மாதச் சம்பளத்திற்காக – கடமைக்காக வேலை செய்யாமல். பொறுப்புடன் வேலை செய்யமுடிகிறது என்பதைப் பற்றியும், நீதித்துறையின் செயல்பாடு போன்ற பல்வேறு விசயங்களைக் குறித்தும் எழுத இருக்கிறேன்.
இன்று நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்கிறோம். இன்று இந்தியா மிக உன்னதமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளது. உலகில் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இருக்கிறது. எனவே எவ்வித தொய்வுமில்லாமல் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, டாக்டர் அப்துல்கலாம் போன்றவர்களின் கனவை நனவாக்க இந்த இளைஞர்சக்தியை இந்தியா முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் வளர்ந்த மனோபாவத்தை மக்கள் பெறவேண்டும்.வளர்ந்த நாட்டை வழிநடத்தத் தகுதியான அறிவியல் சிந்தனை. தொலைநோக்கு சிந்தனை கொண்ட சுய நலமற்ற தலைவனை நாடு அடையாளம் காண வேண்டும் .வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கும் இதில் மிகவும் முக்கியமானது. எனவே நாம் அனைவரும் “ ஊர்கூடி தேரிழுக்கும் “நேரம் இது. இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு நாம் நம்மை மாற்றத்திற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. நம் காலத்திற்குள் நம்முடைய நாடு வளர்ந்த நாடாவதைக் காண்போம். -தொடரும் -ச.பார்த்தசாரதி |
||||||||
by Swathi on 21 Jan 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|