சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு செல்ல பெண்கள் சிலர் முயற்சி செய்தனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனிடையே ஐயப்பன் கோயிலின் ஐப்பசி மாதப் பூஜை முடிந்து நேற்று நடை அடைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும், இதுவரை 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட பெண்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களையும் ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|