தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக.
இது நோயுண்டாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும்பாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க-தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.
தன்னலம் பற்றியேனும் பிறர்க்குத் தீமை செய்யாதிருக்க என்றவாறு.
கலைஞர் உரை:
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என
எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க
வேண்டும்.