தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.
தேவநேயப் பாவாணர் உரை:
தெள்நீர் அடு புற்கை யாயினும் -தெளிந்த நீர் போல் தெடுதெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழாயினும் ;தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியதுஇல் -தன் உழைப்பினால் வந்த வுணவை உண்ணுவதிலும் மிக இனியது ஒன்றுமில்லை, நொந்து சுமந்து பெற்ற பிள்ளை காக்கைக் குஞ்சுபோற் கருத்திருப்பினும், தாய்க்குத் தன்பிள்ளை நன்பிள்ளையாதல்போல, உழைப்பாளிக்குத்தான் வருந்தியுழைத்த வுழைப்பால் வந்த வுணவு, கேழ்வரகு மாவினாற் காய்ச்சிய தெண்கூழாயினும் தேவரமுதாம். உம்மை இழிவு சிறப்பு.
கலைஞர் உரை:
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
Translation
Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tasteless as the water clear.
Explanation
Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.