தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர். பழிக்கு நாணுவார்.
தேவநேயப் பாவாணர் உரை:
பழிநாணுவார் -பழிக்கு அஞ்சுவார்; தினைத்துணை ஆம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் -தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.
தினை, பனை, என்பன அளவுப்பெயர்கள்; இங்குச் சிறுமை பெருமை பற்றியே வந்தன. உம்மை இழிவு சிறப்பு. 'குற்றம் வகுப் பொருமை. கொள்ளுதல் கொண்டு நீக்குதல்.