தனியன் மன்னுதிரு மந்திரத்தின் வாழ்துவயத் தின்பொருளுந் துன்னுபுகழ்க் கீதைதனிற் சொன்னவெண்ணான் கின்பொருளு மன்னவயற் கச்சியரு ளாளர்திருச் சின்னவொலி யின்னபடி யென்றுரைத்தா னெழில்வேதாந் தாரியனே.
ஏகாந்த மூன்று மொழிலா லுரைசெய்து மகாந்தஞ் செய்தருளும் வள்ளலாய் - சாகாந்த தேசிகனாந் தூப்புற் றிருவேங்க டேசகுரு வாசகமே யெங்களுக்கு வாழ்வு.
பரிச்சின்ன மான விருநா லெழுத்தின்பல் வண்மையெலாம் விரிச்சு நலம்பெற வோதவல் லோர்க்கிந்த மேதினிக்கே மரிச்சின்ன மீளப் பிறவாமல் வாழ்விக்கு மால்வரதர் திருச்சின்ன வோசை யினிமையுண் டோ மற்றைத் தேவருக்கே.
10.1: ஈருலகைப் படைக்கவெண்ணி யிருந்தார் வந்தா ரெழின்மலரோன் றன்னையன்றே யீன்றார் வந்தார் மாருதமண் ணீராகு மாயோர் வந்தார் வானோடெரி தாமாகு மறையோர் வந்தார் சூரியர்தம் முடன்றுலங்கு தூயோர் வந்தார் சுரர்களுக்கன் றமுதருள்சுந் தரனார் வந்தார் வாரிதிசூழ் வையகம்வாழ் வித்தார் வந்தார் வண்மையுடன் வரந்தருவார் வந்தார் தாமே.
10.2: அருமறையை யூழிதனிற் காத்தார் வந்தா ரதுதன்னை யன்றயனுக் களித்தார் வந்தார் தருமவழி யழியாமற் காப்பார் வந்தார் தாமரையா ளுடனிலங்குந் தாதை வந்தார் திருவுரையாய்த் தாம்பொருளாய் நிற்பார் வந்தார் திருவருளாற் செழுங்கலைக டந்தார் வந்தார் மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோர் வந்தார் வானேற வழிதந்தார் வந்தார் தாமே.
10.3: அனைத்துலகுங் காக்குமரு ளாளர் வந்தா ரனைத்துக்கு மதிபதியாய் நிற்பார் வந்தார் தினைத்தனையுந் திருமகளை விடாதார் வந்தார் தேசொத்தார் மிக்காரு மில்லார் வந்தார் நினைக்கநமக் கின்னறிவு தந்தார் வந்தார் நிலைநின்ற வுயிர்தோன்ற நினைந்தார் வந்தா ரெனக்கிவர்நா னிவர்க்கென்ன வினியார் வந்தா ரெழுத்தொன்றிற் றிகழநின்றார் வந்தார் தாமே.
10.4: நாம்வணங்கத் தாமிணங்கா நிற்பார் வந்தார் நம்மையடைக் கலங்கொள்ளு நாதர் வந்தார் நாமெமக்காம் வழக்கெல்லா மறுத்தார் வந்தார் நமக்கிதுவென் றுரையாமல் வைத்தார் வந்தார் சேமமெண்ணி யெம்மையன்பர்க் கடைந்தார் வந்தார் செழுந்தகவாற் றிண்சரணா மீசர் வந்தார் தாமனைத்துந் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார் தமக்கேயா யெமைக்கொள்வார் வந்தார் தாமே.
10.5: உலகெல்லா முள்ளேவைத் துமிழ்ந்தார் வந்தா ருலகுடம்பாய்த் தாமுயிராய் நின்றார் வந்தா ரலைகடலா யானந்த மடைந்தார் வந்தா ரளவில்லா வருளாழிப் பெருமாள் வந்தார் திலகமெனுந் திருமேனிச் செல்வர் வந்தார் செழுங்குணங்க ளிருமூன்று முடையார் வந்தா ரிலகுசுடர் முழுநலமா மினியார் வந்தா ரெல்லார்க்குங் கதியானார் வந்தார் தாமே.
10.6: அருளாலே விலங்கிரண்டு மழிப்பார் வந்தா ரஞ்சிறையைக் கழித்தருளு மன்பர் வந்தார் மருள்வாரா வகைநம்மைக் காப்பார் வந்தார் வானேற வழிநடத்தி வைப்பார் வந்தார் தெருளாருந் தெளிவிசும்பு தருவார் வந்தார் திண்கழற்கீழ் வாழநமக் கருள்வார் வந்தார் பொருவானி லடிமைநம்மைக் கொள்வார் வந்தார் பிரியாமற் காத்தளிப்பார் வந்தார் தாமே.
10.7: அகலகிலாத் திருமகளா ரன்பர் வந்தா ரடியிரண்டு மாறாகத் தந்தார் வந்தார் புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார் பொன்னுலகிற் றிருவுடனே திகழ்வார் வந்தா ரகிலமெலா மானந்த மானார் வந்தா ரடியிணைக்கீழ் வைத்தடிமை கொள்வார் வந்தார் பகனடுவே யிரவழைக்க வல்லார் வந்தார் பகலொன்றா யிரவழித்தார் வந்தார் தாமே.
10.8: தருமன்விடத் தாந்தூது போனார் வந்தார் தரணிபொறாத் திண்பாரந் தவிர்த்தார் வந்தா ரருமறையின் பொருளனைத்தும் விரித்தார் வந்தா ரஞ்சினநீ யென்னையடை யென்றார் வந்தார் தருமமெலாந் தாமாகி நிற்பார் வந்தார் தாமேநம் வினையனைத்துந் தவிர்ப்பார் வந்தார் பரமெனது நீபுலம்ப லென்றார் வந்தார் பார்த்தனுக்குத் தேரூர்ந்தார் வந்தார் தாமே.
10.9: வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார் வந்தார் மல்லர்மத கரிமாள மலைந்தார் வந்தார் கஞ்சனைப்போர் கடுஞ்சினத்தாற் கடிந்தார் வந்தார் கண்ணுதன்முன் வாணன்றோள் கழித்தார் வந்தார் வெஞ்சொறர வீடுகொடுத் துகந்தார் வந்தார் விலக்கில்லா வழிநடத்த விரைந்தார் வந்தார் பஞ்சவரைப் பலவகையுங் காத்தார் வந்தார் பாஞ்சாலி குழன்முடித்தார் வந்தார் தாமே.
10.10: அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தா ரானைபரி தேரின்மே லழகர் வந்தார் கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார் கருதவரந் தருதெய்வப் பெருமாள் வந்தார் முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார் மூலமென வோலமிட வல்லார் வந்தா ருத்தரவே திக்குள்ளே யுதித்தார் வந்தா ரும்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே.
10.11: மறைத்தலையி லிசையெழுத்தில் வணங்கும் வாக்கின் மந்திரத்தி னாலெழுத்தாந் திருநா மத்தி னிறைத்திலகு வேற்றுமையி லிரண்டா மொன்றி னெடுமாறன் கீதையெலா நிறைந்த சொல்லி லுறைத்தவர்கண் டுரைத்தபொரு ளான வெல்லா முயர்விரத வருளாளப் பெருமா டேசின் றிறத்திலியை திருச்சின்ன மாலை பத்துஞ் செவிக்கினிதாஞ் சிற்றின்ப மிசையா தார்க்கே.
ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம: சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
அடிவரவு: ஈருலகு, அருமறை, அனைத்துலகு, நாம்வணங்க, உலகெல்லாம், அருளாலே, அகலகில்லா, தருமன், வஞ்சனை, அத்திகிரி, மறை, கேசவனாய்.
|