உலகப்பொதுமறை திருக்குறள் பல்வேறு மொழிகளில் பல்வேறு பரிணாமங்களில் உலகம் முழுதும் நாளும் சென்றுகொண்டுள்ளது. இது நம் மொழிக்கும், நமக்கும் மிகப்பெரிய கவுரவம். இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் பல அறிஞர்கள் அதற்கு பல்வேறு கோணத்தில் உரை எழுதிக்கொண்டுள்ளார்கள் என்றால் இதன் பொருளும், அதன் ஆழமும் எந்த காலத்திற்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துக்களை உள்ளடக்கி இருப்பதால்தான் என்றால் மிகையாகாது.
இதுவரை பல்வேறு மொழியில் நூல்,இசை என்று பல்வேறு வடிவில் திருக்குறள் வந்திருப்பினும் 1330 குறளையும் ஓவியமாக நாம் பார்த்ததில்லை. அந்த அரிய முயற்சியை திருப்பூரை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற திரு.நடராசன் என்ற ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மிக நுட்பமாக 1330 குறளையும் ஓவியமாக தீட்டியுள்ளார். இவரை வலைத்தமிழ் இணையதளத்திற்காக உரையாடியபோது இவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த அரிய முயற்சிக்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி கடுமையாக உழைத்திருக்கிறார். முதலில் ஒவ்வொரு குறளையும் உள்வாங்கி அதை ஓவியமாக வரைவது ஒரு புது முயற்சியாக இருந்ததாக குறிப்பிடுகிறார். காரணம் இன்பத்துப்பால் போன்ற இடங்களில் ஒரு கோடு மாறினாலும் அதன் பொருள் மாறிவிடும் என்பதால் மிகவும் நுணுக்கமாகக் வரையவேண்டி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் இந்த முயற்சியை ஆரம்பித்த நாள் முதல் தான் குறளில் நனைந்தேன் என்பதைவிட வள்ளுவருடன் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். 1330 குறளையும் வரைந்து முடித்தபோது அது 13 தொகுதிகளாக வந்திருப்பதாகவும், அதற்கு "திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை" என்று மகிழ்ச்சி பொங்க விவரிக்கிறார்.
மேலும் இந்த ஓவியங்களை நூலாகவும், குருந்தகடாகவும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இவரது இந்த அறிய பணி திருக்குறளை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க மிகவும் பேருதவியாக இருக்கும் என்று வாழ்த்தி விடைபெற்றோம். இவரது ஓவியங்களை வலைத்தமிழ் இணையத்தில் கீழ்காணும் சுட்டியில் காணலாம்.http://www.valaitamil.com/thirukkural-art-photo253-527-0.html
இவருடன் தொடர்பு கொள்ள: 99762 55579, 0421-2375124.
|