|
||||||||
திருக்குறள் பொருட்பால் - முனைவர் பெ.கி. பிரபாகரன் |
||||||||
![]() "திருக்குறள்" பொருட்பால்
முனைவர் பெ.கி. பிரபாகரன் கலைஞன் பதிப்பகம் .முதல் பதிப்பு 2016 .விலை ரூபாய் 96. மொத்த பக்கங்கள் 140
இது ஒரு திருக்குறள் விளக்க நூல் .திருக்குறள் சிறப்பு பதிவு.
உலகில் செம்மொழி என்று சிறப்பிக்கப்படும் தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், சீனம், எபிரேயம், ஹீப்ரு. லத்தின் ஆகியவற்றில் சிறப்பு மிக்க இலக்கிய நூல்கள் இன்றவும் மக்களிடையே நிலைத்து நிற்பன. இத்தொன்மையான செம்மொழிகளில் தமிழ்மொழியின் பேச்சு, எழுத்து வழக்கு ஆகிய நிலைகளை இழக்காது பழமையையும் பாதுகாத்துப் புதுமையையும் போற்றி உலக மொழிகளிடையே தன் பெருமையையும் புகழையும் இன்றுவரை நிலைநாட்டி வருகிறது. பிற செம்மொழிகளுக்கு இல்லாத தகுதியைத் தமிழ் பெற்றுள்ளதற்கு இதுவே காரணம்.
தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் தொடங்கி இன்று வரையிலான இலக்கியங்கள் பாடுபொருளைத் தமிழர்தம் வாழ்வியல் நெறியிலிருந்தும். அவர்தம் நாகரிகப் பண்பாட்டுப் பின்னணியிலிருந்தும் தொடர்ச்சியான பாதையில் இயங்கிக் கொண்டு வந்துள்ளன. அக்கால இலக்கியத்தை அதன் செம்மாந்த நடையை இலக்கிய நயங்களை இன்றும் படித்தும் சுவைத்தும் அதன் அழகியலில் தோய்ந்தும் இன்புறமுடிகிறதெனில் அதற்குத் தமிழின் இலக்கிய இலக்கண வளத்தின் செழுமையே காரணமாகும்.
சங்க இலக்கியம் அகம், புறம் என்ற பாடுபொருள் தமிழர்க்குரியது. எனினும், அது இன்றளவும் தொடர்ச்சியாக இலக்கியத்தில் வெவ்வேறு கோணங்களில் சொல்லப்பட்டு வந்துள்ளது. காலங்கள் பல கடந்தாலும் அந்தப் பாடுபொருள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தின் உயிர்ப்பாக விளங்கி வருகிறது.
உலக இலக்கியத் தளத்திற்குத் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்வதற்கும் அப்பாடுபொருள் காரணமாக Universal Theme இருந்துள்ளது.
முத்தமிழ் என்னும் போது தமிழில் அதில் கலை, ஓவியம், இசை, கூத்து மற்றும் பிற நுண்கலைகள் அடங்கி விடுகின்றன. அவற்றை அறிந்து கொள்ள இலக்கியம் பயன்படுகிறது. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரைக்கும் கடினமானவற்றிலிருந்து மெல்ல மெல்லத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. இக்காலத்திற்கேற்ப மொழியும் இலக்கியமும் இலகுவாக நடைபயில்கிறது.
தமிழ் இலக்கியம் தமிழர்க்கு மட்டுமின்றி உலகினர்க்கு என்றளவில் ஓர் உலகப் பொதுமையைக் Universality கொண்டதால்தான் அது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கருத்தினை மொழிந்தது.
ஆசிரியர் தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.
" பச்சைப் பட்டுடுத்தித் தரையுடன் ஒட்டிக் கிடக்கும் பசும்புல்லைக் காண்கிறார் கபிலர். அந்தச் சிறுபுல்லின் நெற்றியில் தினையின் அளவைக் காட்டிலும் சிறியதான பனித்துளி! அதனை உற்றுநோக்குகிறார். அந்தப் பனித்துளியின் அளவுக்குள்ளே ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் காட்சி அளிக்கிறது! அந்தக் காட்சி கபிலரின் சிந்தனையைத் தூண்டுகிறது.
"புல்லின் உச்சியில் இருக்கும் சிறிய நீர்த்துளி, அருகே நிற்கும் பெரிய பனைமரத்தை அப்படியே காட்டுகின்றதே! இதே போலத்தான் வள்ளுவனின் இரண்டடிக் குறட்பாவுக்குள்ளும் இந்த உலகத்துக்குத் தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது!" என வியக்கிறார். அந்த வியப்பின் வெளிப்பாடு, "தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளவு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி" என்ற பாராட்டு மாலையாக மலர்கின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கை நெறி வகுத்துக்காட்டி வள்ளுவரால் வழங்கப்பெற்ற அறிவுக் கருவூலம் திருக்குறள். சமயங்கடந்த, இனம் கடந்த, மொழி வரம்புகளைக் கடந்த பொதுமை நோக்குடைய அறநூல் திருக்குறள். தமிழர்தம் சிந்தனை வளர்ச்சிக்கும், சீரிய பண்பாட்டு நெறிகளுக்கும் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக விளங்கும் நூல் திருக்குறள். செத்தபின் சிவலோகம், வைகுந்தம் என்று கூறியவர்களுக்கு, இந்த உலகிலேயே இன்ப வாழ்வு உண்டு. சொர்க்க வாழ்வு உண்டு, உண்மையான வாழ்வு உண்டு என விளக்கிய நூல் திருக்குறள். சிந்திக்கச் சிந்திக்கப் பெருகி வரும் எண்ணங் களைத் தரக்கூடிய கருத்துச் சிந்தனைகளைச் சுருக்கமான வடிவத்தில், குறட்பா வடிவில் கொண்டு திகழும் நூல் திருக்குறள்.
வேற்றுமைகளைப் பல்வேறு முறைகளில் உண்டாக்கிக் கொண்டிருக்கும் உலகியல் வாழ்வில், ஒற்றுமையினை நிலை நிறுத்தி ஒன்றுபட்டு வாழ்வதற்கு வழிவகுக்கும் நூல் திருக்குறள். உண்டவர்களுக்கு இறவாத இன்பத்தைத் தருவது 'அமிழ்தம்' என்பார்கள். அதே போன்று, கற்று உணர்ந்தவர்களுக்கு அழியா அமைதியினையும், அறிவினையும், இன்பத்தினையும் கொடுத்து வருவது திருக்குறள். மனித உள்ளத்தில் ஊக்கத்தை ஊட்டி, முயற்சி என்னும் குன்றின்மேல் நிறுத்தி, வாழ்வாங்கு வாழ வழி வகுக்கின்றது திருக்குறள். காலச் சூழ்நிலைகளால் தளர்ந்திருக்கும் உள்ளத்தில் ஊக்கத்தைப் புகுத்தி, எதற்கும் அஞ்சும் கவலையை நீக்கி, வாழ்கின்ற வாழ்க்கையினைக் காட்டுகின்றது; மனக்கவலைக்கு மாமருந்தாக அமைகின்றது திருக்குறள். மனித வாழ்வின் மேன்மைகளை, வாழ்வியல் நெறிகளை மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்துக் காட்டிய நூல் திருக்குறள்.
உலகில் வாழும் மனிதத் தன்மை நிறைந்த உள்ளங்களில் தோன்றக்கூடிய எண்ணங்கள் அனைத்தையுமே பற்பல இடங்களில் குறள் எடுத்துக்காட்டுகின்றது. குறளுக்கு ஒப்பாகக் கூறுவதற்கோ அல்லது குறளைவிட உயர்வாகக் கூறுவதற்கோ உலகில் இதுவரை நூல் எதுவும் தோன்றவில்லை என்பது உண்மை. ஒரு நூலின் பெருமையினைப் புகழ்ந்து பாடுவதற்குப் பலர்கூடி மற்றொரு நூல் சமைத்தனர் என்ற சிறப்பு அக்காலத்தில் திருக்குறளுக்கு மட்டுமே உண்டு.
இன்று திருக்குறள் உலகெங்கும் அறியப்பட்டும், பலநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டும், பலநாட்டு அறிஞர்களால் போற்றப்பெற்றும் வருகின்றது. இந்த நிலை உயர்வுக்கு நூலின் கருத்தே முற்றிலும் காரணமாக அமைகின்றது. மகாகவி பாரதியார், 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாராட்டி மகிழ்ந்தார். தமிழகம் வள்ளுவரைப் பெற்றெடுத்து உலகிற்குத் தந்தது. அந்தச் செயலுக்கு மாற்றாக, வான்புகழை வையத்திடமிருந்து தமிழகம் பெற்றுக்கொண்டது என்ற கருத்துப் பொதிந்த பாரதியின் பாடல், குறளுக்கு - திருக்குறளுக்குச் சூட்டப்பட்ட மாபெரும் வைரக்கிரீடம். வள்ளுவரின் வான்மறைக்கு முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், தமிழ்மறை, பொதுமறை, முதுமொழி என வேறு பல பெயர்களும் வழக்கில் உள்ளன. குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மர் முன்னரே உரை வகுத்துள்ளனர்.
காலந்தோறும் அறிஞர் பலர் தொடர்ந்து உரை எழுதி வருகின்றனர். உரைக்கொத்து. உரைவளம். உரைக்களஞ்சியம் எனக்குறளுக்கு உரைகள் பல்கிப் பெருகி வருகின்றன. வள்ளல் இராமலிங்க அடிகள், திருக்குறள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், திருக்குறள் வகுப்புகள் தொடங்க மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்கினார். திருக்குறள் என்றால், புலவர்களும் படித்தவர்களும் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய நூல் என்றிருந்ததை, எழுதப்படிக்கத் தெரியாத பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், சிரிக்கச் சிரிக்கப் பேசி, சிந்தனையைத் தூண்டிக் குறளைப் பரப்பினார் திருக்குறள் முனுசாமி. அதனால் 'திருக்குறளார்' என்றே அழைக்கப்பட்டார்.
அறிஞர் அண்ணா திருக்குறள் பரப்பும் பணியினைத் தம் வாழ்நாள் தொண்டாகவே கருதினார்"என்று கூறி இருக்கிறார் தனது முன்னுரையில் பெ.கி. பிரபாகரன் அவர்கள்.
***"
திருக்குறள் மனித சமுதாயத்தின் மேன்மையைக் கூறுவதால்தான் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக்கூடிய ஒரு பெரு நூலாக - சக்தியாக விளங்குகின்றது.
இந்த வரிசையில், குறளுக்கு எளிய நடையில், குறிப்பாகப் பொருட்பாலுக்கு மட்டும் உரை வழங்கி சிறப்பிக்கிறார் ஆசிரியர்.
-திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
|
||||||||
![]() |
||||||||
by Swathi on 31 Oct 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|