LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருமந்திரம்

ஒன்பதாம் தந்திரம்

 

1. குருமட தரிசனம்
2649
பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1
2650
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2
2651
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3
2652
இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4
2653
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5
2654
அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6
2655
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7
2. ஞானகுரு தரிசனம்
2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 1
2657
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே. 2
2658
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. 3
2659
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 4
2660
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. 5
2661
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. 6
2662
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக் 
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. 7
2663
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. 8
2664
தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. 9
2665
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. 10
2666
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே. 11
2667
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. 12
2668
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை
விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. 13
2669
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. 14
2670
வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. 15
2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. 16
2672
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே. 17
2673
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. 18
2674
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 19
3. பிரணவ சமாதி
2675
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்
சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 1
2676
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. 2
2677
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே. 3
2678
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. 4
2679
மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. 5
2680
சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 6
4. ஒளி
2681
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே. 1
2682
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 2
2683
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே. 3
2684
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 4
2685
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 5
2686
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி
துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 6
2667
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 7
2688
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே. 8
2689
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. 9
2690
உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 10
2691
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 11
2692
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 12
2693
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 13
2694
சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. 14
2695
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 15
2696
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 16
2697
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 17
5. தூல பஞ்சாக்கரம்
2698
ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 1
2699
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2
2700
அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்
சிகராதி தான்சிவ வேதமே கோணம்
நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 3
2701
வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 4
2702
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது
மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்
அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 5
2703
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்
சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 6
2704
தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 7
2705
குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 8
2706
வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 9
2707
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுரை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 10
2708
பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 11
6. சூக்கும பஞ்சாக்கரம்
2709
எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளிய ஒதிச்சிவாயநம என்னும்
குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1
2710
சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2
2711
சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்
சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவமது அகன்று பரசிவன் ஆமே. 3
2712
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்
தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. 4
2713
நமாதி நனாதி திரோதாயி யாகித்
தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்
சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. 5
2714
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை
திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்
அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. 6
2715
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7
2716
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. 8
2717
நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அது அற்றால்
அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9
7. அதிசூக்கும பஞ்சாக்கரம்
2718
சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1
2719
செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்
அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு
துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 2
2720
அங்கமும் ஆகம வேதமது ஓதினும்
எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 3
2721
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 4
8.1 திருக்கூத்து தரிசனம்
2722
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1
2723
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2
8.2 சிவானந்தக் கூத்து
2724
தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 3
2725
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 4
2726
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. 5
2727
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே. 6
2728
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 7
2729
வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 8
2730
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 9 
2731
தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 10
8.3 சுந்தரக் கூத்து
2732
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்
கண்டம் கரியான் கருணை திருவுருக்
கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 11
2733
கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்
திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை
வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 12
2734
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 13
2735
அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 14
2736
ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 15
2737
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 16
2738
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 17
8.4 பொற்பதிக் கூத்து
2739
தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 18
2740
அடிஆர் பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். 19
2741
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 20
2742
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21
2743
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 22
2744
விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 23
2745
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 24
2746
காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 25
2747
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 26
2748
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 27
8.5 பொற்றில்லைக்கூத்து
2749
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28
2750
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 29
2751
ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 30
2752
கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 31
2753
மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 32
2754
இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 33
2755
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34
2756
நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 35
2757
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 36
2758
ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 37
2759
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38
2760
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 39
2761
இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40
8.6 அற்புதக் கூத்து
2762
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவுரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே 41
2763
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே
உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 42
2764
நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43
2765
வளிமேகம் மின்வில்லு வானகஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 44
2766
தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. 45
2767
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 46
2768
இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 47
2769
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 48
2770
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 49
2771
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 50
2772
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாமே. 51
2773
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 52
2774
ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 53
2775
அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 54
2776
கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 55
2777
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 56
2778
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 57
2779
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 58
2780
அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்
தங்குஉ பயந்தரு நீல மும்உடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 59
2781
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அகந் தானே. 60
2782
ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 61
2783
ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 62
2784
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. 63
2785
தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே. 64
2786
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 65
2787
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 66
2788
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 67
2789
தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 68
2790
இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 69
2791
சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 70
2792
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமம் சிவநாட மாமே. 71
2793
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 72
2794
கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள்
வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்
தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 73
2795
நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றோடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 74
2796
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75
2797
திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்
திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 76
2798
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே. 77
2799
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 78
2800
தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப் 
பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 79
2801
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 80
2802
சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே. 81
2803
தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே. 82
9. ஆகாசப் பேறு
2804
உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1
2805
பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2
2806
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே. 3
2807
பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4
2808
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5
2809
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6
2810
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயில்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7
2811
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே. 8
2812
புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசம்எம் ஆதி அறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி
சகத்துளா காசம் தானம்ச மாதியே. 9
10. ஞானோதயம்
2813
மனசந் தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1
2814
கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2
2815
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3
2816
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4
2817
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5
2818
விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6
2819
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்
ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7
2820
நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8
2821
ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்
ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9
2822
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10
2823
காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11
2824
ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12
11. சத்திய ஞானானந்தம்
2825
எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்
தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 1
2826
தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 2
2827
மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை
அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது
இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 3
2828
சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொருபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 4
2829
உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை
தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்
மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 5
2830
நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே. 6
2831
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபடி உள்புகச்
சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 7
2832
அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 8
2833
மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்
சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 9
2834
சிவமாய் அவமான மும்மலம் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே. 10
12. சொரூப உதயம்
2835
பரம குரவன் பரம்எங்கு மாகித்
திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று
நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்துநின் றானே. 1
2836
குலைக்கின்ற நீரின் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 2
2837
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே. 3
2838
சமயச் சுவடும் தனையறி யாமல்
சுமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 4
2839
மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு
வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 5
2840
உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 6
2841
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 7
2842
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 8
2943
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக்குரவன் சுகோதயத் தானே. 9
2944
உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்
கரையற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரம தாக
உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 10
2845
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 11
2846
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நான்என லாமே. 12
13. ஊழ்
2847
செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1
2848
தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2
2849
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 3
2850
வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்
கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்
நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 4
2851
ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்
ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே. 5
2852
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே. 6
14. சிவ தரிசனம்
2853
சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1
2854
வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2
2855
பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்
தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 3
15. சிவ சொரூப தரிசனம்
2856
ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை
வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 1
2857
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணரும் அவனே புலவி அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2
2858
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்
முன்னி அவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 3
2859
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 4
2860
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 5
2861
பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல
தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்
அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 6
2862
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்
சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. 7
2863
துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8
16. முத்தி பேதம், கரும நிருவாணம்
2864
ஓதிய முத்தியடைவே உயிர்பர
பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 1
2865
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2
17. சூனிய சம்பாஷணை
2866
காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான்இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 1
2867
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2
2868
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3
2869
வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 4
2870
ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 5
2871
பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. 6
2872
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்
நாஅணைகோலி நடுவில் செறுஉழார்
காலணை கோலிக்களர்உழு வாரே. 7
2873
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 8
2874
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 9
2875
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10
2876
தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 11
2877
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 12
2878
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 13
2879
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 14
2880
களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 15
2881
கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 16
2882
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 17
2883
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. 18
2884
ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 19
2885
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 20
2886
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 21
2887
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 22
2888
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23
2889
இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24
2890
ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25
2891
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26
2892
குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27
2893
காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி
கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவனை யாமே. 28
2894
கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 29
2895
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 30
2896
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31
2897
கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்
சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற
பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 32
2898
இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 33
2899
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 34
2900
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35
2901
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 36
2902
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்
கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 37
2903
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 38
2904
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 39
2905
ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே. 40
2906
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 41
2707
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே. 42
2908
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 43
2909
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 44
2910
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 45
2911
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 46
2912
கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. 47
2913
உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி
தழுவி வினைசெய்து தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே. 48
2914
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. 49
2915
தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50
2916
முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 51
2917
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 52
2918
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 53
2919
மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 54
2920
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 55
2921
கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 56
2922
வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. 57
2923
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 58
2924
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 59
2925
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 60
2926
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 61
2927
பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 62
2928
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 63
2929
வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 64
2930
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 65
2931
போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 66
2932
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. 67
2933
தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 68
2934
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 69
2935
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே. 70
18. மோன சமாதி
2936
நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 1
2937
காட்டும் குறியும் கடந்த அக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2
2938
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 3
2939
மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. 4
2940
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 5
2941
உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 6
2942
கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் 
தொண்டர் முகந்த துறையறி யோமே. 7
2943
தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 8
2944
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. 9
2945
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே. 10
2946
கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே. 11
2947
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. 12
2948
விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 13
2949
வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே. 14
2950
அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. 15
2951
தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே. 16
2952
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. 17
2953
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 18
19. வரையுரை மாட்சி
2954
தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1
2955
உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 2
2956
மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 3
20. அணைந்தோர் தன்மை
2957
மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 1
2958
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2
2959
ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. 3
2960
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. 4
2961
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. 5
2962
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. 6
2963
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. 7
2964
பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. 8
2965
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. 9
2966
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. 10
2967
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே. 11
2968
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே. 12
2969
சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. 13
2970
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. 14
2971
சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. 15
2972
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. 16
2973
என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. 17
2974
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. 18
2975
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. 19
2976
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. 20
2977
உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. 21
2978
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே. 22
2979
ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. 23
2980
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. 24
2981
மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. 25
21 தோத்திரம்
2982
மாயனை நாடி மனநெடும் தேரெறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்
காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. 1
2983
மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே. 2
2984
முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே. 3
2985
புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. 4
2986
பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5
2987
நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. 6
2988
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. 7
2989
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. 8
2990
வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. 9
2991
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. 10
2992
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 11
2993
அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. 12
2994
வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. 13
2995
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. 14
2996
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. 15
2997
வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. 16
2998
விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. 17
2999
மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே. 18
3000
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. 19
3001
உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே. 20
3002
பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்
பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. 21
2903
அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்கும் தானே பாராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே. 22
2904
முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்
அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 23
2905
ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. 24
3006
அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. 25
3007
உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம்முழு பொன்னிற மாகிநின் றானே. 26
3008
பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே. 27
3009
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே. 28
3010
திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்
மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 29
3011
அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி
இவன்தான் எனநின்று எளயனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனு மாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 30
3012
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. 31
3013
படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 32
3014
ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவி நின் றானே. 33
3015
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை
நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 34
3016
உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 35
3017
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 36
3018
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே. 37
3219
உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 38
3020
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே. 38
3021
இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே. 40
3022
உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 41
3023
தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே. 42
3024
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே. 43
3025
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. 44
22. சர்வ வியாபி
3026
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதுஎய்தும்
சாயும் தனது வியாபகம் தானே. 1
3027
நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை
நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 2
3028
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3
3029
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 4
3030
உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. 5
3031
பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு
மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே. 6
3032
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்
ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. 7
3033
நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரல் லானே. 8
3034
செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி
ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. 9
3035
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலனும் அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 10
3036
புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 11
3037
விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 12
3038
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே. 13
3039
புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே. 14
3040
உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 15
3041
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. 16
3042
இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 17
3043
பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 18
3044
அதுஅறி வானவன் ஆதிப் புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 19
3045
நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே. 20
3046
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. 21
23. வாழ்த்து
3047
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1.
ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.
திருமூலர் திருமந்திரம் முற்றிற்று

 

1. குருமட தரிசனம்

 

2649

பலியும் அவியும் பரந்து புகையும்

ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்

குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்

தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1

 

2650

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை

அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்

அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்

அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2

 

2651

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்

கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி

தேட அரியன் சிறப்பிலி எம்இறை

ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3

 

2652

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்

இயம்புவன் சித்தக் குகையும் இடமும்

இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்

இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4

 

2653

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்

அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி

அகம்பர மாதனம் எண்எண் கிரியை

சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5

 

2654

அகமுக மாம்பீடம் ஆதார மாகும்

சகமுக மாம்சத்தி யாதன மாகும்

செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்

அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6

 

2655

மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்

காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே

தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்

ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7

 

2. ஞானகுரு தரிசனம்

 

2656

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்

கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்

வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்

பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 1

 

2657

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி

அரிய பரசிவம் யாவையும் ஆகி

விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே

பெரிய குருபதம் பேசஒண் ணாதே. 2

 

2658

ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்

வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்

காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்

சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. 3

 

2659

கருடன் உருவம் கருதும் அளவில்

பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்

குருவின் உருவம் குறித்த அப் போதே

திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 4

 

2660

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்

அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு

அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்

அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. 5

 

2661

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்

மான்ற அறிவு மறிநன வாதிகள்

மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற

ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. 6

 

2662

சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக் 

கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்

பந்தம் இலாத பளிங்கின் உருவினள்

பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. 7

 

2663

மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ

நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்

சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க

வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. 8

 

2664

தானான வண்ணமும் கோசமும் சார்தரும்

தானாம் பறவை வனமெனத் தக்கன

தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்

தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. 9

 

2665

மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி

உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்

கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு

அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. 10

 

2666

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்

பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு

நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்

தலைப்பட லாகும் தருமமும் தானே. 11

 

2667

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்

சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்

தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்

கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. 12

 

2668

தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை

விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க

அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை

நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. 13

 

2669

நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி

நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்

திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே

புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. 14

 

2670

வந்த மரகத மாணிக்க ரேகைபோல்

சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்

இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே

சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. 15

 

2671

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்

கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது

மண்ணு நீரனல் காலொடு வானுமாய்

விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. 16

 

2672

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்

பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்

பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு

உரிய பதியும்பா ராக்கி நின்றானே. 17

 

2673

அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்

தம்பர மல்லது தாமறியோம் என்பர்

உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்

எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. 18

 

2674

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்

நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்

தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்

போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 19

 

3. பிரணவ சமாதி

 

2675

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை

பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்

சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்

மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 1

 

2676

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்

ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. 2

 

2677

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்

ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்

ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன

ஓங்கார சீவ பரசிவ ரூபமே. 3

 

2678

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்

அருக்கம் சராசரம் ஆகும் உலகில்

தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி

சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. 4

 

2679

மலையும் மனோபவம் மருள்வன ஆவன

நிலையில் தரிசனம் தீப நெறியாம்

தலமும் குலமும் தவம்சித்த மாகும்

நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. 5

 

2680

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு

ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்

கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து

ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 6

 

4. ஒளி

 

2681

ஒளியை அறியில் உருவும் ஒளியும்

ஒளியும் உருவம் அறியில் உருவாம்

ஒளியின் உருவம் அறியில் ஒளியே

ஒளியும் உருக உடனிருந் தானே. 1

 

2682

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்

அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்

பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே

இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 2

 

2683

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்

துளங்கொளி பெற்றன சோதி யருள

வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு

களங்கொளி செய்து கலந்து நின்றானே. 3

 

2684

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி

துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்

வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி

விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 4

 

2685

மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்

பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்

நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்

மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 5

 

2686

மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி

பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி

துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்

உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 6

 

2667

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து

துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்

உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற

வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 7

 

2688

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்

துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்

அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்

களங்கொளி ஈசன் கருத்தது தானே. 8

 

2689

இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்

துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி

விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி

உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. 9

 

2690

உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்

வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி

விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி

வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 10

 

2691

விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த

துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்

களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட

விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 11

 

2692

போது கருங்குழற் போனவர் தூதிடை

ஆதி பரத்தை அமரர் பிரானொடும்

சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி

நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 12

 

2693

உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது

பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்

கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்

விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 13

 

2694

சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே

படருறு காட்சிப் பகலவன் ஈசன்

அடருறு மாயையின் ஆரிருள் வீசில்

உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. 14

 

2695

ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்

அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்

களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி

ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 15

 

2696

ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற

தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்

பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற

வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 16

 

2697

தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்

தானே யிருக்கும் அவனென நண்ணிடும்

வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்

பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 17

 

5. தூல பஞ்சாக்கரம்

 

2698

ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்

ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்

ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 1

 

2699

அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி

உகார முதலாக ஓங்கி உதித்து

மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி

நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2

 

2700

அகராதி ஈரெண் கலந்த பரையும்

உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்

சிகராதி தான்சிவ வேதமே கோணம்

நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 3

 

2701

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி

ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்

தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்

ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 4

 

2702

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்

கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது

மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்

அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 5

 

2703

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்

ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்

சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்

வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 6

 

2704

தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று

உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்

வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்

துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 7

 

2705

குருவழி யாய குணங்களில் நின்று

கருவழி யாய கணக்கை அறுக்க

வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு

அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 8

 

2706

வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது

செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்

குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்

குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 9

 

2707

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று

துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று

மஞ்சு தவழும் வடவரை மீதுரை

அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 10

 

2708

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது

இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்

பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்

அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 11

 

6. சூக்கும பஞ்சாக்கரம்

 

2709

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை

ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்

தெளிய ஒதிச்சிவாயநம என்னும்

குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1

 

2710

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை

அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்

சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர

அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2

 

2711

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்

சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை

சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்

பவமது அகன்று பரசிவன் ஆமே. 3

 

2712

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்

ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்

தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்

ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. 4

 

2713

நமாதி நனாதி திரோதாயி யாகித்

தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்

சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே

நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. 5

 

2714

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்

ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை

திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்

அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. 6

 

2715

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்

சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்

சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்

சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7

 

2716

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே. 8

 

2717

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்

பவமது தீரும் பரிசும்அது அற்றால்

அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9

 

7. அதிசூக்கும பஞ்சாக்கரம்

 

2718

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை

அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1

 

2719

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்

அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு

துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை

நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 2

 

2720

அங்கமும் ஆகம வேதமது ஓதினும்

எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது

சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்

அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 3

 

2721

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே

விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை

எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்

எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 4

 

8.1 திருக்கூத்து தரிசனம்

 

2722

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி

எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்

தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1

 

2723

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்

சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2

 

8.2 சிவானந்தக் கூத்து

 

2724

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்

தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்

ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு

ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 3

 

2725

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்

ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்

ஆனந்தம் ஆக அகில சராசரம்

ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 4

 

2726

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்

அளியார் சிவகாமி யாகும் சமயக்

களியார் பரமும் கருதுறை யந்தக்

தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. 5

 

2727

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்

ஆன நடமாடி ஐங்கரு மத்தாக

ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே

தேன்மொழி பாகன் திருநட மாடுமே. 6

 

2728

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட

மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட

தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து

ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 7

 

2729

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்

கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்

பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட

நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 8

 

2730

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்

வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்

ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்

போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 9 

 

2731

தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்

மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்

தாபதர் சத்தர் சமயம் சராசரம்

யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 10

 

8.3 சுந்தரக் கூத்து

 

2732

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்

உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்

கண்டம் கரியான் கருணை திருவுருக்

கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 11

 

2733

கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்

நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்

திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை

வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 12

 

2734

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்

பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்

பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்

பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 13

 

2735

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்

தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்

சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்

பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 14

 

2736

ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்

கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி

மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா

ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 15

 

2737

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்

முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்

சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்

சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 16

 

2738

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்

தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்

தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்

ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 17

 

8.4 பொற்பதிக் கூத்து

 

2739

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்

அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்

ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்

தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 18

 

2740

அடிஆர் பவரே அடியவர் ஆமால்

அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர்

அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். 19

 

2741

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து

இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு

நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்

படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 20

 

2742

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்

செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்

சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை

இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21

 

2743

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்

பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்

சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை

ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 22

 

2744

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்

தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்

செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்

அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 23

 

2745

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்

வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்

ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த

நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 24

 

2746

காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்

கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி

நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி

நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 25

 

2747

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்

கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்

சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு

ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 26

 

2748

பூதல மேருப் புறத்தான தெக்கணம்

ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்

பாதி மதியோன் பயில்திரு அம்பலம்

ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 27

 

8.5 பொற்றில்லைக்கூத்து

 

2749

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்

பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்

தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்

கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28

 

2750

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்

சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து

புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்

நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 29

 

2751

ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட

ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்

பாதி மதியாடப் பாரண்ட மீதாட

நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 30

 

2752

கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்

அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்

செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்

உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 31

 

2753

மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு

சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு

நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்

பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 32

 

2754

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை

நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை

கடவும் திலைவனம் கைகண்ட மூலம்

படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 33

 

2755

ஈறான கன்னி குமரியே காவிரி

வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்

பேறான வேதா கமமே பிறத்தலான்

மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34

 

2756

நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி

வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி

போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்

தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 35

 

2757

தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி

மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்

பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்

கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 36

 

2758

ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்

கூறு சமயக் குருபரன் நானென்றும்

தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே

வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 37

 

2759

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே

எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி

உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்

தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38

 

2760

ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்

பாடிய பாட்டும் பலவான நட்டமும்

கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்

தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 39

 

2761

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்

கரசர ணாதி கலக்கும் படியே

அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்

குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40

 

8.6 அற்புதக் கூத்து

 

2762

குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்

அருவுரு வாவது அந்த அருவே

திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்

உருவரு வாகும் உமையவள் தானே 41

 

2763

திருவழி யாவது சிற்றம் பலத்தே

குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே

உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு

அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 42

 

2764

நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்

ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட

நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து

ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43

 

2765

வளிமேகம் மின்வில்லு வானகஓசை

தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்

களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்

ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 44

 

2766

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்

ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்

மாயைமா மாயை கடந்துநின் றார்காண

நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. 45

 

2767

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்

கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்

கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்

கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 46

 

2768

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்

நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்

படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 47

 

2769

சத்தி வடிவு சகல ஆனந்தமும்

ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்

சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு

ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 48

 

2770

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்

சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 49

 

2771

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்

தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்

தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே

கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 50

 

2772

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்

நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை

சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள

நின்றது தான்நெடு மண்டல மாமே. 51

 

2773

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி

தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி

எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி

அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 52

 

2774

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்

ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்

மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக

மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 53

 

2775

அம்பல மாவது அகில சராசரம்

அம்பல மாவது ஆதிப் பிரானடி

அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்

அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 54

 

2776

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று

ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன

நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்

பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 55

 

2777

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்

தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்

புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்

கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 56

 

2778

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்

களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்

துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்

ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 57

 

2779

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது

உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்

கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்

கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 58

 

2780

அங்கி தமருகம் அக்குமா லைபாசம்

அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்

தங்குஉ பயந்தரு நீல மும்உடன்

மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 59

 

2781

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்

கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி

நீடிய நாதம் பராற்பர நேயத்தே

ஆடிய நந்தி புறம்அகந் தானே. 60

 

2782

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட

அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட

இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட

அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 61

 

2783

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்

ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி

ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி

ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 62

 

2784

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்

மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்

மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே

மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. 63

 

2785

தாமுடி வானவர் தம்முடி மேலுறை

மாமணி ஈசன் மலரடித் தாளினை

வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்

காமணி ஞாலம் கடந்துநின் றானே. 64

 

2786

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்

தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை

புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்

எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 65

 

2787

ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்

ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்

ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்

ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 66

 

2788

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து

அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்

துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே

அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 67

 

2789

தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்

சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட

வைத்த சராசரம் ஆட மறையாட

அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 68

 

2790

இருவருங் காண எழில்அம் பலத்தே

உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்

திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்

அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 69

 

2791

சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்

அவமாட ஆடாத அம்பரம் ஆட

நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்

சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 70

 

2792

நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்

வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்

தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து

நாதப் பிரமம் சிவநாட மாமே. 71

 

2793

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்

தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்

தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்

தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 72

 

2794

கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள்

வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்

தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி

ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 73

 

2795

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி

பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்

நேதத் துவமும் அவற்றோடு நேதியும்

பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 74

 

2796

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்

தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75

 

2797

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்

அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்

பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்

திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 76

 

2798

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு

மருவிய அப்பும் அனலுடன் கையும்

கருவின் மிதித்த கமலப் பதமும்

உருவில் சிவாய நமவென வோதே. 77

 

2799

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்

அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்

அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி

அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 78

 

2800

தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி

கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்

மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப் 

பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 79

 

2801

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை

மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து

அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர

சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 80

 

2802

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே

ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்

தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை

ஆயுறு மேனி அணைபுக லாமே. 81

 

2803

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்

தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை

ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்

ஆனால் அரனடி நேயத்த தாமே. 82

 

9. ஆகாசப் பேறு

 

2804

உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை

உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை

உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை

உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1

 

2805

பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்

குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்

பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்

அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2

 

2806

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்

பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை

உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது

கொண்ட குறியைக் குலைத்தது தானே. 3

 

2807

பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே

பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி

அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு

உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4

 

2808

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்

பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்

அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்

பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5

 

2809

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து

ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்

ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்

ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6

 

2810

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க

உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது

குயில்கொண்ட பேதை குலாவி உலாவி

வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7

 

2811

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து

அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி

நணுகிய மின்னொளி சோதி வெளியைப்

பணியின் அமுதம் பருகலும் ஆமே. 8

 

2812

புறத்துளா காசம் புவனம் உலகம்

அகத்துளா காசம்எம் ஆதி அறிவு

சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி

சகத்துளா காசம் தானம்ச மாதியே. 9

 

10. ஞானோதயம்

 

2813

மனசந் தியில்கண்ட மனநன வாகும்

கனவுற ஆனந்தம் காண்டல் அதனை

வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப

இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1

 

2814

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை

அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்

கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2

 

2815

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்

தக்கார் உரைத்த தவநெறியே சென்று

புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை

நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3

 

2816

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு

விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4

 

2817

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு

தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை

தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்

தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5

 

2818

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே

அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்

பசும்பொன் திகழும் படர்சடை மீதே

குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6

 

2819

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்

கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்

ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை

எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7

 

2820

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்

நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது

நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்

நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8

 

2821

ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி

ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்

ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்

ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9

 

2822

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே

உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்

உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10

 

2823

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்

பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி

ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11

 

2824

ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்

மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்

சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி

ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12

 

11. சத்திய ஞானானந்தம்

 

2825

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி

முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே

இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்

தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 1

 

2826

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்

நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்

அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்

செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 2

 

2827

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை

அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது

இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்

பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 3

 

2828

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்

உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்

வைத்த சொருபத்த சத்தி வருகுரு

உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 4

 

2829

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை

தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்

மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்

சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 5

 

2830

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்

புனையில் அவனைப் பொதியலும் ஆகும்

எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி

நினையும் அளவில் நினைப்பித் தனனே. 6

 

2831

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்

வாலிய பேரமு தாகும் மதுரமும்

போலும் துரியம் பொடிபடி உள்புகச்

சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 7

 

2832

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து

தமரத்து நின்ற தனிமையன் ஈசன்

பவளத்து முத்தும் பனிமொழி மாதர்

துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 8

 

2833

மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்

சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்

பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்

சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 9

 

2834

சிவமாய் அவமான மும்மலம் தீரப்

பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்

தவமான சத்திய ஞானானந் தத்தே

துவமார் துரியம் சொரூபம் தாமே. 10

 

12. சொரூப உதயம்

 

2835

பரம குரவன் பரம்எங்கு மாகித்

திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று

நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்

அரிய துரியத்து அணைந்துநின் றானே. 1

 

2836

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்

அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்

நிலத்திடை வானிடை நீண்டகன் றானை

வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 2

 

2837

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்

எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்

தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை

பொங்கிநின் றான்புவ னாபதி தானே. 3

 

2838

சமயச் சுவடும் தனையறி யாமல்

சுமையற்ற காமாதி காரணம் எட்டும்

திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்

அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 4

 

2839

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு

வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்

சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற

ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 5

 

2840

உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்

கருவன்றி யேநின்று தான்கரு வாகும்

அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்

குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 6

 

2841

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி

உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்

உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்

உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 7

 

2842

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்

பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்

பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்

பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 8

 

2943

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி

அரியன உற்பலம் ஆமாறு போல

மருவிய சத்தியாதி நான்கும் மதித்த

சொரூபக்குரவன் சுகோதயத் தானே. 9

 

2944

உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்

கரையற்ற சத்தியாதி காணில் அகார

மருவுற்று உகாரம் மகாரம தாக

உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 10

 

2845

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து

முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்

புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து

கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 11

 

2846

ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்

போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே

ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை

நாமாம் முதல்வனும் நான்என லாமே. 12

 

13. ஊழ்

 

2847

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்

மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்

வித்தகன் நந்தி விதிவழி யல்லது

தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1

 

2848

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்

வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை

கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று

நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2

 

2849

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே

கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை

நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்

பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 3

 

2850

வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்

கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்

தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்

நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 4

 

2851

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்

கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்

ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த

ஞானத்து உழவினை நான்உழு வேனே. 5

 

2852

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்

நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை

வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்

பாடது நந்தி பரிசறி வார்க்கே. 6

 

14. சிவ தரிசனம்

 

2853

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை

சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்

சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்

சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1

 

2854

வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்

நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது

போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை

யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2

 

2855

பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று

உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்

தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா

அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 3

 

15. சிவ சொரூப தரிசனம்

 

2856

ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய

பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்

ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை

வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 1

 

2857

உணர்வும் அவனே உயிரும் அவனே

புணரும் அவனே புலவி அவனே

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2

 

2858

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்

முன்னி அவர்தம் குறையை முடித்திடும்

மன்னிய கேள்வி மறையவன் மாதவன்

சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 3

 

2859

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி

பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 4

 

2860

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்

சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி

சுத்தப் பிரம துரியம் துரியத்துள்

உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 5

 

2861

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல

உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல

தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்

அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 6

 

2862

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்

பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா

சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்

சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. 7

 

2863

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்

அரிய துரியம் அதீதம் புரியில்

விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்

உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8

 

16. முத்தி பேதம், கரும நிருவாணம்

 

2864

ஓதிய முத்தியடைவே உயிர்பர

பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு

ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே

ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 1

 

2865

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்

சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்

பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2

 

17. சூனிய சம்பாஷணை

 

2866

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்

ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்

ஏய பெருமான்இருந்து பொருகின்ற

மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 1

 

2867

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி

மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை

மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு

ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2

 

2868

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்

சாறுபடுவன நான்கு பனையுள

ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை

ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3

 

2869

வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 4

 

2870

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்

செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை

மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்

பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 5

 

2871

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள

கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது

உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு

வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. 6

 

2872

மூவணை ஏரும் உழுவது முக்காணி

தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்

நாஅணைகோலி நடுவில் செறுஉழார்

காலணை கோலிக்களர்உழு வாரே. 7

 

2873

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள

மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்

பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்

கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 8

 

2874

பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள

குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள

குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்

பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 9

 

2875

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள

ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்

காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து

மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10

 

2876

தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்

மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது

வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்

தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 11

 

2877

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி

திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி

வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்

விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 12

 

2878

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்

கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை

மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்

கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 13

 

2879

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது

விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்

விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு

விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 14

 

2880

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்

களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்

களர்உழு வார்கள் களரின் முளைத்த

வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 15

 

2881

கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து

ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு

நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை

ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 16

 

2882

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்

குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ

உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்

முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 17

 

2883

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. 18

 

2884

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்

தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்

தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன

மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 19

 

2885

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்

தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத

மலராத பூவின் மணத்தின் மதுவைப்

பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 20

 

2886

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்

கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி

ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்

வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 21

 

2887

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு

வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்

பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி

வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 22

 

2888

பத்துப் பரும்புலி யானை பதினைந்து

வித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர்

அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்

அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23

 

2889

இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே

இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்

இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்

இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24

 

2890

ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்

பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்

முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்

நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25

 

2891

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்

நாகையும் பூழும் நடுவில் உறைவன

நாகையைக் கூகை நணுகல் உறுதலும்

கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26

 

2892

குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்

நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்

உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்

புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27

 

2893

காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி

கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்

மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்

மூடு புகாவிடின் மூவனை யாமே. 28

 

2894

கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்

காறையும் நாணும் வளையலும் கண்டவர்

பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்

ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 29

 

2895

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்

விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்

வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 30

 

2896

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்

திருந்திய மாதர் திருமணப் பட்டார்

பெருந்தவப் பூதம் போலுரு வாகும்

இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31

 

2897

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்

ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்

சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற

பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 32

 

2898

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை

தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்

குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்

தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 33

 

2899

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு

நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்

மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்

தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 34

 

2900

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்

காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்

காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்

கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35

 

2901

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்

கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 36

 

2902

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்

குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்

கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட

பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 37

 

2903

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்

எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே

வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது

கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 38

 

2904

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது

குட்டத்து நீரில் குவளை எழுந்தது

விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்

குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 39

 

2905

ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன

நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன

ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்

மாறுதல் இன்றி மனைபுக லாமே. 40

 

2906

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்

வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்

கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்

ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 41

 

2707

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

யாழும் விசும்பினில் அங்கி மழைவளி

தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு

வாழ நினைக்கில தாலய மாமே. 42

 

2908

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்

சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்

கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்

மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 43

 

2909

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்

இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 44

 

2910

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்

முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்

பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்

மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 45

 

2911

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்

ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது

நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்

பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 46

 

2912

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்

எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி

எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு

ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. 47

 

2913

உழவொன்று வித்து ஒருங்கின காலத்து

எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி

தழுவி வினைசெய்து தான்பய வாது

வழுவாது போவன் வளர்சடை யோனே. 48

 

2914

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்

ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ

மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்

பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. 49

 

2915

தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு

வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்

நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து

ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50

 

2916

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்

செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்

நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 51

 

2917

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி

முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்

கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து

மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 52

 

2918

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்

தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்

குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்

குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 53

 

2919

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்

கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்

பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்

கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 54

 

2920

நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்

யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை

கூரும் மழைபொழி யாது பொழிபுனல்

தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 55

 

2921

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்

மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து

நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 56

 

2922

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. 57

 

2923

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்

புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்

விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது

அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 58

 

2924

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்

விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்

களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்

அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 59

 

2925

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை

படைகண்டு மீண்டது பாதி வழியில்

உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்

அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 60

 

2926

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டொடு நாலு புரவியும்

பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 61

 

2927

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்

கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்

தூசி மறவன் துணைவழி எய்திடப்

பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 62

 

2928

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு

கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு

வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்

வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 63

 

2929

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்

தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது

வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்

காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 64

 

2930

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது

வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை

திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்

தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 65

 

2931

போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது

தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை

ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது

மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 66

 

2932

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே

காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்

வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி

யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. 67

 

2933

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்

மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு

காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 68

 

2934

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்

புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்

புலம்பின் அவளொடும் போகம் நுகரும்

புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 69

 

2935

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது

வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்

வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை

ஆணி கலங்கில் அதுஇது வாமே. 70

 

18. மோன சமாதி

 

2936

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை

சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்

மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு

சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 1

 

2937

காட்டும் குறியும் கடந்த அக் காரணம்

ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்

கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது

ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2

 

2938

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்

உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை

உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்

உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 3

 

2939

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்

பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்

சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்

உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. 4

 

2940

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி

அரிய துரியம் அதன்மீது மூன்றாய்

விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே

உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 5

 

2941

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி

திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்

பொருவிலி பூதப் படையுடை யாளி

மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 6

 

2942

கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை

எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்

அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் 

தொண்டர் முகந்த துறையறி யோமே. 7

 

2943

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல

நிட்களம் அல்ல சகள நிலையல்ல

அற்புத மாகி அனுபோகக் காமம்போல்

கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 8

 

2944

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. 9

 

2945

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்

செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்

கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை

எப்படி அப்படி என்னும் அவ்வாறே. 10

 

2946

கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்

தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை

பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்

கொண்டான் அறிவன் குணம்பல தானே. 11

 

2947

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே

சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன

உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்

புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. 12

 

2948

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து

பதறு படாதே பழமறை பார்த்துக்

கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை

உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 13

 

2949

வாடா மலர்புனை சேவடி வானவர்

கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்

சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று

நாடார் அமுதுற நாடார் அமுதமே. 14

 

2950

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்

பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்

சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண

மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. 15

 

2951

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு

ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்

வானும் அழிந்து மனமும் அழிந்துபின்

நானும் அழிந்தமை நானறி யேனே. 16

 

2952

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்

பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி

அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே

உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. 17

 

2953

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை

ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 18

 

19. வரையுரை மாட்சி

 

2954

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது

தான்அவ னானபின் ஆரை நினைவது

காமனை வென்றகண் ஆரை உகப்பது

தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1

 

2955

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 2

 

2956

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்

மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை

பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா

தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 3

 

20. அணைந்தோர் தன்மை

 

2957

மலமில்லை மாசில்லை மானாபி மானம்

குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை

நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே

பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 1

 

2958

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்

கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்

அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்

செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2

 

2959

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்

சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்

பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு

கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. 3

 

2960

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்

சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்

சீராடி அங்கே திரிவதால் லால் இனி

யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. 4

 

2961

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்

தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை

அரிந்தேன் வினையை அயில்மன வாளால்

முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. 5

 

2962

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்

ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது

நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்

தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. 6

 

2963

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்

வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்

அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்

சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. 7

 

2964

பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்

கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை

விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்

துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. 8

 

2965

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது

அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை

அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து

அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. 9

 

2966

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்

அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்

எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே

உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. 10

 

2967

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்

தானே வடவரை ஆதியுமாய நிற்கும்

தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்

தானே உலகில் தலைவனும் ஆமே. 11

 

2968

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்

சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்

பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்

தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே. 12

 

2969

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்

சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்

சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்

சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. 13

 

2970

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்

வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்

வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி

நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. 14

 

2971

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்

தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்

அவபெரு மான்என்னை யாளுடை நாதன்

பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. 15

 

2972

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்

துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்

அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்

தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. 16

 

2973

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து

முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்

தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி

பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. 17

 

2974

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்

கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்

பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்

வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. 18

 

2975

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்

பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு

அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்

அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. 19

 

2976

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்

அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்

விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்

கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. 20

 

2977

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்

வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்

செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்

கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. 21

 

2978

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று

தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்

பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி

மாண்டான் ஒருவன்கை வந்தது தானே. 22

 

2979

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு

நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்

கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்

வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. 23

 

2980

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

என்பொன் மணியை இறைவனை ஈசனைத்

தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. 24

 

2981

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்

மனம்வி ரிந்து குவிந்தது வாயு

மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்

மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. 25

 

21 தோத்திரம்

 

2982

மாயனை நாடி மனநெடும் தேரெறிப்

போயின நாடறி யாதே புலம்புவர்

தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்

காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. 1

 

2983

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்

இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்

முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்

பன்னினர் என்றே பாடறி வீரே. 2

 

2984

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை

எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை

அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்

பித்தன் இவனென்று பேசுகின் றாரே. 3

 

2985

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி

புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்

புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்

புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. 4

 

2986

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்

வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு

நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்

கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5

 

2987

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை

ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்

ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்

காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. 6

 

2988

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்

போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. 7

 

2989

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை

ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்

வானோர் உலகம் வழிபட மீண்டபின்

தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. 8

 

2990

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்

இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்

சுந்தர மாதர் துழனியொன்று அல்லது

அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. 9

 

2991

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்

எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்

உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்

தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. 10

 

2992

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்

கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்

சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்

அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 11

 

2993

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்

சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை

புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி

வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. 12

 

2994

வள்ளல் தலைவனை வானநன் னாடனை

வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்

கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று

உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. 13

 

2995

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை

நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்

கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்

வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. 14

 

2996

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்

பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்

திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்

வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. 15

 

2997

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்

தானகம் இல்லாத் தனியாகும் போதகன்

கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்

பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. 16

 

2998

விதியது மேலை அமரர் உறையும்

பதியது பாய்புனல் கங்கையும் உண்டு

துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்

பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. 17

 

2999

மேலது வானவர் கீழது மாதவர்

தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்

கானது கூவிள மாலை கமழ்சடை

ஆனது செய்யும்என் ஆருயிர் தானே. 18

 

3000

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை

ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி

யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்

வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. 19

 

3001

உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை

அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்

நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்

செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே. 20

 

3002

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்

பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்

பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்

பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. 21

 

2903

அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்

பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்

தந்த உலகெங்கும் தானே பாராபரன்

வந்து படைக்கின்ற மாண்பது வாமே. 22

 

2904

முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்

அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்

அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி

மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 23

 

2905

ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்

சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்

ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்

ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. 24

 

3006

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்

பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்

தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்

தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. 25

 

3007

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ

நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்

பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே

புலம்முழு பொன்னிற மாகிநின் றானே. 26

 

3008

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்

பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்

தராபர னாய்நின்ற தன்மை யுணரார்

நிராபர னாகி நிறைந்துநின் றானே. 27

 

3009

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை

ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்

வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்

காற்றது ஈசன் கலந்து நின்றானே. 28

 

3010

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்

மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே

புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு

முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 29

 

3011

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி

இவன்தான் எனநின்று எளயனும் அல்லன்

சிவன்தான் பலபல சீவனு மாகி

நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 30

 

3012

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற

தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்

விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப

உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. 31

 

3013

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து

நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்

செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி

அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 32

 

3014

ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின

ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி

தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்

வாச மலர்போல் மருவி நின் றானே. 33

 

3015

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை

நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்

தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி

சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 34

 

3016

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்

கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்

வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்

அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 35

 

3017

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்

கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்

ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்

வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 36

 

3018

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்

கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்

பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்

எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே. 37

 

3219

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்

நித்திலச் சோதியன் நீலக் கருமையன்

எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்

சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 38

 

3020

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்

அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்

மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்

புறம்பல காணினும் போற்றகி லாரே. 38

 

3021

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்

பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்

கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு

எங்குநின் றான்மழை போல்இறை தானே. 40

 

3022

உணர்வது வாயுவே உத்தம மாயும்

உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்

புணர்வது வாயும் புல்லிய தாயும்

உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 41

 

3023

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்

தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்

தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்

தன்வலி யாலே தடம்கட லாமே. 42

 

3024

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை

ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியும் தவத்தின் அளவே. 43

 

3025

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்

குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது

உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்

பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. 44

 

22. சர்வ வியாபி

 

3026

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி

ஆயும் அறிவையும் மாயா உபாதியால்

ஏய பரிய புரியும் தனதுஎய்தும்

சாயும் தனது வியாபகம் தானே. 1

 

3027

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை

நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்

ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்

தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 2

 

3028

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து

உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி

உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்

கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3

 

3029

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்

தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்

இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்

பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 4

 

3030

உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு

இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்

சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி

பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. 5

 

3031

பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்

முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி

நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு

மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே. 6

 

3032

தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்

ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்

ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்

நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. 7

 

3033

நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்

காக்கும் அவனித் தலைவனும் அங்குள

நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி

போக்கும் வரவும் புணரல் லானே. 8

 

3034

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி

ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்

கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்

ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. 9

 

3035

உணர்வும் அவனே உயிரும் அவனே

புணர்வும் அவனே புலனும் அவனே

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 10

 

3036

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை

நலமையின் ஞான வழக்கமும் ஆகும்

விலமையில் வைத்துள் வேதியர் கூறும்

பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 11

 

3037

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்

மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்

தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்

கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 12

 

3038

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி

நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென

நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்

நின்றனன் தானே வளங்கனி யாயே. 13

 

3039

புவனா பதிமிகு புண்ணியன் எந்தை

அவனே உலகில் அடர்பெரும் பாகன்

அவனே அரும்பல சீவனும் ஆகும்

அவனே இறையென மாலுற்ற வாறே. 14

 

3040

உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்

விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்

மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்

கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 15

 

3041

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்

பண்ணும் திறனும் படைத்த பரமனைக்

கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது

உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. 16

 

3042

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்

உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்

கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே

திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 17

 

3043

பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்

செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 18

 

3044

அதுஅறி வானவன் ஆதிப் புராணன்

எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்

பொதுஅது வான புவனங்கள் எட்டும்

இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 19

 

3045

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்

தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்

பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை

ஊரும் சகலன் உலப்பிலி தானே. 20

 

3046

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்

மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்

மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. 21

 

23. வாழ்த்து

 

3047

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி

வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்

வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்

வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1.

 

ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.

திருமூலர் திருமந்திரம் முற்றிற்று

 

by Swathi   on 24 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.