|
|||||
திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவியுங்கள் !! உத்தரகண்ட் எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தல் !! |
|||||
கடந்த வியாழக்கிழமை அன்று நாடாளமன்ற மக்களவையில், மக்களின் முக்கிய பிரச்சனைகளை, அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நாடாளமன்ற உறுப்பினர் தருண் விஜய் (58) பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது, "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும், சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை விருப்ப மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு, மக்களுக்கு உருவாக்கி தர வேண்டும். உதாரணமாக, தமிழ் மொழியில் எழுதப்பட்ட தொல்காப்பியம் 5,000 ஆண்டுகளுக்கும் பழைமையானது. அதேபோல, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த மாபெரும் காப்பியங்களாகும். தமிழ் இலக்கியத்தின் பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறைசாற்றுவது கம்பரின் "ராமாயணம்' ஆகும். அதேபோல, இன்றைய காலகட்டத்துக்கும் உரித்தாகும் வகையில் அமைந்த சிறந்த படைப்பு, திருவள்ளுவரின் "திருக்குறள்' ஆகும். திருக்குறளின் சுவடுகள் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலக அளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்? அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகளும் மட்டும்தான் இந்தியா எனக் கருதிக் கொள்ளக் கூடாது. சோழர்கள், கிருஷ்ணதேவராயர், பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது. அதேபோல, வங்கம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கும் பெருமைமிகு வரலாறுகள் உள்ளன. இந்த நிலையில், இந்திய மொழிகளுக்கு எல்லாம் மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த தினத்தை (தை 2) "இந்திய மொழிகள் தினம்' எனக் கடைப்பிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதேபோல, தேசிய ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்' என்று தருண் விஜய் குறிப்பிட்டார். தருண் விஜயின் பேச்சைக் கேட்டு, நாடாளமன்றத்தில் இருந்த அதிமுக, திமுக உறுப்பினர்கள் தருண் விஜய் அருகே வந்து வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்தனர். தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் பிறந்தவர். அடிப்படையில் பத்திரிகையாளராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முழு நேர அரசியலுக்கு வந்தவர். 2010-இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தமிழ் மொழிக்காக தமிழக எம்பிக்களே நாடாளமன்றத்தில் குரல் கொடுக்காத, இந்த வேளையில், வட மாநில எம்.பி ஒருவர் தமிழுக்காக குரல் கொடுத்திருப்பது. தமிழ் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
|||||
by Swathi on 05 Aug 2014 0 Comments | |||||
Tags: Thiruvalluvar Day Indian Languages Day Tarun Vijay திருவள்ளுவர் தினம் இந்திய மொழிகள் தினம் தருண் விஜய் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|