மதுரை அருகே மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என்னும் ஊரில் , வறுமையுற்ற தீண்டப்படாதார் குடும்பம் ஒன்றில் திரு . கக்கன் அவர்கள் பிறந்தார் .
ஹரிஜனங்களின் நல்வாழ்வுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த ஊழியராக விளங்கியவர் மதுரை வைத்தியநாத ஐயர் அவர்கள் . அவரால்தான் திரு . கக்கன் அவர்களின் கல்வியும் அரசியல் வாழ்வும் ஆக்கம் பெற்றன .
இவர் தாழ்மையான தொடக்க வாழ்க்கை நிலைகளில் இருந்து மேலே முன்னேறியவர் . சாதாரண காங்கிரஸ் தொண்டரான இவர் , விடுதலைப் போராட்ட காலத்தில் , அனுபவம் மிகுந்த காங்கிரஸ் முன்னணித் தலைவர்களுடன் சேர்ந்து துன்பப்பட்டார் . பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் உள்ளிட்ட பல முக்கியமான பதவிகளை ஏற்றார் . இந்தியாவின் அரசமைப்புப் பேரவையின் (Constituent Assembly) உறுப்பினராக இவர் இருந்தார் . காங்கிரஸ் கட்சி மீதும் திரு . காமராஜர் அவர்கள் மீதும் இவர் கொண்டிருந்த நன்றியும் பற்றும் அளவிட முடியாதவை ; கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை .
எனக்கு எப்பொழுதுமே இனிய வரவேற்பும் கனிவான சொற்களும் அவர் வழங்குவார் . எனக்கும் இவர் மீது உயர்ந்த பெருமதிப்பு உண்டு . என்னுடைய திருமணம் இவருடைய முன்னிலையில் நிகழ்ந்தது ; தேவ மந்திரங்களோ , ஓம குண்டமோ இல்லாத சுயமரியாதைத் திருமணம் ஆகும் ! அது ,
தீண்டப்படாத வகுப்பினர்மீது இவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் எல்லையே இல்லாதவை . ஏழைகள் மீது இவர் கொண்டிருந்த இரக்க உணர்வு பொன்மொழியாய்ப் பொறிக்கத்தக்கது . வறுமையுற்ற , நலிவடைந்த மக்கள் பிரிவிலிருந்து வந்த ஒருவர் - என்கிற நிலையில் , அவர்களின் தாங்க முடியாத துன்பத்தின் வலிகளை இவர் நன்றாகவே அறிவார் . எனவே , தம்முடைய மக்களைக் கண்ணீர் வெள்ளத்தில் காணும் போதெல்லாம் இவரும் கண்ணீர் வடித்தார் ! மக்களின் மனக்குறைகளுக்குத் தீர்வுகாணத் தவறுகின்ற அதிகாரிகளை இவர் கடுமையாக வசை பாடினார் . நல்ல பணிகளைச் செய்த அதிகாரிகளைப் போற்றித் துதித்தார் !
ஆதி திராவிடர் நலத்துறைப் பொறுப்பை ஏற்ற அமைச்சராகவும் , காவல்துறை பொறுப்பைக் கொண்ட உள்துறை அமைச்சராகவும் , பெருமகிழ்ச்சியோடும் , பேரார்வத்தோடும் இவர் பணியாற்றிச் சிறந்தார் . அதே வேளையில் , நம்பிக்கையின்மையும் , மனச்சோர்வும் உடையவராக இவர் இருந்தார் . எத்தனையோ நிகழ்ச்சிகளில் என்னிடம் குறிப்பிட்டுச் சொன்னது இதுதான்
தாம் உள்துறை அமைச்சராக இருந்தபோதிலும் , ஆதி திராவிட ( ஹரிஜன ) மக்களுக்குச் சமுதாய உரிமைகளையும் நீதிமுறையையும் எப்படி நிலைநாட்டுவது என்கிற கேள்வி எழும்போது - நேர்மையோடும் நெறிமுறையோடும் தங்கள் கடமைகளைக் காவல்துறையினர் நிறைவேற்றும்படி செய்வதில் இருந்த பல சிக்கல்களில் தம்மால் தப்ப இயலவில்லை என்று குறிப்பிட்டார் .
ஆதி திராவிட மாணவர்களுக்கு உரிய விடுதிகள் மீதும் தொடக்கப் பள்ளிகள் மீதும் இவர் சிறப்பான கவனம் செலுத்தினார் . பல சிக்கல்களில் பலன்தரும் வலிமையுடன் செயலாற்ற இயலாவிட்டாலும் , திரு . காமராஜர் அவர்களின் பரிவையும் ஆதரவையும் இவர் பெற்றிருந்தார் . தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் பழங்குடி இனத்தவருக்கும் , பள்ளிகளையும் விடுதிகளையும் அதிக எண்ணிக்கையில் திறப்பதற்கு இவர் காரணமாக விளங்கினார் .
நான் இவரிடம் கண்ட மிக மேன்மையான ஒரு பண்பு - இவருடைய நேர்மையே ஆகும் . மற்றவர்களிடம் கருத்து மாறுபாடு கொள்வதிலும் கூட அருள் மனமும் நேர்மையும் உடையவர் இவர் . தம்முடைய நண்பர்களிடமும் , கட்சிக்காரர்களிடமும் கருத்த வேறுபாடு கொள்ளும்பொழுதும் அதே பண்புகளுடன் உறுதியாக இருந்தார் . இவர் பொருளற்ற மடமைத் தவறுகளைப் பொறுத்தக்கொள்ளவே மாட்டார் .
தம்முடைய குடும்பத்தின்மீது மிகக் குறைந்த அக்கறையே செலுத்தினார் . அமைச்சராக இல்லாத பொழுது , பொதுமக்களின் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணம் புரிவதுதான் இவர் வழக்கம் . தமக்கு எனச் சொந்தமாகக் காரும் இவர் வைத்திருக்கவில்லை , சொந்தமாக வீடும் இவர் வைத்திருக்கவில்லை .
தமிழ்நாடாக இருந்தாலும் சரி , நாட்டின் வேறு எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி , முன்னாள் அமைச்சர்களின் வாழ்க்கை வரலாற்றில் இல்லாத விந்தையை உள்ளடக்கியதே இவரது இந்த நிலைமை ! தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒரு வாடகை வீட்டில்தான் இவர் வாழ்ந்தார் .
சென்னை - அரசு பொது மருத்தவமனையில் , உடல்நலம் குன்றியவராகப் படுத்திருந்த இவரை , நான் பார்க்கப் போனேன் . அப்போது என் இரண்டு கைகளையும் பிடித்தக் கொண்டார் . கண்ணீர் விட்டு அழுதார் ! என்னால் செய்யக்கூடிய ஒரு சில பணிகளையும் இவர் குறிப்பிட்டார் .
சில மாதங்களுக்குப் பிறகு நான் டெல்லியில் இருந்தபொழுது , இவரது இறப்பு பற்றிய துயரச் செய்தி எனக்கு எட்டியது . நல்ல பெருந்தன்மையுள்ள ஒரு மனிதராக வறுமையிலே பிறந்து , வறுமையிலே மடிந்த இவர் - நாட்டுக்கே தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இந்தியத் தாயின் மகன் ஆவார் !
இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்கும் , இவரது மறைவுக்குப் பின்னர் இவருடைய குடும்பத்தாருக்கும் உதவி புரிந்தவை - அன்றைய முதலமைச்சர் டாக்டர் எம் . ஜி . ஆர் ( இராமச்சந்திரன் ) அவர்களின் பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையுமே ஆகும் .
ஆதி திராவிடர்களில் எத்தனை பேர் இவரையும் , இவருடைய பணிகளையும் இன்று நினைவு கூர்கின்றனர் ? இவரையும் இவருடைய தொண்டுகளையும் அறிந்துகொண்ட தலைமுறை சுருங்கிக்கொண்டே வருகிறது .
இவர் மறைந்துவிட்டாலும் கூட , தாழ்வான நிலையில் பிறந்த ஒருவர் - பணத்துக்கும் பதவிக்குமோ , தன்னல இச்சைகளுக்கோ இரையாக விழுந்துவிடாமல் , எளிமையான வாழ்க்கை முறை , நாட்டுக்கு அர்ப்பணிப்பு , தன்னலமற்ற தொண்டு முதலானவற்றின் மூலமாக அதிகாரமும் பெருமதிப்பும் கொண்ட உயர்ந்த நிலைகளை எட்டமுடியும் என்பதற்கு - ஒளி வீசும் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்த மாமனிதரே திரு . கக்கன் அவர்கள் !
ஆங்கிலம் மூலம்
திரு . செ . செல்லப்பன்
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்
திரு . அ . காந்திதாசன்
|