LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியம் நூல் வரலாறு

தொல்காப்பியம் என்னும் நூற்பெயர் தொல்காப்பியனரால் செய்யப்பட்டது. என்ற பொருளில் வழங்கப்பட்டது தொல்காப்பியம் என்னும் பெயருக்கு இந்நூலின் உரையாசிரியர்களாகிய இளம்பூரணரும், சேனாவரையரும் இவ்வாறே பொருள் கொண்டு இலக்கண விதிகள் கூறியிருத்தலை அவர்தம் உரைகளில் காணலாம். தொல்காப்பியனாரோடு உடன் பயின்றவராகக் கூறப்படும் பனம்பாரனாரால் இத்தொல்காப்பியத்திற்கு இயற்றப் பெற்ற சிறப்புப் பாயிரத்தில்,

''தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோன்''

என இக்கருத்து அமைந்திருத்தலும் குறிப்பிடத்தக்கது. இந்நூலாசிரியரின் பெயராகிய தொல்காப்பியர் என்பதே, இந்நூலிற்கு வழங்கப்பெற்ற பெயர் என்றும், இப்பெயர் பிற்காலத்தில், தொல்காப்பியம் எனப் பிழையாக வழங்கப்பட்டது என்றும் கூறுவோரும் உண்டு.

தொல்காப்பியத்தின் முதல்

தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக அமைந்தது தலைச் சங்கத்தில் அகத்தியனாரல் இயற்றப்பெற்ற அகத்தியம் என்னும் நூல் என்பர்.

''அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம், அதன் வழிநூல் என்பதூஉம் பெற்றாம்''

என்பது, தொல்காப்பியத்துப் பேராசிரியர் உரையில் காணப்படுகின்றது. தலைச்சங்கத்திலும், இடைச் சங்கத்திலும் இருந்து தமிழ் ஆராய்ந்தவராக இறையனார் களவியல் உரையில் குறிப்பிடப்பெற்ற அகத்தியனாரைப் பற்றியும், அவரால் இயற்றப்பெற்ற அகத்தியத்தைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளுவதற்கு உரிய பழைய நூற்சான்றுகள் கிடைக்கவில்லை.

கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் எழுதப்பெற்ற உரைகளில், அகத்தியம் என்ற பெயரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில நூற்பாக்களும், இக்காலத்தில், பேரகத்தியம் என்ற பெயருடன் அச்சிடப்பெற்று வழங்கும் நூற்பாக்களும் பிற்காலச் சொல் அமைப்புடனும், வடமொழிச் சொற்கள் மிகுதியாக விரவப் பெற்றும் உள்ளன. எனவே, அகத்திய நூற்பாக்கள் என்ற பெயரால் காணப்படும் அந்நூற்பாக்கள் தலைச் சங்கத்தில் இருந்து தமிழ் ஆராய்ந்தவர் எனக் கூறப்படும் அகத்தியனார் செய்த அகத்தியம் என்ற பழைய இலக்கண நூலினைச் சேர்ந்தன எனக் கொள்ளுதற்கில்லை.

அகத்தியர் என்னும் பெயருடய முனிவர் பலர் வடநாட்டிலும், தென்னாட்டிலும், பல இடங்களிலும் பல காலங்களிலும் வாழ்ந்தனர் என்பதனை வால்மீகி, இராமாயணம் முதலிய நூல்களால் அறியலாம். அவர்களுக்குள், தலைச்சங்கப் புலவராய் அகத்தியம் என்ற நூலினை இயற்றிய அறிஞர், தென்னாட்டிலேயே நெடுங்காலம் இருந்து தமிழ் வளர்த்த புலவராதல் வேண்டும்.

''அகத்தியனாரால் செய்யப்பட்ட மூன்று தமிழினும்'' எனப் பேராசிரியர் கூறுதலால், அகத்தியனார், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் உரிய இலக்கணமாக, அகத்தியம் என்ற நூலினை இயற்றினார் என்பது புலனாகும்.

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முன்னைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். ''என்மனார் புலவர்'' என்ப ''அறிந்திசினோரே'' மொழிப யாப்பறி புலவர்'', மொழிப தொன்னெறிப் புலவர் எனவும், பிறவாறும் அவரால் குறிப்பிடப்படுவோரை, இலக்கண நூலாசிரியர்கள் என எண்ணலாம். இப்புலவர் பெருமக்களுள் சிலரைத் தொல்காப்பியனார் காலத்தினராகவும், பலரைத் தொல்காப்பியனாருக்கு முற்பட்ட காலத்தினராகவும் கொள்ளுதல் பொருந்தும்.

தொல்காப்பியனாருக்கு முன், புலவர் பலர் இருந்து அவர்கள் தமிழ் இலக்கண நூல்களைச் செய்துள்ளனர் என்பது அறியப்படுகின்றது. இலக்கியங்களிலிருந்து அவற்றின் எழுத்து, சொல், பொருள் முதலியவற்றின் அமைப்புமுறைகள், வரையறைகள் முதலானவற்றைத் தெரிந்து எடுத்து விளக்குவது இலக்கணம் ஆகும். ஆகவே, தொல்காப்பியனாருக்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல்களுக்கெல்லாம் அடிப்படையாக, இலக்கிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.

தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம்

தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்பவரால் இயற்றப்பெற்ற சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது. தொல்காப்பியனார் பனம்பாரனார், அதங்கோட்டாசிரியர் முதலிய மாணவர் பன்னிருவர் அகத்தியனாரிடம் தமிழ் பயின்றனர் என்பது, நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் செய்தியாகும். எனவே, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார். தொல்காப்பியனாருடன் பயின்றவர் என்பது அறிதற்குரியன அப்பாயிரத்தில் உள்ள,

''வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்''

என்ற பகுதியால், தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டின் வடஎல்லை, வேங்கட மலைத் தொடராகவும், தென் எல்லை, குமரி ஆறாகவும் அமைந்திருந்தன என்பது விளங்கும்.

தொல்காப்பியனார், தம் நூலிற்கு முற்பட்ட நூல்களின் சிறப்பினை உள்ளத்துட் கொண்டு, தமிழ் மொழியை வளர்த்தற்கு இன்றியமையாத, முறையான, இயற்றமிழ் இலக்கணநூல் ஒன்றினை, இயற்றுதல் வேண்டும் என எண்ணினார். தமிழகத்தில் அமைந்த உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு, அவ்விருவகை வழக்கிலும் அமைந்த இலக்கணங்களை ஆராய்ந்தார். அவ்விலக்கணங்களை, எழுத்து, சொல், பொருள் என மூவகைப்படத் தொல்காப்பியத்துள் தொகுத்துக் கூறியுள்ளார் என்பதனை,

''வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்''

என்ற நூற்பாவால் அறியலாம்.

தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,

''நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல்
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து''

என்னும் நூற்பாவால் அறியலாம்.

தொல்காப்பிய நூலின் அமைப்பு

தொல்காப்பியம் என்னும் நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. இதில் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஆசிரியர் அமைத்திருப்பதை நோக்கும் போது, இயல்களின் எண் ஒருமைப்பாட்டில் அவர் கண்ட ஓர் அழகு உணர்ச்சி புலனாகின்றது. தொல்காப்பியத்தின் மொத்த நூற்பாக்கள் 1612 ஆகும்.

தொல்காப்பியத்தில் உள்ள மூன்று அதிகாரங்களுள் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள், சொற்கள் ஆகியவற்றின் அமைப்பும் வரையறையும் பற்றியன. இவை சொற்களின் பொருள்களை உணர்தற்குத் துணை புரிவன. எழுத்திலக்கணத்தினையும், சொல் இலக்கணத்தினையும் உடல் போலவும், பொருள் இலக்கணத்தினை உயிர் போலவும் கருதலாம்.

எழுத்தும் சொல்லும் பற்றிய இவ்விருவகை இலக்கணங்களைக் காட்டிலும் மக்களின் வாழ்வியல் பற்றிய பொருள் இலக்கணம், விரிவாகக் கூறுதற்கு உரியது இதற்கு ஏற்பத் தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரம், மற்றைய இரண்டு அதிகாரங்களினும் அளவால் பெரியதாக அமைந்திருக்கிறது.

எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணங்களுள், எழுத்திலக்கணமும், சொல் இலக்கணமும் தமிழ்மொழியினைச் சிறப்பாகக் கற்போரால், ஆழமாகவும் பிரிவாகவும் கற்றற்கு உரியன.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

மூதறிஞர் அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பணிகள்
முன்னுரை:

தற்காலத்தில் வாழ்ந்து வரும் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களுள் அடிகளாசிரியரும் ஒருவராவார். இவர், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், படைப்பிலக்கிய நூல்கள் என்ற வகையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கிய நூல்களுள் தொல்காப்பியம் பற்றிய நூல்களின் பணிகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பணிகள்

மூதறிஞர் பேராசிரியர் திரு. அடிகளாசிரியவர்கள் பின்வரும் கால வகையில் தொல்காப்பியப் பணிகளைச் செய்துள்ளார்.

1. தொல்காப்பியம் - எழுத்து - இளம்பூரணர் (1969)

2. ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம் (1977)

3. தொல்காப்பியம் - பொருள் - செய்யுளியல் - இளம்பூரணர்.

4. தொல்காப்பியம் - சொல் - இளம்பூரணர் (1990)

5. தொல்காப்பியம் - பொருள் - (செய்யுளியல்: நீங்கலாக ஏனைய எட்டு இயல்கள்) அச்சில்

6. தொல்காப்பியம் - பொருள் - செய்யுளியல் - உரைநடை - அச்சில்

இனி ஒவ்வொன்றாய் நோக்குவோம்.

1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - இளம்பூரணர் - 1969

திரு. அடிகளாசிரியர் தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணர் உரையை 1959 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அவர் அப்பதிப்பைத் தம் சொந்த பொருட்செலவில் பதிப்பித்து அவரே வெளியிட்டுள்ளார். அப்பதிப்பின் சிறப்புகள் வருமாறு:

இவர் ஏட்டுப்பிரதிகளுடன் ஒப்பு நோக்கி விளக்கக் குறிப்புகளுடன் அமைத்துத் தந்துள்ளார். எழுத்ததிகார இளம்பூரணர் உரை வெளியீட்டின் வளர் நிலையில் இவர் பதிப்பு சிறப்பாக அமைந்துள்ளமை காணலாம். எடுத்துக்காட்டுகளின் அகராதி, உரைப்பொருள் அகரவரிசை என்னும் அகராதிகள் இப்பதிப்பின் சிறப்புக்குக் காரணமாகும்.

அடிகளாசிரியர் அப்பதிப்பின் முன்னுரையில் அப்பதிப்பை அச்சிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை எழுதியுள்ளார். அவ்வுரை நம் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

2. ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம் (1977)

ஐவகைப்படியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம் என்ற ஆய்வு நூலைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை 1977 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு இராசபாளையம் மணிமேகலை மன்றத்தார் நிகழ்த்திய இரு சூத்திர விளக்கக் கட்டுரைப் போட்டியில் அடிகளாசிரியர் கலந்து கொண்டு முதற் பரிசைப் பெற்றுள்ளார். அப்பரிசுப்பெற்ற ஆய்வுக் கட்டுரையை சென்னைப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டுள்ளது.

3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் - இளம்பூரணர் உரை (1985)

மூதறிஞர் அடிகளாசிரியர் தமது 72 ஆம் அகவையில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியில் நியமிக்கப்பட்டார். அப்பணி நியமனக் காலத்தில் மேற்பதிப்பை அடிகளாசிரியர் உருவாக்கித் தந்தார். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிப்புத்துறை 1985 ஆம் ஆண்டு அந்நூலை அச்சிட்டுள்ளது.

அடிகளாசிரியர் ஏறத்தாழ பதினைந்து இலக்கண நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பல ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்பிட்டு, அருமையான பாட பேதத்துடன் அந்நூலை பதிப்பித்துள்ளார். பலதமிழ்ப் பேராசிரியர்கள் அந்நூலைப் படித்து நல்ல விளக்கம் பெற்று வருகின்றனர் என்பது வெள்ளிடைமலை.

4. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - இளம்பூரணர் உரை - 1990

இந்நூலையும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழம் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது. இந்நூலும் அடிகளாசிரியரின் எழுத்ததிகாரப் பதிப்பைப் போன்று சிறப்புடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

5. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அச்சில் (செய்யுளியல் நீங்கலாக ஏனைய எட்டு இயல்கள்)

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அடிகளாசிரியர் பணியாற்றிய காலத்தில் மேலது நூல் உருவாயிற்று. ஆனால் அந்நூல் அச்சுவாகனம் ஏறாமல் இருப்பதை அறிந்து அடிகளாசிரியர் நாளும் வருந்திக் கொண்டுள்ளார். அவரின் வருத்தத்தைத் தீர்ப்பது தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பாகும்.

6. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் - ஆராய்ச்சி உரைநடை (அச்சாகும் நிலை)

மூதறிஞர் அடிகளாசிரியர் அவர்கள் தொல்காப்பியச் செய்யுளியலின் மேல் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவ் ஈடுபாட்டின் காரணமாக நாளும் செய்யுளியல் பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பவர். செய்யுளியல் பற்றிய பல அரிய ஆராய்ச்சி சிந்தனைகளின் தொகுப்பே மேலது நூலாகும்.

அந்நூல் எளிய உரைநடையில் அமைந்துள்ளது. ஆனால் பொருள் முட்டுப்பாட்டின் காரணமாக அச்சுவாகனம் ஏறாமல் உள்ளது.

முடிவுரை:

1. மூதறிஞர் அடிகளாசிரியர் தொல்காப்பியத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

2. தொல்காப்பிய முழுமைக்கும் அடிகளாசிரியரின் பதிப்புப்பணி அமைந்துள்ளது.

3. அடிகளாசிரியர் இளம்பூரணர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவரின் உரையை மட்டும் பதிப்பித்துள்ளார். ஆனால் உரிய இடங்களில் பல உரையாசிரியர்களின் உரையைக் காட்டியுள்ளார்.

4. ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்பீடு, நல்லபாட பேதம், நூற்பா முதலானவற்றின் அகரவரிசை ஆகிய இவையெல்லாம் இவரின் பதிப்புச் சிறப்பிற்குக் காரணங்களாகும்.

5. கையெழுத்து வடிவில் உள்ள இவரது தொல்-செய்யுளியல் உரைநடை அச்சுவாகனம் ஏறினால் தமிழுலகம் மிகப்பெரிய பயனுறும்.

6. தமிழக அரசு இவருடைய தொல்காப்பியப் பணியைப் பாராட்டி இவருக்குத் தொல்காப்பியச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.7. அடிகளாசிரியர் தொல்காப்பியம் தொடர்பாகப் பல அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ள அவற்றைத் தனித்து ஆராயலாம்.

by Swathi   on 28 Mar 2013  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
30-Dec-2020 07:19:46 Imran basha said : Report Abuse
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை
 
05-Apr-2019 14:45:29 Tharun said : Report Abuse
அய்யா வணக்கம் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது அது என்னவேன்றால் , அசல்(original) தொல்காப்பியம் எங்குள்ளது .அந்த நூல் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது .தொல்காப்பியர் எழுதன நூல் எங்கு வைக்கப்பட்டுள்ளது .அந்த நூல் இருக்கிறதா இல்லையா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.