ஓர் ஊரில் ஒரு கட்சியின் தொண்டருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது . அவர் கட்சிக்காகப் பல தியாகங்களைச்செய்திருந்தார் . அவரது அறுபது வயது நிறைவையொட்டி விழா ஏற்பாடு செய்திருந்தார் . கட்சியின் பெரிய தலைவர் பாராட்டுரை வழங்க வந்திருந்தார் . அவர் பேசும்போது , இங்கே பாராட்டுப்பெறுகிறவர் எனக்கு மிக நெருக்கமான நண்பர் . போராட்டங்களில் கலந்து கொண்டு ஜெயிலுக்குப்போனபோது நானும் இவரும் ஒரே அறையில் பல நாட்கள் இருந்திருக்கிறோம் . பல விஷயங்களைக் கலந்து பேசியிருக்கிறோம் . நான் இந்தப் பகுதிக்கு வரும்போதெல்லாம் இவரைச் சந்திக்காமல் சென்றதில்லை . இவரது வீட்டுக்குக் கூட சென்று விருந்து உண்டிருக்கிறேன் . நானும் இவரும் அவ்வளவு நெருக்கம் . கடிதத் தொடர்பு கூட அடிக்கடி உண்டு என்று அடுக்கிக் கொண்டே போனார் . திடீரென்று பேச்சை நிறுத்தி , பாராட்டுப்பெறுகிறவரின் காதருகே கொஞ்சம குனிந்து “ ஏங்க உங்க பேரு என்ன ?” என்று கேட்டதும் கூடியிருந்தவர்கள் சிரித்துவிட்டனர் . இப்படிப்போலியாகப்பேசுகிறவர்களும் நடப்பவர்களும் தான் நாட்டில் அதிகம் உண்டு .
பெருந்தலைவர் காமராசர் தொண்டர்களை மதிக்கும் தூயவராகத் திகழ்ந்தார் . இவருடன் வெளியூர் சுற்றுப் பயணம் செய்வதென்றால் கூட இருப்பவர்கள்அந்தந்தப் பகுதியிலுள்ள தொண்டர்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் . கார் ஊரைக் கடக்கும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் எப்படி இருக்கார் என்று கேட்பார் . உடனே சொன்னால் சந்தோஷப்படுவார் . சொல்லாவிட்டால் இது கூடத் தெரியலையா என்று கோபித்துக்கொள்வார் . ஒரு முறை அவர் சிவகிரியில் தங்கியிருந்தார் . வெளியே போலீஸ்காரர் யாரோ ஒருவரை விரட்டிக்கொண்டிருந்தார் . அந்த நபர் கையெடுத்துக் கும்பிட்டு “ நான் உள்ளே போகவில்லை . ஓர் ஓரமாக நிற்கிறேன் . தலைவரைப் பார்த்து விட்டுப் போய்விடுகிறேன் .” என்று கெஞ்சினார் . அவரது ஏழ்மையான கோலத்தைக் கண்ட போலீஸ்காரர் நீயெல்லாம் இங்கே நிற்கவே கூடாது என்று விரட்டுகிறார் . ஜன்னல் வழியாக இதைக் கவனித்து விட்ட பெருந்தலைவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் . அந்த மனிதரை உற்றுப் பார்த்தார் . முகத்தில் மலர்ச்சி , வேலு வாப்பா .. வா .. நல்லாயிருக்கியா .. என்று அழைத்தபடி அந்த மனிதரின் தோளில் கை போட்டு அறைக்குள் அழைத்துச்சென்றார் . போலீஸ்காரர் திகைத்து நின்றார் . அதை விடவும் அந்த மனிதருக்கு திகைப்பு அதிகமாயிருந்தது . பல ஆண்டுகளுக்கு முன் சிறைக்கொட்டடியில் ஒன்றாகக் இருந்ததை நினைவு கூர்ந்து , பெயரையும் நினைவில் வைத்து வாய் மணக்க “ வேலு வா ” என்று அழைத்தால் வியப்பு ஏற்படாமலிருக்குமா ? அந்த மகிழ்ச்சியில் தனது வறுமை நிலையைக் கூட சொல்லாமல் அவர் விடை பெற்றுச் சென்று விட்டார் . ஆனால் பெருந்தலைவர் மற்றவர்கள் மூலம் அவரது நிலையை விசாரித்து அறிந்து ஒருவரிடம் சொல்லி காவலாளி வேலையை வாங்கிக் கொடுத்தாராம் .
உயர்ந்தவர் என்பதால் தேவையில்லாமல் புகழ்வதும் , எளியவர் என்பதால் இகழ்ந்து ஒதுக்காமலும் இருப்பவரே சிறந்த மனிதர் என்று புறநானூறு கூறுகிறது . அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் .