LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1159 - கற்பியல்

Next Kural >

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காமம் தீபோன்று தான் நின்ற விடத்தைச் சுடுமாதலால் நீ ஆற்றல் வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.) தீத் தொடிற் சுடின் அல்லது - தீத் தன்னைத் தொட்டாற் சுடுமே யல்லது; காம நோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமநோய் போலத் தன்னை விட்டு நீங்கினுஞ் சுடவல்லதோ? இல்லையே! பரிமேலழகர் தீத் தொடிற் சுடிற் சுடலல்லது எனச் சுடல் என்பதை முன்னுங் கூட்டி , தீத் தன்னைத் தொட்டாற் சுடுமாயிற் சுடுதலல்லது என்று உரையும் , சுடுமாயி னென்பது மந்திர மருந்துகளாற் றம்பிக்கப்படாதாயி னென்றவாறு. காமத்திற் கதுவு மில்லை யென்பாள் வாளா 'சுடல்' என்றாள் . என்று சிறப்புங் கூறினார். தீவலிகட்டல் செயற்கையாதலானும் , காம நோயையும் ஒகத்துயிலால் (யோகநித்திரையால்) கட்டலாமாதலானும், அது அத்துணைச் சிறந்ததன்று. விடுதல் கருதாமை. தீயினுங் கொடியதை எங்ஙனம் ஆற்றவொண்ணு மென்பதாம்.
கலைஞர் உரை:
ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!.
சாலமன் பாப்பையா உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.
Translation
Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove.
Explanation
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?.
Transliteration
Thotirsutin Alladhu Kaamanoi Pola Vitirsutal Aatrumo Thee

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >