LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 94 - இல்லறவியல்

Next Kural >

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.
தேவநேயப் பாவாணர் உரை:
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்புறுத்தும் வறுமை இலதாகும். ' உறூஉம் ' ஈரிடத்தும் பிறவினையான சொல்லிசை யளபெடை 'துவ்வாமை நுகராமை , துய்-து .எல்லாரிடத்தும் இன்சொற் சொல்வார்க்கு எல்லாரும் நண்பரும் அன்பருமாவராதலின் , எல்லாப் பொருளுங் கிடைக்குமென்றும் அதனால் வறுமையிராதென்றும் கூறினார் . வறுமையால் ஐம்புல நுகர்ச்சி கூடாமையின் வறுமையைத் துவ்வாமை யென்றார் . வறியவரைத் ' துவ்வாதவர் ' என்று முன்னரே ( சஉ) கூறியிருத்தல் காண்க .
கலைஞர் உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு 'நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
Translation
The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found.
Explanation
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
Transliteration
Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum Inpurooum Inso Lavarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >