திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)
மணக்குடவர் உரை:
நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின்.
இது துறவறமானது ஊழினால் வருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உறல் பால ஊட்டா கழியும் எனின் - அடைய வேண்டிய துன்பங்களை அடைவிக்காது தீயூழ்கள் நீங்குமாயின்; துப்பரவு இல்லார் மன் துறப்பர் -நுகர்ச்சி யில்லாத வறியர் பெரும் பாலும் துறவியராவர்.
பரிமேலழகர் ஒழியிசைப் பொருளாகக் கூறுவது பாவிலேயே அடங்கியிருத்தலால், மன்னிடைச் சொற்கு மிகுதிப் பொருள் கொள்ளப்பெற்றது. துன்பங்களின் பன்மைபற்றி அவற்றை யூட்டும் ஊழையும் பன்மையாகக் கொண்டார். வலிமிகாமையால் 'ஊட்டா' எதிர் மறைமுற்றெச்சம். துறவுநிலை இயற்கையாக அமைந்திருந்தும் அதை வீடுபேற்றிற்குப் பயன் படுத்தாவாறு ஊழ்கெடுக்குமென்பது இங்குக் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை
வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம்
மேற்கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
Translation
The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.
Explanation
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.