|
|||||
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு 6 லட்சம் பேர் எழுதினர்! |
|||||
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பதவியில் 1199 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடந்த தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 பதவியில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி, வேலை வாய்ப்புதுறை இளநிலை அதிகாரி, சிறைத்துறை பயிற்சி அதிகாரி, தொழில்துறை உதவி ஆய்வாளர், சப்-ரிஜிஸ்டிரார்(கிரேடு 2), நகராட்சி ஆணையர்(கிரேடு 2), உதவி பிரிவு அதிகாரி(சட்டத்துறை), உதவி பிரிவு அதிகாரி(நிதித்துறை), தணிக்கை ஆய்வாளர்(இந்து சமய அறநிலையத்துறை), கைத்தறி துறை இன்ஸ்பெக்டர், மூத்த ஆய்வாளர்(கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 23 துறைகளில் காலியாக உள்ள 1,199 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 9ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதில், 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 8242 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இத்தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 116 மையங்களில் 2268 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு பணியில் 39,188 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். சென்னையில் மட்டும் 247 மையங்களில் 64,309 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை தமிழில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 863 பேரும், ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். சென்னையைப் பொறுத்தவரை மயிலாப்பூர், அண்ணாநகர், எழும்பூர், பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேர்வுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 8 மணி முதலே தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கூடத்திற்கு வந்து இருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுதச் சென்ற நேரத்தில் பெற்றோரிடம் தங்கள் குழந்தையை ஒப்படைத்து சென்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வுக் கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க டி.என்.பி..எஸ்.சி. அதிகாரிகள் 254 பறக்கும் படையினர் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். கண்காணிப்பு பணியில் 247 முதன்மை கண்காணிப்பாளர்களும், 3230 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாநிலம் முழுவதும் பதட்டமான 11 இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்பட்டது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கப்படும். சாதாரணமாக ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 50 பேர் தான் போட்டியிடுவார்கள். ஆனால், குரூப் 2 தேர்வில் 1 பதவிக்கு 500 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. குரூப் 2 தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், “தேர்வில் பொது அறிவியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தது. நடப்பு நிகழ்வில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. இதே போல பொது தமிழ் தேர்வும் எளிதாக இருந்தது. இதனால், எளிதாக தேர்வு எழுத முடிந்தது “ என்றனர். |
|||||
by Mani Bharathi on 12 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|