|
|||||
டொரண்டோவில் தமிழ் இருக்கை |
|||||
![]() டொரண்டோவில் தமிழ் இருக்கை உறுதியானதுபட்டியலில் அடக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழியின் இலக்கிய வளம் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அதற்கு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன், அமெரிக்காவில் தொடங்கப்பட்டது, தமிழ் இருக்கை அமைப்பு (Tamil Chair Inc). ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதை தன் முதல் இலக்காகக் கைகொண்டது இந்த அமைப்பு. அதற்கு, 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை (40 கோடி ரூபாய்) ஆதார நிதியாகப் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டியது அவசியம். தமிழ் இருக்கை அமைப்பின் முதன்மை இயக்குநர்களான மருத்துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் ஆகிய இருவரும் தலா அரை மில்லியன் டாலர்களைத் தொடக்க நன்கொடையாக வழங்கி ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தனர். அதை, 'இந்து தமிழ் திசை', ‘தி இந்து’ ஆங்கிலம் ஆகிய நாளிதழ்கள் முதன் முதலில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிவித்தன. 'இந்து தமிழ் திசை' நாளிதழ், ஹார்வர்டு தமிழ் இருக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டி தொடர் கட்டுரைகளையும் அது தொடர்பான செய்திகளையும் இடையறாது வெளியிட்டது. அத்துடன், தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் தமிழ் இருக்கை இடம்பெறும் வண்ணம், தன்னுடைய ‘வாசகர் திருவிழா’, ‘யாதும் தமிழே திருவிழா’ ஆகிய நிகழ்ச்சிகளில் முன்னாள், இந்நாள் நீதிபதிகளைக் கொண்டு பரப்புரை செய்து கவனப்படுத்தி வந்தது வாசகர்களுக்கு தெரிந்ததே.
ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, 5 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதற்குத் தேவைப்படும் 3 மில்லியன் டாலர்கள் (17.1 கோடி ரூபாய்) நிதியைத் திரட்டித் தற்போது தன்னுடைய இரண்டாம் இலக்கிலும் வெற்றியடைந்துவிட்டது கனடியத் தமிழ்ச் சமூகம். இந்த முயற்சியானது, தமிழ் இருக்கை அமைப்பும், கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து எடுத்த கூட்டுச் செயல்திட்டமாகும். இந்த முயற்சிக்கு கனடா, இலங்கை மட்டுமல்லாது, உலகத்தின் பல பாகங்களில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து நன்கொடைகள் வியப்பூட்டும் வகையில் வந்து குவிந்தன. 4000 உலகத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும், கிராமச் சங்கங்களும், பள்ளிகளில் கல்லூரிகளில் இணைந்து பயின்ற பழைய மாணவ மாணவியரும், முதியோரும் சிறுவர் சிறுமியரும் கூட ஆர்வத்தோடு பங்குபெற்று டொரண்டோ தமிழ் இருக்கையின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள். ஹார்வர்டு தமிழ் இருக்கையை வாசகர்களிடம் கொண்டு சென்றதுபோலவே டோரண்டோ தமிழ் இருக்கையையும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் கொண்டு சென்றதையும் வாசகர்கள் அறிவார்கள். தற்போது, தமிழக அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாய், திமுக வழங்கிய 10 லட்சம் ரூபாய், தந்தை செல்வநாயகம் அறக்கட்டளை வழங்கிய 1.4 கோடி ரூபாய் ஆகியன, டொரண்டோ தமிழ் இருக்கை அமைக்கத் தேவைப்படும் ஆதார நிதி இலக்கை எட்ட வேண்டிய இறுதிக்கட்டத்தில் இணைந்துகொள்ள, 17.1 கோடி ரூபாயைத் துரிதமாக திரட்ட உதவின. தமிழர்களுக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்து ‘தமிழ் மரபுத் திங்கள்’ எனத் தை மாதத்தைக் கனடா அரசாங்கமே கொண்டாடி வருகிறது. அந்நாட்டினுடைய உயரிய பல்கலைக்கழகமான டோரண்டோவில் தமிழுக்கு இருக்கை அமையவிருப்பது கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபுரோ வளாகத்தின் தலைவர் விஸ்டம் டெட்டி, இந்த முயற்சியில் தமிழ்ச் சமூகம் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு வென்று காட்டியிருப்பதை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
|
|||||
![]() |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 10 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|