LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-18

3.05. மானக்கஞ்சாற நாயனார் புராணம்



871    மேலாறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூலாறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது
கோலாறு தேன் பொழியக் கொழுங் கனியின் சாறு ஒழுகும்
காலாறு வயல் கரும்பின் கழழ் சாறூர் கஞ்சாறூர்     3.5.1

872    
கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்து ஒதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக் கண் உறைத்து மலர்க்கண் சிவக்கும்
தண்ணீர் மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலை வணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வள வயல்கள் உள அயல்கள்     3.5.2

873    
புயல் காட்டுங் கூந்தல் சிறு புறங்காட்டப் புன மயிலின்
இயல் காட்டி இடை ஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்டக் கண் மூரிக்
கல் காட்டுந் தடங்கள் பல கதிர்காட்டுந் தடம் பணைகள்     3.5.3

874    
சேர் அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய்
வேறருகு மிடை வேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலை வளைப்ப வண்டலை தண்டலை உழவர்
தாறிரியும் நெடுங்கொடுவாள் அனையயுள தனி இடங்கள்     3.5.4

875    
பாங்கு மணிப்பல வெயிலும் சுலவெயிலும் உள மாடம்
ஞாங்கரணி துகிற் கொடியும் நகிற் கொடியும் உள அரங்கம்
ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு     3.5.5

876    
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றிப்
புனை சாயல் மயில் அனையார் நடம் புரியப் புகல் முழவம்
கனை சாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கியதால்     3.5.6

877    
அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்
செப்பவருங் குடி விளங்க திரு அவதாரம் செய்தார்
மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை
வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார்     3.5.7

878    
பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனி மதியின்
அணிவுடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற
தணிவில் பெரும் பேறுடையார் தம் பெருமான் கழல் சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார்     3.5.8

879    
மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம்
ஈறில் பெருந் திருவுடையார் உடையார் என்றியாவையுநேர்
கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்     3.5.9

880    
விரிகடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இத் தன்மையராம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளைப் பேறு இன்மையினால்
அரியறியா மலர்க் கழல்கள் அறியாமை அரியாதார்
வரு மகவு பெறல் பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்     3.5.10

881    
குழைக் கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெருங்கற்பின் மனைக் கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த இப் பிறவிக்கு கொடுஞ்சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவப் பெண் கொடியைப் பெற்று எடுத்தார்     3.5.11

882    
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்பச்
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர் பிரான்
அறந்தலை நின்று அவர்க்கெல்லாம் அளவில் வளத்து அருள் பெருக்கிப்
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார்     3.5.12

883    
காப்பணியும் இளங்குழவிப் பதநீக்கிக் கமழ் சுரும்பின்
பூப்பயிலுஞ் சுருள் குழலும் பொலங்குழையும் உடன் தாழ
யாப்புறு மென் சிறுமணிமேகலை அணி சிற்றாடையுடன்
கோப்புமை கிண்கிணி அசையக் குறுந்தளிர் மெல்லடி ஒதுங்கி     3.5.13

884    
புனை மலர்மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனையகத்து மணிமூன்றில் மணல் சிற்றில் இழைத்து மணிக்
கனை குரல் நூபுரம் அலையக் கழன்முதலாய் பயின்று முலை
நனை முகஞ்செய் முதல் பருவம் நண்ணினள் அப்பெண் அமுதம்     3.5.14

885    
உறுகவின் மெய்ப் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த
முறுவல் புற மலராத முகிண்முத்த நகை என்னும்
நறுமுகை மென் கொடி மருங்குல் நளிர்ச் சுருள் அந்தளிர் செங்கை
மறுவில் கொழுந்தினுக்கு மணப் பருவம் வந்தணைய     3.5.15

886    
திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும்
ஒரு மகளை மண் உலகில் ஓங்கு குல மரபினராய்க்
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள் பேச வந்து அணைந்தார் பெரு முதியோர்     3.5.16

887    
வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மணத் திறம் கேட்டே
எந்தமது மரபினுக்குத் தரும் பரிசால் ஏயும் எனச்
சிந்தை மகிழ்வுற உரைத்து மணநேர்ந்து செலவிட்டார்     3.5.17

888    
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக்
குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிக விரும்பி
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்     3.5.18

889    
மங்கலமாஞ் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்
தங்குல நீள் சுற்றம் எலாம் தயங்கு பெருங்களி சிறப்பப்
பொங்கிய வெண் முளைப் பெய்து பொலங் கலங்களிடை நெருங்கக்
கொங்கலர் தண் பொழில் மூதூர் வதுவை முகங் கோடித்தார்     3.5.19

890    
கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும்
தஞ்சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப
மஞ்சாலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய     3.5.20

891    
வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு அணையா முன் மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார் தந் திருமனையில் ஒரு வழியே
தெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்தம்
உள்ள நிலைப் பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்     3.5.21

892    
முண்டநிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின் கண் கோத்தணிந்த எற்பு மணி
பண்டொருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
வெண்டரளம் எனக் காதின் மிசை அசையும் குண்டலமும்     3.5.22

893    
அவ்வென்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத் தாழ்வடமும்
பைவன்பேர் அரவு ஒழியத் தோளில் இடும் பட்டிகையும்
மைவந்த நிறக் கேச வடப் பூண் நூலும் மனச்
செவ்வன்பர் பவமாற்றுந் திரு நீற்றுப் பொக்கணமும்     3.5.23

894    
ஒரு முன் கைத்தனி மணிகோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்
அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருவுடையும்
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப் பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க     3.5.24

895    
பொடி மூடு தழல் என்னத் திரு மேனி தனிற்பொலிந்த
படி நீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க்
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார்     3.5.25

896    
வந்து அணைந்த மா விரத முனிவரைக் கண்டு எதிர் எழுந்து
சிந்தை களி கூர்ந்து மகிழ் சிறந்த பெருந் தொண்டனார்
எந்தை பிரான் புரி தவத்தோர் இவ் இடத்தே எழுந்து அருள
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார்     3.5.26

897    
நற்றவராம் பெருமானார் நலமிகும் அன்பரை நோக்கி
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்
பெற்றது ஒரு பெண்கொடி தன் வதுவை எனப் பெருந்தவம்
மற்று உமக்குச் சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார்     3.5.27

898    
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி
மானக்கம் சாறனார் மணக் கோலம் புனைந்து இருந்த
தேனக்க மலர்க் கூந்தல் திரு மகளைக் கொண்டு அணைந்து
பானற்கந் தர மறைத்து வரும் அவரைப் பணிவித்தார்     3.5.28

899    
தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து அணங்கு இவள் தன் மயிர் நமக்குப்
பஞ்ச வடிக்காம் என்றார் பரவ அடித் தலங்கொடுப்பார்     3.5.29

900    
அருள் செய்த மொழி கேளா அடல் சுரிகைதனை உருவிப்
பொருள் செய்தாம் எனப் பெற்றேன் எனக் கொண்டு பூங்கொடி தன்
இருள் செய்த கருங்கூந்தல் அடியில் அரிந்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர்க் கரத்தினிடை நீட்ட     3.5.30

901    
வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறி
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்கத்
தூங்கிய பொன்மலர் மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்     3.5.310

902    
விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு மதிக்
கொழுந்து அலைய விழுங் கங்கை குதித்த சடைக் கூத்தனார்
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசிந்தச்
செழும் புவனங்களில் ஏறச் செய்தோம் என்று அருள் செய்தார்     3.5.32

903    
மருங்கு பெருங்கண நாதர் போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம்
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்தையர்
பெருங் கருணைத் திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்     3.5.33

904    
தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர் துதி செய்ய
இண்டை வார் சடை முடியார் எழுந்து அருளிப் போயினார்
வண்டுவார் குழற் கொடியைக் கைப் பிடிக்க மணக் கோலம்
கண்டவர்கள் கண் களிப்பக் கலிக் காமனார் புகுந்தார்    3.5.34

905    
வந்தணைந்த ஏயர் குல மன்னவனார் மற்றந்தச்
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளிப்
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றிச்
சிந்தை தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறம் கேட்டு     3.5.35

906    
மனந்தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புரிந்து
தனம் பொழிந்து பெருவதுவை உலகெலாம் தலை சிறப்ப
இனம்பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்றணைந்தார்     3.5.36

907    
ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரிற் புக்க மா வடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன்     3.5.37


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.