தனது ஆழ்ந்த அறிவாலும் சிந்தனைத் திறனாலும் தமிழ் மேம்படவும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் பாடுபட்டவர். சொல்லும் செயலும் ஒன்றாய் வாழ்ந்தவர். தமிழ் சான்றோர் பேரவை மூலமாக தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் தன் இறுதி மூச்சுள்ளவரை தமிழரின் நலனுக்காகவே முழு ஆற்றலையும் மூலதனமாகியவர். தமிழ் மக்கள் - மொழி நலன்களுக்காகத் துவளாது, அயராது, அச்சமின்றி உழைத்தவர். அதிலும் தந்தை பெரியார் தமிழ் இசை மன்றம் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய இசைகளான நாட்டுபுறப்பாட்டு, பறை உள்ளிட்டவற்றை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகளை நடத்தி தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றியவர். தமிழினப் போராளி இயக்குநர் உயர்திரு. அருணாச்சலம் அவர்கள் உயிர்நீத்தார் எனும் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கொணாத் துயரை ஏற்படுத்தியுள்ளது.
"அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் - என் உடையரேனும் இலர்." "அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் - என்பும் உரியர் பிறர்க்கு."
போன்ற திருக்குறள்களுக்கு இணங்க அனைவராலும் அன்பு செலுத்தப்பட்ட, மதிக்கப்பட்ட தமிழ் உணர்வாளரான உயர்திரு. அருணாச்சலம் அவர்களுக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் சார்பாக உலகத் தமிழ் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அவரைப் பிரிந்து வாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர் சென்ற பாதையில் தொடர்ந்து பயணித்து, தமிழ் மொழி, தமிழ் இசை வளர பாடுபட உறுதி ஏற்று நடப்பதே நாம் அனைவரும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
அன்புடன், முனைவர் வை. க. தேவ் தலைவர், உலகத் தமிழ் அமைப்பு 24-மே-2016, அமெரிக்கா
|