இருளொடு தாரகை இரண்டினை மயக்கி குழலென மலரென மயல்வரச் சுமந்து வில்லினைக் குனித்து கணையினை வாங்கி புருவம் கண்ணென உயிர்விடப் பயிற்றி மலையினைத் தாங்கி அமுதினைக் கடைந்து (5)
முலையென சொல்லென அவாவர வைத்து மெய்யினைப் பரப்பி பொய்யினைக் காட்டி அல்குல் இடையென நெஞ்சுழலக் கொடுத்து முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி அடியென உடலென அலமரல் உறீஇ (10)
மூரி வீழ்ந்த நெறிச்சடை முனிவர் சருக்கம் காட்டும் அருமறை சொல்லி உள்ளம் கறுத்து கண்சிவந்து இட்ட மந்திரத்து அழல்குழி தொடுவயிறு வருந்தி முன்பின் ஈன்ற பேழ்வாய்ப் புலியினை (15)
கைதைமுள் செறிந்த கூர்எயிற்று அரவினை காருடல் பெற்ற தீவிழிக் குறளினை உரிசெய்து உடுத்து செங்கரம் தரித்து செம்மலர் பழித்த தாட்கீழ்க் கிடத்தி திருநடம் புரிந்த தெய்வ நாயகன் (20)
ஒருநாள் மூன்று புரம்தீக் கொளுவ பொன்மலை பிடுங்கி கார்முகம் என்ன வளைத்த ஞான்று நெடுவிண் தடையக் கால் கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து நெருக்குபொழில் கூடல் அன்னசெம் மகளிர் (25)
கண்ணெனும் தெய்வக் காட்சியுள் பட்டோர் வெண்பொடி எருக்கம் என்புபனை கிழியினை பூசி அணிந்து பூண்டு பரிகடவி கரத்தது ஆக்கி அந்நோ அருத்தி மீட்பர் நிலைவல் லோரே. (30)
|