திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை
உடைத்து, அதனை ஒழி' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) என் நெஞ்சு- என் மனமே!; காதலர் உள்ளத்தாராக- காதலர் உன்னகத்தாராயிருக்கவும்; நீ உள்ளி யாருழைச் சேறி- நீ அவரைத் தேடி யாரிடத்துச் செல்கின்றாய்? உனக்குள்ளேயே யிருக்கின்றவரை நீ வெளியே தேடிச்செல்லுதல், ஒருவர் தன் இல்லத்திற்குள்ளிருப்பவரைத் தேடி வேறோரில்லம் செல்வது போலும் எள்ளி நகையாடத் தக்க செய்தி யென்பதாம். "உள்ள மென்புழி அம்முப் பகுதிப் பொருள் விகுதி." என்றார் பரிமேலழகர். நெஞ்சும் உள்ளமும் ஒன்றேயாதலின், உள் என்றிருக்க வேண்டிய இடப்பொருட்சொல் 'அம்' என்னும் முதனிலைப் பொருளீறு பெற்றதென்று அவர் கொண்டது சரியே.
கலைஞர் உரை:
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.
Translation
My heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find?.
Explanation
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.