இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய தீவிரவாதிகளுள், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் ஒருவர். இவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் அரசு நேற்று முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், தற்போது தாவூத், தங்கள் நாட்டில் இல்லை என்றும் பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா உடனான உறவை மேம்படுத்த, சிறப்பு தூதராக நியமிக்கப்பட்ட ஷாரியார் கான், லண்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். நவாஸ் ஷெரீப் அரசு குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் காரணமாகவே தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டதாக கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தாவூத் தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்த தாவூத்தை, 2003ம் ஆண்டு சர்வதேச குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
|