சூரியன் மறைந்த பின்னரும் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மின்சாராம் உற்பத்தி செய்து அமெரிக்காவை சேர்ந்த சோலானா என்ற நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தற்போது, இயற்கை எரிபொருள் வளங்கள் குறைந்து வருவதால், அதை பாதுகாக்கவும், மாற்று எரிபொருள்களை கண்டுபிடிக்கவும் உலகம் முழுவதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கையான முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தற்போது, சூரிய ஒளி மற்றும் சூரிய வெப்பம் ஆகிய இரண்டு வேறுபட்ட தொழில்நுட்பங்கள் மூலம் சூரிய சக்தியில் இருந்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில், சூரிய ஒளி தொழில்நுட்பம் பரவலாக உள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பம் மூலம், சூரிய ஒளி உள்ள வேளைகளில் மட்டும் தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். வழக்கமாக, இரவு நேரங்களில் மின் தேவை அதிகரிக்கும். அப்போது, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாது. இந்த குறைபாட்டை தீர்க்கும் விதத்தில், அமெரிக்காவின், அரிசோனா மாநிலத்தில் அமைந்து உள்ள 'சோலானா' என்ற தனியார் மின் நிலையம் சூரிய மின் உற்பத்தியில் ஒரு புதிய புரட்சியை செய்துள்ளது.
சோலானா சூரிய சக்தி மின் நிலையம் அமெரிக்காவின் அரிசோனா மாநில, பாலைவன பகுதியில் சுமார் 1,920 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு, பிறை சந்திரன் வடிவத்தில் உள்ள 2,700 பரவளைய கண்ணாடிகளில் சூரிய வெப்பம் ஒருமுனைப்படுத்தப் படுகிறது. இந்த வெப்பம், சூடு தாங்கக் கூடிய செயற்கை எண்ணெயை, 390 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. பின் அந்த எண்ணெய், கொதிகலன்களை சுற்றி சுழன்று, நீரை கொதிக்க வைத்து, வழக்கமான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது. ஒரு பகுதி வெப்பம் இப்படி செலவிடப்பட, இன்னொரு பகுதி, உருக்கு நிலையில் உள்ள உப்பில் சூடேற்றி, அதை 276 டிகிரி செல்சியசில் வைக்கிறது. இந்த நிலையில் உள்ள உப்பு, வெப்பத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் திறன் உடையது. சூரியன் மறைந்த பின், உப்பில் உள்ள வெப்பம் கொதிகலன்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம், சுமார் 280 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. சூரியன் மறைந்த பின்னும், ஆறு மணி நேரம் வரையில் இதே அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என, சோலானா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
|