LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 473 - அரசியல்

Next Kural >

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர். ('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.)
மணக்குடவர் உரை:
தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் உடை வலி அறியார் - தம்முடைய உண்மையான வலியளவைச் சரியாக அளந்தறியாது , ஊக்கத்தின் ஊக்கி - தம் மனவெழுச்சி மிகையால் தம்மினும் வலியாரொடு போர்செய்ய முயன்று ; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் தாக்குதலைப்பொறுக்கும் ஆற்றலின்றி இடையே கெட்டுப்போன அரசர் உலகத்திற்பலராவர் . ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபாகவரும் உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் , உடை என்று குறுகி முன்பின்னாக முறை மாறிநின்றது . இனி , இடம் மாற்றாது உள்ளவாறே கொண்டு , (தாம்) உடையதம் என்று பொருள் கொள்ளினுமாம் . உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் ஒரு தொடர்ச் சொல்லின் நிலைமொழியாகவும் வரும் என்பதை , உடைய நம்பி . உடைய பிள்ளையார் , உடைய வரசு என்னும் வழக்கு நோக்கி யறிக . முரிந்தார் பலர் என்பது உலகத்தில் அறிவுடையார் சிலர் என்பதை உணர்த்தும் . முரிதல் என்னுஞ்சொல் முறிதல் என்னும் வடிவுங் கொள்ளும் .
கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
Translation
Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven.
Explanation
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.
Transliteration
Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki Itaikkan Murindhaar Palar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >