|
||||||||
தமிழுக்கு வாழ்வளித்த தகைமையாளர்! - உ.வே.சா.. |
||||||||
அவர்தாம் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன் ஆகிய உ.வே.சா. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திற்கு அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் பிறந்த உ.வே.சா. உண்மையிலேயே உத்தமதானபுரம் தமிழ்த்தாய்க்கு அளித்த உத்தம தானமே ஆவார். உ.வே.சா.வின் அரும்பெரும் முயற்சியாலேயே சீவக சிந்தாமணி எனும் சமணக் காப்பியம் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. அதன் பழைய பிரதிகளைப் பெறுவதற்காக அவர் ஜைனர் வீடுகளுக்குச் சென்று பட்டபாட்டையெல்லாம் விரிவாகவே தம்முடைய ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்திருக்கின்றார். 😁அடுத்து பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு ஆகியவற்றை அரும்பாடுபட்டு ஆராய்ந்து வெளியிட்டார். அதற்கடுத்து பௌத்தக் காப்பியமான மணிமேகலை, அகநானூறு, பதிற்றுப்பத்து, பெருங்கதை, ஐங்குறுநூறு, பரிபாடல், தமிழ்விடுதூது, தக்கயாகப் பரணி என்று உ.வே.சா.வின் பதிப்பில் வெளிவந்த அருந்தமிழ் நூல்கள்தாம் எத்தனை எத்தனை! உ.வே.சா. பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றுக்கு உதவிசெய்தவர் இராமநாதபுரம் பாண்டித்துரைத் தேவர். அவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிப் பல நூல்களை வெளியிட்டதோடு, ’செந்தமிழ்’ என்ற இலக்கிய ஏட்டையும் நடாத்திவந்தார். பாண்டித்துரைத் தேவரின் தாயார் 1898இல் காலமாகிவிட்டார் என்பதையறிந்த உ.வே.சா. அவரைத் துக்கம் விசாரிப்பதற்காக இராமநாதபுரம் சென்றார். பாண்டித்துரைத் தேவர் வாயிலாக உ.வே.சா.வின் தமிழ்ப்பணிகளை அறிந்த இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், உ.வே.சா.வைத் தம் அரண்மனைக்கு அழைத்து அவருடைய தமிழ் நூல்களின் பதிப்புச் செலவுகளுக்குப் பயன்படும் வகையில் ’ஒரு கிராமத்தையே’ தானமாகத் தர முன்வந்திருக்கின்றார். What a great philonthropist he was!! இதையறிந்து மன்னரைச் சந்தித்த உ.வே.சா., “மகாராஜா அவர்களுக்கு என்பால் இருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் இதன்மூலம் உணர்ந்துகொண்டேன்; எனக்கு இப்போது குறை ஒன்றுமில்லை; ஆண்டவன் அருளால் (கும்பகோணம்) கல்லூரியில் சம்பளம் வருகின்றது. அத்தோடு நான் செட்டாக வாழத் தெரிந்தவன். தாங்கள் வழங்குவதை மறுக்கிறேன் என்று எண்ணக்கூடாது; சமஸ்தானத்தின் இப்போதைய நிலையும் எனக்குத் தெரியும். ஆகவே இவ்வளவு பெரிய கொடையைத் தங்களிடமிருந்து பெற என் மனம் உடன்படவில்லை” என்று மிகவும் பணிவாகத் தெரிவித்திருக்கின்றார். உண்மையிலேயே அப்போது இராமநாதபுரம் சமஸ்தானம் பல்வேறு கடன் தொல்லைகளில் மாட்டிக்கொண்டு அல்லலுற்றிருந்த காலம். அதனால் மன்னர் இவ்விஷயத்தை மேலும் வற்புறுத்தவில்லை. சற்று சிந்தித்துப்பாருங்கள்! வேறு யாராக இருந்திருந்தாலும் ”அரண்மனைக்குக் கடன் இருந்தால் நமக்கென்ன? மன்னரே தருகிறேன் என்கிறார்; தேடிவந்த இலட்சுமியை வேண்டாமென மறுப்பானேன்?” என்று அகமகிழ்ந்து அக்கொடையை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். உ.வே.சா. அத்தகையோர் அல்லர்! பெருந்தன்மையும் அருங்குணமும் வாய்க்கப்பெற்ற மாமனிதர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று! 1906ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு உ.வே.சா.வுக்கு ”மகா மகோபாத்தியாய” (பெரும் பேராசிரியர்) என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. அதுவரை வடமொழிப் பண்டிதர்களுக்கே வழங்கப்பட்டுவந்த இப்பட்டத்தை முதன்முதலில் பெற்ற பெருமைக்குரிய தமிழர் உ.வே.சா. ஆவார். 👏👍 1917ஆம் ஆண்டு காசியிலுள்ள ’பாரத தர்ம மகா மண்டலம்’ என்ற சபையினர் உ.வே.சா.வின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி அவருக்கு ’திராவிட வித்யாபூஷணம்’ (தமிழ்க் கல்விமணி) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர். 👍 1925ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 24ஆம் ஆண்டுவிழா மதுரையில் நடைபெற்றது. அவ்விழாவில் உ.வே.சா.வின் தமிழ்த்தொண்டினைக் கௌரவிக்கும் வகையில் அவருக்குத் ”தாக்ஷிணாத்ய கலாநிதி” (தென்னகக் கலைச்செல்வம்) என்ற பட்டம் காஞ்சி மடத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 👍 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியப் பனுவல்களை, சிலம்பு, மேகலை, சிந்தாமணி போன்ற அரிய காப்பியங்களை இன்று நாம் வாசித்து உவப்பதற்கும் அவற்றின் வாயிலாய்ப் பண்டைத் தமிழரின் செம்மாந்த வாழ்வையும், பண்பாட்டுச் செழுமையையும் அறிந்து வியப்பதற்கும் வாய்ப்பளித்தவர் தமிழ்ச்செம்மல் உ.வே.சா.
-மேகலா இராமமூர்த்தி,அமெரிக்கா |
||||||||
by Swathi on 19 Feb 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|