சிறப்பு நேர்காணல்:
சிறப்பு நேர்காணல்:
இயற்கை விவசாயத்தை மேம்படுத்தி விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டு வரும் "உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை" கூடவே சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தமின்றி 100 வீடுகளைக் கட்டித் தந்து இருக்கிறது.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் 'வலைத் தமிழ்' சார்பில் 'உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை' நிறுவனர் செந்தில்நாதன் அவர்களிடம் பேசினோம். அவர் கூறியதாவது:
2017-ல் எங்கள் அமைப்பைத் துவங்கினோம். இன்றைக்கு இயற்கை விவசாயிகள் பக்கம் அனைவரது கவனமும் திரும்பி உள்ளது. முதலில் நேரடி விற்பனை மூலமாக விவசாயிகள் பலன் பெற ஈரோடு மற்றும் கோவையில் நேரடி விற்பனை நிலையம் தொடங்கினோம். தற்போது அனைத்து மாவட்ட நுகர்வோர்களுக்காக ஆன்லைன் விற்பனையை (uyironline.in) துவங்கியுள்ளோம்.
ஆரம்பத்தில் எங்களுடன் இணைந்தவர்கள் 25 பேர் மட்டுமே. வாராவாரம் விவசாயிகளுக்குப் பயிற்சி தருகின்றோம். முதலில் ஈரோடு, திருப்பூர் பகுதியினர் மட்டுமே எங்களிடம் பயிற்சி பெற்றனர். பிறகு விஷயம் கேள்விப்பட்டு, பக்கத்து மாவட்டங்களான கோவை, சேலம், நாமக்கல், திருச்சி பகுதி மட்டுமின்றி திண்டுக்கல்லில் இருந்தும் வந்து கலந்து கொள்கின்றனர். இயற்கை விவசாயிகளுக்குப் பயிற்சி மட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருகின்றோம்.
இந்த நிலையில் தான் தமிழகத்தையே புரட்டிப் போட்டது கஜா புயல். இதனால் நாகை, பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட பாதிப்புகள் எங்களைப் பெரிதும் வருத்தம் அடையச் செய்தது. அப்போது தான் எங்கள் அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு உதவத் தீர்மானித்தோம்.
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை ஒவ்வொரு மனிதரின் அத்தியாவசியத் தேவைகள் ஆகும். உணவு, உடை ஓரளவுக்கு அவர்களுக்குக் கிடைத்தாலும், இருப்பிடத் தேவையைக் கவனிப்பது என முடிவு செய்தோம்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். சமூக வலைத்தளங்களின் பங்கு தான் அது. வாட்சப், பேஸ் புக், யூடியூப் என எங்களது பக்கம் கண்டவர்கள் எங்களுக்கு உதவத் தொடங்கினார்கள்.
இதற்காக வீடுகளை இழந்து தலிப்பவர்களுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டோம். ஒரு வீட்டிற்கு ரூ. 26 ஆயிரம் என மதிப்பீடு செய்தோம். குடிசை தான் என்றாலும் அதற்காக மூங்கில்கள், பிட்டுமன் என்கிற மெல்லிய கூரைத் தகடுகள் கொண்டு வீடுகள் அமைத்துத் தரத் தொடங்கினோம். ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் கட்டித் தந்த வீடுகள் 100 எண்ணிக்கையை நெருங்கி விட்டது. அதன் விவரம்:
மன்னார்குடி - 1
அவரிக்காடு - 3
தாமரைப்புலம் - 4
மேலமருதூர் - 8
கோவில்தாவு - 4
கோடியக்காடு - 14
கோடியக்கரை - 12
கத்தரிப்புலம் - 11
விலுந்தமாவடி மணல்மேடு - 7
புதுப்பள்ளி - 2
விலுந்தமாவடி வடபாதி - 5
கரம்பக்குடி - 5
ஆலத்தூர் - 5
அதிராம்பட்டினம் - 2
மேலதொண்டியகாடு - 6
புஷ்பவனம் - 11
இதைச் சொல்லிக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. இது போன்று பலருக்கும் உதவ வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகச் சொல்கின்றோம்.
இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சி மற்றும் உதவிகள் தேவைப் பட்டால் எங்களை அணுகலாம்.
அலைபேசி: 9842831144.
வலைத்தளம்: http://uyironline.in
|