இரத்தினபுரி என்னும் ஊரில் சோமு,ராமு என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.அவர்கள் அந்த ஊரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்கள். இருவருமே நல்ல மாணவர்கள்தான் என்றாலும் ராமு சோமுவை விட கொஞ்சம் நன்றாக படிப்பான்.
இதனால் அவனுக்கு கர்வம் அதிகம், அடிக்கடி சோமுவை கேலி செய்து கொண்டே இருப்பான். இதனால் சோமுவுக்கு மனம் புண்படும். ஆனால் இதை அவர்கள் அப்பா, அம்மாவிடம் சொல்ல மாட்டான். ஒரு முறை ராமு சோமுவை கேலி செய்து கொண்டிருந்த பொழுது ராமுவின் அப்பா பார்த்துவிட்டார். உடனே ராமுவிடம் நீ உன் நண்பனை இவ்வாறு கேலி செய்யக்கூடாது. அவனுக்கு பாடத்தில் சந்தேகம் என்றால் அவனுக்கு உதவ வேண்டுமே தவிர கேலியும் கிண்டலும் செய்வது நல்லதல்ல, என்று அறிவுரை கூறினார்.ராமு இதை கேட்கவேயில்லை.
ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் ஒரு கேள்வியை சோமுவிடம் கேட்டார், அவனுக்கு தெரியவில்லை, பக்கத்தில் இருந்த நண்பன் ராமுவிடம் அதே கேள்வியை கேட்டபொழுது அவன் பதில் சொல்லிவிட்டான். உடனே ஆசிரியர் ராமுவை பாராட்டிவிட்டு, சோமுவிடம் பார்த்தாயா அவனும் உன் ஊரிலிருந்து தானே வருகிறான் அவன் மட்டும் எப்படி படித்துவிட்டு வருகிறான், நீ ஏன் இப்படி இருக்கிறாய் என கடுமையாக திட்டிவிட்டார். இதைக்கேட்ட சோமுவுக்கு அழுகை அழுகையாக வந்தது.
பள்ளி முடிந்தவுடன் வழக்கம்போல் இருவரும் சேர்ந்து வந்த பொழுது ராமு சோமுவை கிண்டல் செய்தான். ஏற்கனவே ஆசிரியர் திட்டிய வருத்தத்தில் இருந்த சோமுவுக்கு, ராமு மேல் கோபம் வந்துவிட்டது. இதா பார் ராமு நீ பொ¢ய படிப்பாளிதான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் உன்னிடம் படிப்பைத்தவிர வேறு எதுவும் தொ¢யாது என்று சொன்னான். இப்படி சொன்னவுடன் ராமுவுக்கும் கோபம் வந்துவிட்டது. இனிமேல் என்னிடம் பேசாதே என்று கோபித்துக்கொண்டு சென்றுவிட்டான். இப்படியாக இந்த இருவருக்கும் பகை வந்து பிரிந்து விட்டார்கள்.
இவர்கள் இருவரும் பிரிந்தவுடன் மற்ற சிறுவர்கள், ஒருவனை பற்றி மற்றவனிடம் கோள் சொல்லி விரோதத்தை வளர்த்துவிட்டுவிட்டார்கள். இப்பொழுது இவர்கள் இருவரும் தனித்தனியாகத்தான் பள்ளிக்கு சென்றார்கள். அருகருகே அமர்ந்திருந்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.நாட்கள் இப்படியே ஓடிக்கொண்டிருந்தன. அவர்கள் பள்ளியில் ஆண்டு விழா வந்தது.விளையாட்டுப்போட்டிகளுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டன.
அந்த விளையாட்டுபோட்டிகளில் சோமுவின் அணிதான் அதிகமான பரிசுகளை வென்றன. சோமுவே நான்கைந்து போட்டிகளில் பா¢சுகளை வென்றதால் அவனுக்கு அந்த ஆண்டு விலையாட்டு போட்டியின் கதானாயகன் என்ற பட்டம் கிடைத்தது.
இப்பொழுது சோமுவை எல்லோரும் புகழ ஆரம்பித்து விட்டார்கள், இதனால் ராமு மனம் புழுங்கினான்.அவன் வகுப்பு ஆசிரியர் ராமு எப்படி படிப்பில் மன்னனோ அது போல சோமு விளையாட்டில் மன்னன் என்று புகழ்ந்துரைத்தார். இதனால் ராமுவின் மனம் மேலும் புழுக்கமாயிற்று
ஒரு நாள் ராமுவின் அப்பா, அம்மாவும், அவன் தங்கையும் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆகி விட்டது..
பஸ் விட்டு இறங்கி காட்டுப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் நடந்தால்தான் அவர்கள் ஊருக்கு வரமுடியும்.வண்டி வசதிகளும் கிடையாது. என்ன செய்வது என்று யோசிக்காமல் மூவரும் அந்த இரவில் ஊருக்கு வர நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
வீட்டில் இருந்த ராமுவுக்கு தன்னுடைய அப்பா, அம்மா, தங்கை இன்னும் வரவில்லையே என்னும் கவலையில் வீட்டில் உலாத்திக்கொண்டிருந்தான். என்ன செய்வது பஸ் நிறுத்தம் வரை போய் பார்ப்போம் என்று நினைத்தான், ஆனால் தனியாக செல்வதற்கு பயமாக கூட இருந்தது.பக்கத்திலுள்ள அவன் நண்பர்களை துணைக்கு அழைத்தான், ஆனால் ஒருவர் கூட அவனுடன் வர விரும்பவில்லை.காரணம் அவர்களுக்கும் பயம்தான்.ராமு தனியாக கிளம்பிவிட்டான். அந்த இருட்டு அவனை பயமுறுத்த தொடங்கிவிட்டது.மனதை தைரியப்படுத்திக்கொண்டு எல்லா கடவுளையும் கும்பிட்டுக்கொண்டு நடந்தான்
அரை கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்பான் எதிரில் அவன் அப்பா, அம்மா வருவதை பார்த்தவுடந்தான் இவனுக்கு நிம்மதி வந்தது. திடீரென்று ஒரு கூட்டம் அவன் அப்பா அம்மாவை சுற்றி நின்று கத்தியை காட்டி மிரட்டுவதை பார்த்தான். இங்கிருந்து சத்தம் போட வாயை திறக்க முயற்சி செய்தான், அதற்குள் அவன் வாயை யாரோ பொத்தினர்.
பயந்து மிரண்டு திரும்பி பார்க்க சோமு ஸ்..ஸ்.சத்தம் போடாத இப்ப என் கூட வா என்று அவனை சைகை காட்டி அழைத்து ஒரு புதர் பக்கம் சென்றவன் கை நிறைய கற்களை எடுத்துக்கொள்ள சொல்லி சைகை செய்தவன் விரு விருவென பதருக்குள் சென்றான், ராமுவும் கூடவே புதருக்குள் சென்றான், அங்கிருந்து சுற்றி நின்றவர்களை நோக்கி குறி பார்த்து கல்லை எறிய ஆரம்பித்தனர்.
சுற்றி நின்று அவர்களை மிரட்டிக்கொண்டிருந்த கொள்ளையர்கள் மேல் கற்கள் வந்து தாக்கியதும் பயந்து விட்டனர்.அந்த இடத்தை விட்டு பயந்து ஓடத்தொடங்கினர்.பத்து நிமிடங்கள் அப்படியே கழிந்த்தும், சோமு, ராமுவை சைகை காண்பித்து வெளியே வரச்சொன்னான். ராமுவின் அப்பா, அம்மவுக்கு இவர்கள் இருவரையும் பார்த்த்தும் மிகுந்த சந்தோசம்.பரவாயில்லை, புத்திசாலித்தனமாக செயல்பட்டீர்கள், இருந்தாலும் இந்த நேரத்தில் இப்படி வருவது ஆபத்துதான் என்றார்.
உடனே சோமு நீங்கள் கூட இந்நேரத்துக்கு வரவேண்டுமா?, இரவு அங்கேயே தங்கி வந்திருக்கலாம் அல்லவா என்று கேட்டான். உண்மைதான், தவறு செய்து விட்டேன், இது எனக்கு நல்ல படிப்பினை என்றவர் வாருங்கள் போகலாம் என்று அழைத்து சென்றார்.
ராமு சோமுவின் கைகளை பிடித்துக்கொண்டு என்னை மன்னித்து விடு, நீ எப்படி என் பின்னால் வந்தாய் என்று கேட்டான். நீ வழித்துணைக்கு எல்லாரையும் கூப்பிட்டதை பார்த்தேன்.ஆனால் என்னைக்கூப்பிடவில்லை, இருந்தாலும் நீ தனியாக போகதுணிந்துவிட்டதால் உனக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று பின்னாலேயே வந்தேன் என்றான்.நண்பனின் கைகளை நன்றியுடன் பிடித்துக்கொண்டான் ராமு.
இப்பொழுதெல்லாம் ராமுவும் சோமுவும் ஒன்றாக பள்ளிக்கு செல்கிறார்கள், ராமு சோமுவை கிண்டல் செய்வதை விட்டு விட்டான். அவனை பொருத்தவரை ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் என்பதை புரிந்து கொண்டான்.
(எல்லோரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும், ஆகவே யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.)
|