LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 542 - அரசியல்

Next Kural >

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.
தேவநேயப் பாவாணர் உரை:
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் . நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல் . வானால் நீரும் உணவும் கிடைப்பது போல் , செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும் , பொருட்காப்பும் கிட்டுவதால் , வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் , செங்கோலின்றி வானிருந்தும் பயனில்லை யென்பதும் , பெறப்படும் . உலகு , கோல் என்பன ஆகுபெயர்கள் . கோலென்றது செங்கோலை. 'குடி' தொகுதிப்பெயர் . வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந்தருவதாம். "நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால் , யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே".(126) என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது .
கலைஞர் உரை:
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
Translation
All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all.
Explanation
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
Transliteration
Vaanokki Vaazhum Ulakellaam Mannavan Kol Nokki Vaazhung Kuti

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >