|
||||||||
வகுப்பறை உருவாக்கும் சமூகம் -2 : கல்வி பற்றிய புரிதல் |
||||||||
திருமதி. சசிகலா உதயகுமார், பள்ளி ஆசிரியை
சன்னதி நிதி உதவி ஆரம்பப்பள்ளி,
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்,
"இது எங்கள் வகுப்பறை" - நூலாசிரியர்.
ஒரு சமூகத்தின் நிறம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது, ஆகவே வகுப்பறையும் சமுகமும் ஒன்றுதானே என்ற கேள்வியை முன்வைத்தேன் அல்லவா?
இதைப் பற்றிய யோசனை உங்களுக்குள் சிறிதுநேரம் ஓடியிருந்தாலே எனக்கு மகிழ்ச்சிதான். தூவப்படும் விதைகள் எல்லாம் முளைத்துத் தழைத்து வளரவேண்டும் என்று இல்லை. முளைக்காத விதைகள் கூட உரமாக மாறும். அது அடுத்து விழும் விதையை தழைக்கச் செய்யும். சாதாரணமாக மனதில் விழும் கேள்விகள் தான் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. இதற்கு சிறந்த உதாரணம், அந்தப் பெயர் இப்போதே உங்கள் மனதில் பளிச்சிட்டிருக்குமே. ம்ம்ம் மிகச்சரி ..
"சர் ஐசக் நியூட்டன்"
அப்படி எழும் இன்னொரு சாதாரண கேள்வி, இத்தனை முக்கியத்துவம் மிக்க வகுப்பறையில் நடைபெறும் நிகழ்வு என்ன?
"என்ன கேள்வி இது? வகுப்பறையில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன" என்று எளிதில் பதில் சொல்லி விடலாம் .
மொழிப் பாடங்கள் - உடற்கல்வி - நல்லொழுக்கம் என்று ஒவ்வொரு பிரிவாக சொல்லிக் கொண்டே போவது வெறும் கேள்விக்கான பதிலாக மட்டுமே இருக்குமே தவிர அதனைக் கடந்து சிந்திக்கத் தோன்றாது.
பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியும் "நான் யார்?" என்பதைப் போன்றதொரு ஆழமான கேள்வி இது.
சரி
இப்போது "வகுப்பறையினுள் என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறது?" என்பதை சற்று உள்ளார்ந்து பார்க்க ஆரம்பிபோம் .
நம் புரிதலின் வசதிக்காக இதற்கான விடையை, "வகுப்பறையில் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது" என்று சுருக்கமாக வடிவமைத்துக்கொள்வோம். அப்போது "கல்வி" என்னும் ஒற்றை வார்த்தை நமக்குக் கிடைக்கிறது.
"கல்வி என்றால் என்ன?"
இது முதலில் புரிய ஆரம்பித்தால் அடுத்தடுத்த விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தானாகவெ நம் புரிதலினுள் சேர்ந்துகொள்ளும். "கல்வி" என்னும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று முதலில் பார்ப்போம்.
"The process of receiving or giving systematic instruction " என்று ஆங்கில அகராதி சொல்கிறது.
""முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளை (ஆணைகளை) அல்லது விதிமுறைகளைக் கொடுக்கும் - பெற்றுக்கொள்ளும் செயல்பாடு (நடைமுறை) " . இதை நம் 'இந்திய' வசதிக்காக இப்படி சொல்லிக்கொள்ளலாம் "அந்தந்த வகுப்புக்கென கொடுக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் பக்கங்களை ஒன்றொன்றாக விளக்கிச் சொல்லி அந்த வருட இறுதியில் அந்தப் பக்கங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத மாணவர்களைத் தயார் செய்வது". இன்னும் சுருக்கி "சிலபஸ் கவர்பண்றது - ரிவைஸ் பண்ணி - எக்ஸாமுக்கு ப்ரிப்பேர் பண்றது " என்ற தற்காலத் தூய தமிழில் சொல்வது சரியாக இருக்கும் அல்லவா?
இப்படித்தானே ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் இன்று நம் தாய்மொழியைப் பேசிப் பழகி இருக்கிறோம்? அதேபோலத்தான் "கல்வி" என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம்.
"Intelligence plus character-that is the goal of true education." என்கிறார் சிந்தனையாளரும் புரட்சியாளருமான மார்ட்டின் லூதர் கிங் இந்த வாக்கியத்தை இப்படி விரித்துப் பொருள் கொள்ளலாம் .
"அறிவுத் திறன் , கூர்மதி , நன்நடத்தை, இவைகளை ஒரு மாணவனுக்குள்ளே கொண்டு வருவதுதான் "கல்வி" எனும் வார்த்தையின் நோக்கம் - உள்ளார்ந்த பொருள்." .இன்றைய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பொதுவான கல்வி பற்றிய புரிதல் என்னவென்றால், பாடங்களைப் படித்து மனப்பாடம் செய்து பரிட்சை எழுதும் செயல் மட்டுமே ஒரு மாணவனின் தனிப்பட்ட நடத்தையைச் செம்மைப் படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
(இதில் விதி விலக்குகள் உண்டு , அது விகிதாச்சாரத்தில் மிகமிகக் குறைவு )
அது அவனின் மனப்பாடத் திறனை அதிகப்படுத்தலாம். ஓரிடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் வேலை செய்யும் தன்மையைக் கொடுக்கலாம். இதனால் யாருக்கு லாபம்? இவனின் படிப்பையும் வேலைத் திறனையும் சேர்த்து தனது தொழில் நிறுவனத்தில் ஒரு பணி செய்யும் இயந்திரமாக இவனைப் பயன்படுத்திக்கொள்ளும் யாரோ ஒரு முதலாளிக்கு லாபம். அதற்காக இவன் பெறும் கூலி மட்டுமே இவனுக்கு லாபம் - கௌரவம் - அந்தஸ்து. இப்படித்தான் இன்றைய மாணவ மாணவியரின் "நல்ல பெயர்" நிர்ணயிக்கப்படுகிறது.
சம்பளத்தை வைத்தே கல்யாணம் முதல் கல்லறை வரை பேரம் பேசப்படுகிறது. இத்தகைய உழைக்கும் மனித இயந்திரங்களைத் தான் இன்றைய வகுப்பறைகள் உற்பத்தி செய்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.
சிறந்த மனித இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் "சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினைப்" பெற அதன் வாசலில் இரவு பகலாக பெற்றோர்கள் காத்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எப்படியோ கடன் வாங்கி - அடமானம் வைத்து எந்தெந்த வழியிலோ கஷ்டப்பட்டு அதிக டொனேஷன் கொடுத்து தன் குழந்தையை சேர்த்த பின் , அங்கு தன் குழந்தை படிப்பதையே வெளியில் ஒரு கௌரவமாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். "ஓ கிரேட்" என்று அதையும் வாய்பிளந்து மற்றவர்கள் அங்கிகரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு சமூகம் எண்பதுகளில் ஆரம்பித்து பலுகிப் பெருகியது. அதன் விளைவு இயந்திரத்தனமான கல்வியை வகுப்பறையில் கற்ற அந்தத் தலைமுறையினரில் பெரும் சதவிகிதம் இன்று கோர்ட்டுப் படிகளில் அதிகம் ஏறி இறங்குகிறார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள் - பதின் வயதுக் கொலைகள் - பாலியல் வன்முறைகள் - ஆணவக் கொலைகள் - சிறுவர் குற்றங்கள் இவைகளைக் கணெக்கெடுத்துப் பாருங்கள். இதைத்தான் இந்த வகுப்பறைகள் உற்பத்தி செய்கின்றன என்றால், எங்கே கோளாரு என்பதை எளிதில் உணர முடியும்.
இது "கல்வி" என்பதனைப் பற்றிய ஒட்டுமொத்தப் புரிதலில் ஏற்பட்டுள்ள சிக்கல். இது ஒரு வகை நோய் , பார்வைக் குறைபாடு. ஒன்றைத் தவறாகப் புரிந்துகொள்வதை விட, அதை மொத்தமாகப் புரிந்துகொள்ள இயலாமல் அறிவிலியாக இருப்பது எவ்வளவோ மேலானது. இத்தகைய சூழலில் , கல்வியின் முக்கிய நோக்கமான "அறிவுத்திறன் - கூர்மதி - நன்நடத்தை" இம்மூன்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வகுப்பறை சாத்தியமா?
--- தொடரும்
|
||||||||
by Swathi on 07 Apr 2018 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|