|
||||||||
வகுப்பறை உருவாக்கும் சமூகம் -3 : நினைப்பதும்-நடப்பதும் |
||||||||
திருமதி. சசிகலா உதயகுமார், பள்ளி ஆசிரியை
சன்னதி நிதி உதவி ஆரம்பப்பள்ளி,
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்,
"இது எங்கள் வகுப்பறை" - நூலாசிரியர்.
கல்வி பற்றிய புரிதலின் முதல் கட்டம் கல்வி என்பது எத்தகையது என்பதை சற்று உள்ளார்ந்து நோக்குதல் தான். "கல்வி" educational system என்றெல்லாம் மேலோட்டமாக இதை ஒரு சொல்லாடலாக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் உள்ளார்ந்த பொருளைத் தெரிந்து கொள்வதற்கு கொஞ்சம் ஆழ்ந்து பயணிக்கவேண்டியுள்ளது. கல்வி என்னும் ஒரு முழுச் செயல்பாடு இரு செயல் வடிவங்களைக் கொண்டது. அவை "கற்றுக்கொடுத்தல் - கற்றுக்கொள்ளுதல்" . இந்தப் பரிமாற்றம் நடைபெறும் இடம் வகுப்பறை. இந்தச் செயல்வடிங்கள் இரண்டும் சரி விகிதத்தில் கலப்பதன் மூலம் வெளிவருவது தான் சரியான முழுமையான கல்வி. அந்தப் பொறுப்பு ஆசிரியர் மாணவர்கள் இருவருக்கும் உண்டு என்றாலும் இங்கே ஆசிரியரின் பங்கு 80% சரியாக இருக்கும் பட்சத்தில் மாணவரின் 20% தானாக வந்து சேர்ந்துவிடும். இது சற்று சூட்சுமமான இடம். இங்கே ஏற்படும் சிறு பிழை அந்த மாணவனின் ஒட்டுமொத்த புரிதலையும் வாழ்க்கையையும் மாற்றிவிடும். எனவே "கற்பித்தல்" என்னும் செயல்வடிவமே "கற்றல்" என்னும் இன்னொரு வடிவத்தை இயக்குகிறது. "Learning is a treasure that will follow its owner everywhere." என்றொரு சீனப் பழமொழி உண்டு. "கற்றுக்கொள்ளுதல் என்னும் விலைமதிப்பில்லாப் பொருள், தன் எசமானன் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்தபடியே இருக்கும் "
நம்மில் பலருக்கும் தெரிந்த பௌத்த கதை ஒன்று: தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த பௌத்த குரு , அவரின் சிஷ்யர்களில் மிகமிக இளமையான புத்த பிட்சு ஒருவரை அந்த மடாலயத்தின் அடுத்த குருவாக நியமிக்கிறார். "நேற்று வந்தவனுக்கு வாழ்வைப் பார்" என்று அங்கிருக்கும் மூத்த பிட்சுகள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். குரு தவறான முடிவை எடுத்துவிட்டார் என்று பேச ஆரம்பித்தனர். அடுத்த சில வாரங்களில் இந்த இளம் புது பௌத்த குருவின் தலைமையில் குழுவாகக் கிளம்பி பக்கத்து நாட்டிற்கு சென்றனர். அந்தக் காலத்தில் நடைதான் வாகனம். செல்லும் வழியில் ஊர் ஊராகப் பிரசங்கித்துக் கொண்டே செல்வது புத்த பிட்சுகளின் வழக்கம் அவ்வாறு நடந்து சென்று கொண்டிருந்தபோது குறுக்கே ஒரு ஆற்றை நீந்திக் கடக்க வேண்டிய சூழல். எல்லோரும் தயாராக இறங்க ஆரம்பிக்கும்போது அங்கே ஒரு அழகிய இளம் பெண் வருகிறாள். வந்தவள் இந்தத் துறவிகளிடம் "ஐயா வழக்கமாக நடந்து கடக்கும் அளவுதான் இதில் நீர் இருக்கும், இன்றோ காட்டாற்று வெள்ளமாகக் கரை புரண்டு ஓடுகிறது, தயவு செய்து என்னை இந்த ஆற்றைக் கடக்க உதவுங்கள்" என்று கெஞ்சுகிறாள். இவர்களோ துறவிகள். எல்லோரும் தயங்கி நிற்கும்போது புதிதாக தலைமை குருவாக நியமிக்கப்பட்ட இளம் துறவி அவளிடம் "என் தோள்களில் ஏறி அமர்ந்துகொள்" என்கிறார். அவளும் அப்படியே செய்ய, அவளைச் சுமந்தபடி ஆற்றை நீந்திக் கடந்து மறு கரையில் இறக்கி விடுகிறார். "நன்றி ஐயா" என்று வணங்கிவிட்டு அவள் சென்று விடுகிறாள். "ஒரு பௌத்த குரு எப்படி பெண்ணைத் தொடலாம்" என்று உடன் வந்த மற்ற துறவிகளுக்கோ பெரும் அதிர்ச்சி. ஆனால் கேட்பதற்குத் தயக்கம். இப்படியெ இரண்டு நாட்கள் நடை தொடருகிறது. மூன்றாம் நாள் இரவில் எல்லாத் துறவிகளும் கூடிப் பேசி "நாளை இதை குருவிடம் கேட்டுவிட வேண்டும்" என்ற முடிவுக்கு வருகின்றனர். மறுநாள் காலை வழக்கமாக நீராடி, தியானித்து முடித்துக் கிளம்ப ஆரம்பிக்கும்போது, அந்தக் குழுவில் இருந்த மூத்த துறவி "குருவே அன்று அந்தப் பெண்ணை உங்கள் தோளில் சுமந்து ஆற்றைக் கடந்தீர்கள், ஒரு புத்த குரு பெண்ணைத் தொடலாமா? இது நம் மத சட்டத்திற்கு எதிரானதல்லவா?" என்று கேட்கிறார். அந்த இளம் பௌத்த துறவி மென்மையான புன்னகையுடன் "நான் அவளை அந்தக் கரையிலேயே இறக்கிவிட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஏன் மூன்று நாட்களாக அவளைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அவர்களின் முந்தைய குரு ஏன் இந்த இளம் துறவியை குருவாக நியமித்தார் என்பதை அப்போதுதான் மற்ற துறவிகள் உணரத் தொடங்கினர். "மனத்தூய்மை மற்றும் - எப்போதும் நல்ல சிந்தனைகளைச் சுமத்தல்" என்னும் நல்லொழுக்கத்திற்காகச் சொல்லப்படும் இந்தக் கதை "கல்வி" என்பது என்ன என்பதையும் மிக ஆழமாகச் சொல்கிறதை நாம் காணலாம். அதே குரு தான் எல்லோரையும் பலகாலமாக வழிநடத்திக் கற்பித்தார். ஆனால் அவர்களில் இந்த ஒரு இளம் துறவியை மட்டுமே குருவாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? கற்றுக்கொள்ளுதல் - கற்பித்தல் என்பதன் மெல்லிய சூட்சுமன் இதுதான். எதை விடுத்து எதைப் பெற்று எதைக் கொடுப்பது என்பது கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் தேவையான பொதுகுணம். அப்படியான சுமுக சூழல்தான் இங்கே நம் சமூகத்தின் வகுப்பறைகளில் நிகழ்கிறதா? பாடங்களை மட்டுமல்ல அன்றைய சமூக நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டுதான் ஆசிரியர் கற்பிக்கிறாரா? எல்லா மாணவர்களையும் அறிவின்படி ஏற்றத்தாழ்வில்லாமல் நடத்துகிறாரா? இதற்கான விடை "பெரும்பாலான இடங்களில் அப்படி இல்லை" என்பது தான். நிதர்சனம் சில சமயங்களில் வலிமிக்கதாகவே இருக்கிறது. இன்றும் சில பள்ளிகளில் ஏற்றத்தாழ்வுடன் தான் மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. சாதியின் அடிப்படையில், சமூக மரியாதையின் அடிப்படையில் இன்றும் மாணவர்களை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள் என்பது வேதனை மிக்க ஒன்று. "இப்போவெல்லாம் அப்படி யார் பார்க்கிறார்கள்?" என்று இதைப் படிக்கும் வாசகர்கள் யோசிக்கலாம். கற்றல் கற்பித்தல் என்பதற்கும் இந்தப் பாகுபாடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் எண்ணலாம். நிச்சயம் சம்பந்தம் உண்டு. ஒரு நல்ல குருவின் தன்மை என்ன தெரியுமா? பார்வை பரந்துபட்டும் சமமாகவும் இருக்கவேண்டும். நான் முதலில் குறிப்பிட்ட பௌத்த கதையில், இறந்த அந்த குருவின் பார்வையை சற்று சிந்தியுங்கள். ஆசிரியரின் சமத்துவமான மாச்சர்யமற்ற பார்வையும் ஒப்பில்லாத அன்பும்தான் வகுப்பறை என்பதன் அடித்தளமே. அந்த அடித்தளத்தில் கட்டப்பட்ட அறையில் இருந்துதான் அந்த சமூகத்தின் சாளரம் திறக்கப்படுகிறது. ஆசிரியர் என்பவரின் பங்களிப்பு இதிலிருந்து தான் தொடங்குகிறது. ஆசிரியர்கள் மட்டும்தானா ?
|
||||||||
by Swathi on 18 Apr 2018 4 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|