|
|||||
'வைரமுத்தியம்' - கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கியம் குறித்து பன்னாட்டுக் கருத்தரங்கம் |
|||||
![]() சென்னையில் 'வைரமுத்தியம்' என்ற பெயரிலான கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கியப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஞாயிறன்று நடைபெற்றது.
வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டுக் கருத்தரங்க கட்டுரை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை எம்பி ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.
பிறகு இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
" இது கவிப்பேரரசுக்கு பெருமை சேர்க்கும் விழா மட்டுமில்லை. தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும், இலக்கியத்துக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக இது அமைந்துள்ளது. மொத்தத்தில் வைரமுத்துவை பாராட்ட உலகமே திரண்டு வந்துள்ள உலகளாவிய இலக்கியத் திருவிழா. இந்த இலக்கியத் திருவிழாவில் பங்கெடுப்பதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாகக் கலைஞர் தான் நடுநாயகமாக இருந்து வைரமுத்துவின் விழாவை நடத்துவார். வைரமுத்து எழுதிய 17 நூல்களை வெளியிட்ட கைகள் கலைஞரின் கைகள். இது அவர்கள் 2 பேருக்கும் இடையே இருக்கும் நட்பின் அடையாளம். முதல் முதலாக 1989ம் ஆண்டில் 'எல்லா நதிகளும் என் ஓடம்' என்ற புத்தகத்தைக் கலைஞரை வைத்து வெளியிட்டார்.
வைரமுத்து, கலைஞரைத் தனது ஆசான் என்றும், இலக்கியத் தந்தை என்றும் அழைப்பார்கள். ஒருமுறை கவிஞர் தந்த புத்தகத்தில் எழுதியிருந்ததைக் கலைஞர் மேடையில் வாசித்துக் காண்பித்தார். 'என் இலக்கியத் தந்தை கலைஞர் அவர்களே, பாண்டிய நாட்டில் கரட்டுக் காட்டில் காலம் என்னை விதையாய் துப்பியது. சோழ நாட்டு மேகமே நீங்கள் சொறிந்த மழையில் தான் விதைக்குள் இருந்து விருட்சம் வந்தது. இந்த விருட்சம் இன்று உங்களை வணங்குகிறது. உங்களின் இலக்கிய மகன் வைரமுத்து' என்று கையெழுத்திட்டுக் கொடுத்து இருந்தார்.
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலையும், மகா கவிதை நூலையும் வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு தமிழ் கவி உலக கவியாக மாறும் நூல் தான் மகா கவிதை. அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது இன்று நிறைவேறி இருக்கிறது. பல்வேறு நாட்டுக் கவிஞர்கள் வந்து பாராட்டுவதைப் பார்க்கும்போது உலக கவிஞராக வைரமுத்து மாறிவிட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது. அறிஞர்கள், புலவர்கள் பாராட்டும் கவிஞராக வைரமுத்து உள்ளார்.
இதை முன்கூட்டி உணர்ந்து தான் 1999ம் ஆண்டில் "பெய்யெனப் பெய்யும் மழை" கவிதை நூலின் வெளியீட்டு விழாவில் சான்றோர்கள் இருக்கும் அவையில் வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு என்ற பட்டத்தைக் கலைஞர் வழங்கினார். அவருடைய படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு 'வைரமுத்தியம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
முனைவர் மறைமலை இலக்குவனார் மொழிபெயர்த்த நூலை நமது மதிப்புக்குரிய முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டிருக்கிறார். பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாழ்த்தியதைப் பார்க்கும்போது உலகக் கவியாக மகுடம் சூட்டப்பட்டுவிட்டார் நம்முடைய வைரமுத்து என்றே சொல்லத் தோன்றுகிறது. திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். வைரமுத்து திறமான புலமையாளர் என்பதன் அடையாளம்தான் இன்றைக்கு அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து பாராட்டுவது.
எல்லோரும் வயதான பிறகு வாழ்க்கை வரலாற்றை எழுதுவார்கள். ஆனால், 28 வயதிலேயே ‘இதுவரை நான்’ என்ற தன்வரலாற்று நூலை எழுதும் அளவுக்கு அப்போதே புகழடைந்துவிட்டார் நம்முடைய வைரமுத்து. 1983-ஆம் ஆண்டு அந்த நூலை வெளியிட்டார். வைரமுத்து கவிப்பேரரசாக ஏன் வளர முடிந்தது என்பதற்கான முழுக்கதையும் அதில்தான் இருக்கிறது. பிற்காலத்தில் கிடைத்த வெற்றிக்கும் புகழுக்கும் பின்னால் இருக்கும் அனுபவம்தான் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணம் என்பதை நீங்களெல்லாம் அறியலாம்.
என் பாதங்களுக்குக் கீழே பூக்கள் இல்லை. மொய்த்துக் கிடந்தவை முட்களே. எனினும், ரத்தம் துடைத்து நடந்து வந்தேன் என்ற வரலாறுதான் அவரை இந்தளவுக்குக் கவிஞராய் படைப்பாளியாய் ஆக்கியிருக்கிறது. நாவல், சிறுகதை பாடல், வரலாறு, தன்வரலாறு, பயணக் கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை திரைக்கதை, திரை வசனம் என்று இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் நுழைந்து வெற்றி முத்தை எடுத்து வந்தவர் தான் நம்முடைய வைரமுத்து.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசியவிருதை ஏழு முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இவராகத்தான் இருப்பார். தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். 39 நூல்கள் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதைகளும் நாவல்களும் இதுவரை 26 இலட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கிறது. சாகித்திய அகாடமி விருது (2003) பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் இந்தியாவின் 22 மொழிகளில் சாகித்திய அகாடமியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ , பத்ம பூஷண், சாதனா சம்மான் போன்ற விருதுகளைப் பெற்றவர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மூன்று அரசுப் பல்கலைக் கழகங்களின் பெற்றிருக்கிறார். கௌரவ டாக்டர் பட்டங்களையும்
இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். அறுபதுக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம்.
இது எல்லாம் சாதாரணமாகக் கிடைத்ததல்ல. அவரது தமிழுக்கும் சொல்லும் திறத்துக்கும் சொல்லுக்குள் இருக்கும் கருத்துக்கும் கிடைத்த மகுடங்கள்.
இந்தப் புகழையும், பெருமையையும் மூன்று தலைமுறைகளாகத் தக்க வைத்திருப்பதுதான் பெரும் சாதனை. ஒரு படத்தோடு காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள். 5 புத்தகங்களோடு முடிந்தவர்கள் கதையும் இருக்கிறது. ஆனால், 50 ஆண்டுகளாக இலக்கிய உலகத்தில் இடைவிடாமல் பயணித்துக்கொண்டு இருக்கிறார் நம்முடைய வைரமுத்து. மூன்று தலைமுறை படைப்பாளிகளோடு, மூன்று தலைமுறை இயக்குநர்களோடு, மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களோடு, மூன்று தலைமுறை இளைஞர்களோடு இயங்கிக்கொண்டு இருக்கிறார். இன்னும் பல தலைமுறைகளோடும் அவர் பயணிப்பார். அப்படி ஒரு ஆற்றல் அவரது மொழிக்கு உண்டு.
ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு கருத்துக்கு அடிப்படையாக வைத்துப் படைத்திருக்கிறார். புலம்பெயர் மக்களின் வாழ்வியல் வலியை உணர்த்துகிறது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ ஆணாதிக்கச் சமுதாயத்தில் சுரண்டப்படும் ஓர் உழைக்கும் பெண்ணின் போராட்டம் ‘கருவாச்சி காவியம்’,
புவிவெப்பமாதல் என்னும் உலகத் துயரத்தில் இந்திய விவசாயி படும் இம்சையைச் சொல்லி, அதற்குத் தீர்வையும் சொல்லும் ‘மூன்றாம் உலகப்போர்’,
மரணத்தின் விளிம்பில் கூட நம்பிக்கையை முன்வைத்து வாழ்வின் பெருமை பேசும் ‘தண்ணீர் தேசம்’, நிலம், நீர், காற்று, தீ, வெளி என்ற ஐம்பூதங்கள் பற்றிய ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பான மகா கவிதை.
இப்படித் தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு விதமாகப் படைத்தவர் நம்முடைய வைரமுத்து. அதனால்தான் கவிப்பேரரசாக அவர் உயர்ந்து நிற்கிறார். மரபையும் புதுமையையும் இணைத்ததுதான் நம்முடைய வைரமுத்துவின் சாதனை. சங்க இலக்கியத்தையும் சந்தை இலக்கியத்தையும் பிணைத்தவர் அவர். கலையையும், அரசியலையும் சேர்த்தவர் அவர். திரையையும் இலக்கியத்தையும் குழைத்தவர் அவர். தமிழை உலகத்தோடு கொண்டுசென்று புகுத்தியவர். இதன் மூலமாக, மக்கள் நெஞ்சங்களில் நிறைந்தவர். அவர் நூலைப் படிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், அவர் பாட்டைக் கேட்காத செவிகள் நிச்சயமாக இருக்க முடியாது.
என் வானம் பெரிது என் வேள்வி பெரிது என் தமிழ் பெரிது என் தவம் பெரிது என் தோள்களில் கனக்கும் இலட்சியத்தோடு வந்தேன் என்று சொல்லி அதே இலட்சியத்திற்காக வாழ்பவர் வைரமுத்து. தமிழ்ப் பண்பாட்டு மரபைப் பொதுவுடைமைக் குறிக்கோளைத் திராவிடச் சிந்தனை மரபைக் கொண்டவராகத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதுதான் வைரமுத்துவின் தனித்த சிறப்பு . திரைத்துறையில் வளர்ந்த பிறகு உயர்ந்தபிறகு தேசிய விருதுகளைப் பெற்ற பிறகும் தன்னை திராவிட இயக்கப் படைப்பாளியாக மறக்காமல் மறைக்காமல் அவர் காட்டிக்கொண்டதை பாராட்டுவதற்குத்தான் நான் வந்தேன்.
என் இளமைக் காலத்திலேயே, தீ வளர்த்துக் கொண்டிருந்த திராவிட யாகத்தில் எனது அடுப்புக்கு நெருப்பு எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும் துணிச்சல் வைரமுத்துக்கு இருந்தது. பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனையும் புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகளும் அண்ணாவின் எழுத்தும் தன்னை வார்ப்பித்ததாக அவர் சொல்லி இருக்கிறார். கருணாநிதியின் எழுத்துகளே என் ரத்தத்தைத் துள்ள வைத்திருக்கின்றன. என் நாடி நரம்புகளை வீணையாக்கி வாசித்திருக்கின்றன என்று எல்லா மேடைகளிலும் சொன்னவர் அவர். இந்தக் கொள்கை உரம்தான் அவரை கவனிக்க வைத்தது.
தமிழுக்குப் பெருமை சேர்த்ததால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் திராவிடக் கொள்கைகளுக்கு வலுச்சேர்த்ததால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற வகையிலும் கருணாநிதியை இலக்கிய ஆசானாக ஏற்றுக் கொண்டதால் அவரின் மகன் என்ற பாச உணர்வாலும் நான் விரும்பிக்கேட்கும் பல பாடல்களைத் தந்தவர் என்பதால் ஒரு ரசிகன் என்ற மகிழ்ச்சியிலும் வைரமுத்துவை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். பொதுவாக 100 ஆண்டு வாழுங்கள்! என்று வாழ்த்துவார்கள். ஆனால், இங்கு இருக்கக்கூடிய நீங்கள் எல்லோரும் வாழ்த்துவதுபோல் நானும். நீங்கள் படைப்பாளி என்பதால், 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்து, உங்கள் பாடல்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகட்டும். படைத்த நூல்களின் எண்ணிக்கை 100 ஆகட்டும் என்று வாழ்த்துகிறேன்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைத்தார், வைரமுத்துவின் கவிதை, நாவல்கள், கட்டுரை, பாடல்கள் குறித்து தனித்தனியாக அரங்குகள் நடந்தன. பல்வேறு அறிஞர்கள் இந்த அரங்குகளில் உரையாற்றினார்கள்.
|
|||||
by hemavathi on 16 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|